Thursday, November 29, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 158 ரித்விக்குகள் பெற்ற வரம்

ஸ்ரீ சுகர் பரிக்ஷித்தைப் பார்த்துக் கூறினார்.

ஹே அரசனே! நாபி மன்னன் செய்த யாகத்தில் தோன்றிய பகவானைப் பார்த்து ரித்விக்குகள் துதி செய்தனர்.

இறைவா! நாங்கள் தங்கள் கட்டளைகளைச் சிரமேல் தாங்கும் அடியவர்கள். தங்களைத் திரும்ப திரும்ப பூஜிக்கிறோம். ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் எட்டாதவர் தாங்கள். மாயையின் அதிபதி. மாயைக்காட்பட்டவர்களால் தங்களது குணங்களை எப்படிப்‌ புரிந்துகொள்ள முடியும்?

தங்களது மேன்மையை எவ்வளவு வர்ணித்தாலும் அது மலையின் ஒரு சிறுதுளியைச் சொன்னதுபோல் ஆகும்.

நீங்கள் மிகவும் பெரியவர். ஆனால், மிகவும் எளிமையான தண்ணீர், இளம் தளிர், துளசி, அருகம்புல், தானிய முளைகள், கோதுமை இவற்றைக் கொண்டு பூஜித்தால் மகிழ்கிறீர்கள்.

தங்கள் மேல் அன்பு மிகுந்து காதலாகிக் கசிந்துருகுவதைத் தவிர வேறு பூஜைகளால் தங்களை மகிழ்விக்க இயலாது.

தங்களிடமிருந்து ஆனந்தம் இடைவிடாமல் பெருகிக்கொண்டிருக்கிறது.

அறிவிலிகளை ஆட்கொள்ள அறிஞர்கள் அழைக்காமலேயே அவர்களிடம் சென்று வேண்டியவற்றைச் செய்கிறார்கள். அதுபோல், நன்மை எது தீமை எதுவென்றறியாத எங்களுக்காக கருணையுள்ளத்தோடு வந்திருக்கிறீர்கள்.

ராஜரிஷியான நாபியின் வேள்வியில் எங்களுக்கும் காட்சி அளிக்கிறீர்கள். தங்கள் தரிசனத்தாலேயே எங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிட்டன. இருப்பினும் தங்களிடம்‌ ஒரு வரம் வேண்டுகிறோம்.
அறியாமல் இடறிவிழுதல், மயங்கிவிழுதல், தும்முதல், கொட்டாவி விடுதல், துன்பம்‌ நேரும்‌ சமயம், நோய்வாய்ப்படும் சமயம், மரணத் தருவாய் ஆகிய நேரங்களில் எங்களால் தங்களை அழைக்க முடியாமல்‌ போகக்கூடும்.

அப்போதும் பாவங்கள் போக்கும் தங்கள் திருநாமங்களான, க்ருஷ்ணா, கோவிந்தா, அச்சுதா, முகுந்தா போன்றவற்றை எங்கள் வாயால் எப்படியாவது உச்சரிக்குமாறு நீங்கள் செய்யவேண்டும்.

மேலும், தாங்கள் ஸர்வேஸ்வரன். விண்ணுலக இன்பமோ, முக்தியோ எது வேண்டுமானாலும் அளிப்பவர். மிகப்பெரிய வள்ளலிடம் பரம ஏழை ஒருவன் தவிடு கேட்டானாம்.
அதுபோல், அனைத்தும்‌ வழங்கத் தயாராக இருக்கும்‌ உங்களிடம் இந்த ராஜரிஷி நாபி ஒரு பிள்ளைவரம் வேண்டுகிறான்.

இவன் பெரியோர்களின் திருவடிகளுக்கு ஸேவை புரிபவன். தோல்வியற்றவன். மாயை கூட இவனது அறிவைக் கலக்க முடியாது.
எல்லாம் வல்ல தங்களிடம் பிள்ளைவரம் வேண்டுவது தவறுதான். இருப்பினும் உதார குணத்துடன் அதனைப் பொறுத்து தங்களைப் போலவே ஒரு புத்திரனை இந்த நாபிக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். என்றனர்.

கலகலவெனச் சிரித்தார் பகவான்.
இதுவா சிறிய வரம்? நீங்கள் மஹாத்மாக்கள். வாய்மையே உருவானவர்கள். என்னைப் போல் பிள்ளை வேண்டும் என்று கேட்டீர்களே. இது பெறற்கரிய வரமாயிற்றே.

எனக்கு ஒத்தார் மிக்கார் இல்லையே. இருப்பினும் அந்தணர்களான தங்கள் வாக்கு பொய்க்கக்கூடாது. எனக்குச் சமமான வேறொருவன் இல்லாததால் நானே எனது ஒரு அம்சத்துடன் இந்த நாபிக்கு புதல்வனாகப் பிறக்கிறேன். என்று கூறி மறைந்தார்.

உத்தமமான ரித்விக்குகளால் நாபிக்கு இறையே மகவாய்ப் பிறந்தது. பகவான் மேருதேவியிடத்தில் ஸத்வகுணமே வடிவானதோ என்னும்படி அழகிய திருமேனியோடு அவதாரம்‌ செய்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment