Tuesday, November 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 156

ப்ரியவிரதன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஸ்வாயம்புவ மனு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் நெகிழ்ந்துபோய் ப்ரும்மாவைத் தொழுதார். ப்ரும்மா கிளம்பி ஸத்யலோகம்‌ சென்றதும், தானும் ஆசைகளை விட்டு காட்டுக்கு ஏகினார்.

ப்ரியவிரதன் எப்போதும் இறைவனின் திருவடித் தாமரைகளை நெஞ்சில் நிறுத்தி தியானித்து வந்ததால், விருப்பு வெறுப்புகள் இன்றி மிகுந்த அன்புடன் மக்களைக் காத்துவந்தான்.

விசுவகர்மா என்ற ப்ரஜாபதியின் மகளான பர்ஹிஷ்மதி என்பவளை‌ மணந்தான். அவனைப் போலவே அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பத்து பிள்ளைகளும்,‌ ஊர்ஜஸ்வதி என்ற பெண்ணும் பிறந்தனர்.

பத்து பிள்ளைகளின் பெயர்களும் ஆக்னீதரன், இத்மஜிஹ்வன், யக்ஞபாஹு, மஹாவீரன், ஹிரண்யரேதஸ், க்ருதப்ருஷ்டன், ஸவனன், மேதாதிதி, வீதிஹோத்ரன், கவி என்று அக்னியின் பெயர்களாகவே அமைந்தன.

இவர்களுள் கவி, மஹாவீரன், ஸவனன் ஆகிய மூவரும் இல்லறம்‌ ஏற்காமல், நைஷ்டிக ப்ரும்மசாரிகளாக இருந்தனர். இளம் வயது முதலே ஆத்மவிசாரம்‌ மேற்கொண்டு முடிவில் துறவு ஏற்றனர்.

இடையறாது பகவத் தியானம் செய்து இருமை அகலப்பெற்று ஞானத்தை அடைந்தனர்.

ப்ரியவிரதனின் மற்றொரு மனைவி உத்தமன், தாமஸன், ரைவதன் என்ற மூன்று மகன்களைப்‌ பெற்றாள்.

அவர்கள் தங்கள் பெயர்களைக் கொண்ட மன்வந்தரங்களுக்குத் தலைவர்களாயினர்.

ப்ரியவிரதன் பதினோரு கோடி வருடங்கள் அரசாட்சி புரிந்தான். அவனது வில்லின் நாணொலிக்கு பயந்து மறவழிச் செல்பவர் அனைவரும் ஓடி ஒளிந்தனர்.

அவனது மனைவி பர்ஹிஷ்மதியின் அன்பான பணிவிடைகளால் ஆன்மஸ்வரூபத்தையே மறந்தவன் போலாகிவிட்டான். அத்தனையும் மறந்தவன் போல, சாதாரணனைப்போல் உலக இன்பங்களில் திளைத்தானேயன்றி ஒருகணம் கூட அவன் மனம் உலகியல் விஷயங்களில் லயிக்கவில்லை.

அவன் தேரிலேறி ஏழுமுறை பூவுலகை வலம் வந்தான். அவனது ஒளியால் இரண்டாவது சூரியனோ என்று அனைவரும் ஐயமுற்றனர்.

அவன் ப்ரதக்ஷிணம் செய்யும்போது தேர்க்கால்கள் பூமியில் பட்டு நேர்ந்த பள்ளங்களே ஏழு கடல்களாகக் காட்சியளிக்கின்றன.

அதனால் பூமியில் ஏழு தீவுகள்‌ தோன்றின. அவை ஜம்புத்தீவு, ப்லக்ஷத்தீவு, சால்மலித்தீவு, குசத்தீவு, க்ரௌஞ்சத்தீவு, சாகத்தீ்வு, புஷ்கரத்தீவு. இவை மேல்வரிசையாக ஒன்றைக்காட்டிலும்‌ அடுத்தது இருமடங்கு பெரியதாக பூமியின் நாற்றிசைகளிலும் சமுத்திரங்களுக்கு வெளியே பரவியுள்ளன.

ஏழு‌கடல்களும் முறையே உப்புநீர், கரும்புச்சாறு, கள், நெய், பால், மோர், இனிய சுத்தமான நீர் நிரம்பியவை.
ஒவ்வொன்றும் அடுத்த தீவை வெளிப்புறமாக அகழிபோல் சுற்றியிருக்கின்றன.

முதலில் ஜம்புத்தீவு அதைச் சுற்றி உப்புக்கடல். அதைச் சுற்றி ப்லக்ஷத்தீவு, அதைச் சுற்றி கருப்பஞ்சாற்றுக் கடல். அதைச் சுற்றி சால்மலித்தீவு. அடுத்தது கள் கடல். பின்னர் குசத்தீவு. அதைத் தொடர்ந்து நெய்க்கடல். அதைச் சுற்றி கிரௌஞ்சத்தீவு. அதைச் சூழ்ந்து நிற்பது பாற்கடல். பின்னர் சாகத்தீவு. அதைச் சூழ்ந்தது மோர்க்கடல். பின்னர் புஷ்கரத்தீவைச் சுற்றி நன்னீர்க்கடல்.
பிரிய விரதன் தன் ஏழு பிள்ளைகளையும் ஒவ்வொரு தீவிற்கு அரசனாக்கினான்.

ஊர்ஜஸ்வதி என்ற மகளை சுக்ராசார்யாருக்கு மணம்‌முடித்து வைத்தான்.

சுக்ரரின் மகள்‌ தேவயானி.
ஒருநாள் ப்ரியவிரதன் தனக்குத்தானே ஆன்மஞானம் பெற்றும் இப்படி உழல்கிறேனே என்று நொந்துகொண்டான். அக்கணமே அவனது பற்றுகள் அறுந்தன. சவத்தைப் போல் அக்கணமே ராஜ்யத்தைத் துறந்தான். ஆன்மஞானியாகிவிட்டான்.

அவனது திறமையால் பூவுலகின் எல்லைகளை கடல்கள், மலைகள் எனப் பிரித்துக் காத்தான்.

அப்பேர்ப்பட்ட பிரியவிரதன், பாதாளலோகம், தெய்வலோகமான விண்ணுலகம், மானிட உலகம் யோகமார்கங்களால் அடையப்படும் செல்வங்கள் அனைத்தையுமே நரகமாக எண்ணி ஒரே கணத்தில் துறந்தான். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment