Friday, April 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 427

யுகள கீதம் (3)

கழுத்தில் நறுமணம் கமழும் துளசிமாலையும், மணிமாலைகளும், அந்த மணிகளால் பசுக்களை எண்ணிக் கணக்கு வைத்துக் கொண்டும், நடை பயில்கிறான் கண்ணன். தன் தோழனின் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டு ஒயிலாக நின்று குயிலும் மயங்குமாறு குழலிசை படிக்கிறான். அந்த கானத்தினால் ஈர்க்கப்பட்ட பெண்மான்கள் தங்கள் இணையை மறந்து கோபிகளைப் போலவே வீட்டைப் பற்றிய எண்ணமின்றி கண்ணனைச் சுற்றி சுற்றி வந்தன.

அங்கு நின்றுகொண்டிருந்த யசோதையை அழைத்து ஒரு கோபி சொன்னாள். உன் குழந்தையான கண்ணன் தன்னைக் காட்டு மலர்களால் அலங்காரம் செய்துகொண்டு பசுக்களுடனும், கோபச் சிறுவர்களுடனும் சேர்ந்து யமுனையில் இறங்கி விளையாடுகிறான். அவன் மனம் விரும்பியபடி இதமாகத் தென்றல் வீசி அவனை மகிழ்விக்கிறது. கந்தர்வர்களும், துதி பாடகர்களும் வானில் நின்றுகொண்டு வாத்யங்களை முழங்கிக்கொண்டு பாடுகின்றனர். 

கோவர்தன மலையை ஏழுநாள்கள் தாங்கிய பின்பு அதை முன்போல் வைத்துவிட்டு வீடு திரும்பினான் கண்ணன். வரும் வழியில் நடைக் களைப்பு தெரியாமல் இருக்க குழலூதினான். அப்போது எல்லா தேவர்களும் கண்ணன் வரும் வழியில் விழுந்து வணங்கினர்.

ஏழுநாள்கள் அயராது நின்றதில் உடல் களைத்துப்போயிருந்தாலும், தன் அழகால் பார்ப்பவர்க்குப்  பெருவிருந்து படைக்கிறான் கண்ணன். மாடுகளின் குளம்படிகளால் கிளம்பிய புழுதி அவனது உடல்‌முழுதும் அப்பிக் கிடக்கிறது. அனைவரையும் காத்த பேருவகையில் துள்ளலுடன் நடந்து வருகிறான்.

பார்வையாலேயே ஒவ்வொரு நண்பனையும் உற்சாகப்படுத்துகிறான் கண்ணன். பழுத்த இலந்தைப் பழம்போல் கறுத்துச் சிவந்த முகம், தங்கக் குண்டலங்களின் ஒளி, கன்னங்களில் விளையாடுகிறது. கம்பீரமான நடை, மலர்ந்த புன்முறுவல் சிந்தும் திருமுகம் கொண்ட கண்ணன், மாலையில் உதிக்கும்‌ சந்திரனைப்போல் காட்டிலிருந்து திரும்பும் அழகைப் பாருங்கள்.

என்று கோபிகள் தினமும் பகற்பொழுது முழுவதும் கண்ணனின் புகழைப் பாடி பாடிக் கழித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment