Wednesday, November 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 151 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 95

புரஞ்சனோபாக்யானம்
ப்ரசேதஸர்கள் தவம் செய்யப்போன சமயத்தில், அவர்களது தந்தை ப்ராசீனபர்ஹிஸ் கர்ம மார்கத்திலேயே ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது சபைக்கு நாரதர் வந்தார்.

நாரதரை வணங்கிப் பூஜை செய்து அவரிடம் கேட்டான் அரசன்.
மஹரிஷியே! கர்மங்களில்‌ கொண்ட தீவிர ஈடுபாட்டினால் முக்தி இன்பம்‌ பற்றி எதுவும் அறியவில்லை. நான் கர்மத்தளையினின்று விடுபட எனக்கு ஞானோபதேசம் செய்யுங்கள். என்றான்.

நாரதர், கூற ஆரம்பித்தார்.
அரசே! நீங்கள் வேள்விகளில் கொன்று குவித்த ஆயிரமாயிரம் வேள்விப் பசுக்களைப் பாருங்கள்
என்று சொல்லி, கர்ம மார்கத்தில் வைராக்யம் ஏற்படச்செய்து ப்ரும்மவித்யை உபதேசிப்பதற்காக நாரதர் யோகத்தினால் இறந்த பசுக் கூட்டங்களைக் காட்டினார்.

அவை நீங்கள் செய்த ஜீவஹிம்சைகளை நினைந்து கோபமாக தங்களது வரவை எதிர்பார்த்திருக்கின்றன. இந்தப் பசுக்கள் தங்களது இரும்பு போன்ற கொம்புகளால் தங்களைத் தாக்கப்போகின்றன. என்றார்.

உண்மையில் பகவத் அர்ப்பணமாகச் செய்யப்படும் வேள்வியில் பலியாகும் பசுக்கள் உயர்ந்த லோகங்களை அடைகின்றன. யாகங்களில் பலியிடப்படும் பசுக்களே இவ்வாறு தாங்கள் பட்ட துன்பங்களுக்காக தண்டனை அளிக்கக் காத்திருக்குமானால், தற்காலத்தில் அசைவ உணவுக்காக கோடிக்கணக்கான ஜீவராசிகள் (கோழிகள், மீன்கள், பசுக்கள், பன்றிகள், இன்னும் பல) கொல்லப்படுகின்றனவே.

உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் உண்ணாத ஜீவனே இல்லை எனலாம். அவைகளைக் கொல்பவர்கள், அதை ஆதரிப்பவர்கள், மற்றும் உண்பவர்களின் கதி என்னாகும் என்று நினைக்கவே குலை நடுங்குகிறது.

நாரதர் தொடர்ந்தார்.

இப்போது புரஞ்சனன் என்பவனின் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள் என்றார்.
புரஞ்சனன் (ஜீவன்) என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு அவிக்ஞாதன் (பெயரற்றவன், பகவான்) என்றொரு நண்பன்.

புரஞ்சனன் தான் வசிக்க ஒரு நல்ல இடத்தை தேடி பூமி‌ முழுதும் அலைந்தான். அலைந்தலைந்து இமயமலையின் தென்புறத்தில் மிக அழகிய ஒரு நகரத்தைக்‌கண்டான். அந்நகரத்தின் அழகில் மயங்கினான்.

அங்கு அலைந்து திரிந்தபோது, தற்செயலாக அங்கு வந்த பெண்ணொருத்தியைக் (புத்தி, அவித்யை) கண்டான்.

அவளுக்குப் பத்து பணியாட்கள். (பத்து புலன்கள்). ஐந்து தலை நாகம்‌ ஒன்று அவளுக்குப் பாதுகாவல். (குண்டலினி)
தேவதை போலிருந்த அவள் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு புரஞ்சனனிடம் வேண்டினாள்.
புரஞ்சனனோ ஏற்கனவே அவளது அழகில் மதிமயங்கிப் பிதற்றிக்கொண்டிருந்தான். இருவரும் திருமணம் செய்துகொண்டு நூறாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

அந்த நகரத்தில் மேற்புறம் ஏழு வாயில்கள். கீழ்ப்புறம்‌ இரண்டு வாயில்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும், வெவ்வேறு தேசங்களுக்குச் சென்று வந்தான். (ஒன்பது வாயில்கள் இவ்வுடலில் உள்ள ஒன்பது துவாரங்கள். ஒவ்வொன்றின் மூலமும் வெவ்வேறு இன்பங்கள். ஒவ்வொரு வாசல், மற்றும் தேசங்களின் பெயர்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நாம் தத்துவத்தை மட்டும் பார்க்கலாம்.)

புரஞ்சனியின் மீது அளவற்ற மோகம் கொண்ட புரஞ்சனன் வளர்ப்பு நாய்போல் அவள் சொற்படியெல்லாம் ஆடினான்.

ஒரு சமயம் வேட்டையாடச் சென்றவன், அரச தர்மத்தை மீறி, தன்னிஷ்டம் போல் மிருகங்களைக் கொன்று குவித்தான்.

மனைவியுடன் மிகுந்த இன்பத்துடன் பொழுதைப் போக்கினான். அவனது இளமை அரைநொடிபோல் கழிந்தது.
அவர்களுக்கு ஆயிரத்து நூறு புதல்வர்கள் பிறந்தனர்.

தன் புதல்வர்களுக்கும் பெண்களுக்கும் நல்ல வரன்களைப் பார்த்து திருமணம்‌ செய்து வைத்தான்.‌ புரஞ்சனனின் வம்சம் பெருகியது.
அவனோ நான் எனது என்று பாசத்தால் கட்டுண்டு தவித்தான்.

காமப்பித்து அகலாத நிலையில் அவனுக்கு மூப்பு வந்தது. அவனை ஜரையும், பயமும் தாக்கின.
அச்சமயம் அவனது மந்திரிகள் வம்சத்தினர் அனைவரும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தான்.
கந்தர்வர்களும் யவனர்களும் அவனது கோட்டையைத் தாக்கி செல்வங்களைக் கவர்ந்தனர்.

வேறு வழியின்றி விருப்பமில்லாமல் கோட்டையை விட்டு வெளியேறினான்.
யவன மன்னனின் தம்பியான ப்ரஜ்வரன் அக்கோட்டை முழுவதையும் தீக்கிரையாக்கினான்.

தன் நகரம்‌ தீக்கிரையாவது கண்டு வருந்தினான் புரஞ்சனன்.

தன் மனைவி மக்களைப் பற்றி மிகுந்த கவலை கொண்டான். பயத்தின் கடுமையான தாகுதலால் சக்தியிழந்த அவனை யவனமன்னன் பலிகடாவைப் போல் இழுத்துச் சென்றான். நகரைக் காப்பாற்றும் பாம்பும் அவனோடு சென்றது.

இப்போதும் மனைவி மக்களை நினைத்து வருந்தினானேயன்றி தன் பழைய நண்பனான அவிக்ஞாதனை நினைக்கவில்லை.

பல்வேறு மோகங்களால் அறிவிழந்த புரஞ்சனன் நெடுங்காலம் நரகத்தை அனுபவித்தான்.

பின்னர் தன் மனைவி பற்றி நினைத்துக் கொண்டே இறந்ததால் மறுபிறவியில் விதர்ப்ப மன்னனின் மகளாகப் பிறந்து வைதர்பி என்று பெயர் கொண்டான்.

அவளை மலயத்வஜன் என்ற மாவீரனான பாண்டிய மன்னனுக்கு மணமுடித்தான் விதர்பன்.

அவர்களுக்கு ஏழு புதல்வர்கள்‌ பிறந்தனர். அவர்களின் வம்சமே தென்னாட்டை ஆண்டது.

ராஜரிஷி மலயத்வஜன் வைராக்யசாலி. உரிய நேரத்தில் நாட்டை புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு வனமேகினான்.
ஸ்ரீ மன் நாராயணனை ஆராதனம் செய்ய எண்ணி திருவேங்கடமலை சென்றான். பதிவ்ரதையான வைதர்பியும் கணவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

மலயத்வஜன் பகவானை ஹ்ருதயத்தில் நிறுத்தி தூண்போல் அசையாமல் தவமியற்றினான். சமாதியில் ஒருநாள் இறைவனுடன் கலந்தான்.

உயிர் பிரிந்தபோதும் அவனது உடல் நேராக, எவ்விதமாறுதலும் இன்றி நின்றது.

தவத்திலிருந்த கணவனுக்குப் பணிவிடை செய்துவந்த விதர்பி, ஒருநாள் அவனது திருவடியைத் தொடும்போது, உயிரற்று சில்லிட்டுப்போனதை உணர்ந்து அழுதாள். பின்னர் அவனுக்கான ஈமக்கிரியைகளைச் செய்துவிட்டு சிதை மூட்டி உடன் கட்டை ஏறப்போனாள்.

அப்போது பழைய நண்பனான அவிக்ஞாதன் அங்கு வந்தான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment