Friday, November 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 153 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 97

நாரதர் தொடர்ந்தார்.
ஹே அரசனே! அந்த பகவானேதான் அனைவர்க்கும் ப்ரியமான ஆத்மாவாக விளங்குகிறார்.

அவரை உபாசிப்பதொன்றே அனைத்துவிதமான பயங்களிலிருந்தும் ஒருவனை விடுவிக்கும்.

இந்த வழியைச் சொல்லித்தருபவரே உண்மையான குரு.

அந்த குரு வேறுயாருமல்ல. ஸாக்ஷாத் பகவான் ஸ்ரீ ஹரியே.

குருவிற்கும் பகவானுக்கும் வேறுபாடில்லை.

ஒரு ஆண்மான் தன் பெண்மானோடு இன்பமாகப் புல்‌மேய்கிறது. ரத்தவெறிகொண்ட செந்நாய்கள் அந்த மான்களின்மீது பாய சமயம்‌ பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேடன் மானைப் பிடிக்க எண்ணம் கொண்டு பின்னாலிருந்து அம்பெய்கிறான். மானோ எதையும் அறியவில்லை.

அம்மானின் நிலையில்தான் நீயும் இருக்கிறாய்.

உன் ஆயுளைக் காலம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. காலன் உன் உயிரைக் கொண்டு செல்லத் தொடர்ந்து வருகிறான். நீயோ சிற்றின்பங்களில் மூழ்கியிருக்கிறாய்.

மெதுவாக மனத்தை அடக்கி ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்து. உலகியல் இன்பங்களைப் பற்றிய பேச்சுக்களை விடு. சிறுகச் சிறுக உலகியல் ஆசைகளிலிருந்து விலகு.
ப்ராசீனபர்ஹிஸ் கேட்டான்.

தாங்கள் மிகவும் உயர்ந்த விஷயங்களைச் சொன்னீர்கள். இவ்விஷயங்களை இதுவரை கர்மங்களைச் செய்ய என்னை ஊக்குவித்த ப்ரோஹிதர்களோ ரிஷிகளோ என்னிடம்‌சொன்னதே இல்லையே. அவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் சொல்லவில்லையா?

மேலும், ஒரு சந்தேகம்.
ஒரு மனிதன் இவ்வுடலால் பல கர்மாக்களைச் செய்கிறான். இறக்கும்போது உடலை இங்கேயே விட்டு விடுகிறான்.

ஆனால், கர்மாக்களின் பயனை வேறு உடலோடு பரலோகத்தில் அனுபவிக்கிறான். இது எப்படிச் சரியாகும்?

கர்மா செய்வது ஒரு உடல். அனுபவிப்பது வேறோர் உடலா? கர்மா இங்கே முடிந்துவிடுமானால், பயனும் இங்கேயே முடியத்தானே வேண்டும்? அது பலனளிப்பதற்காக வேறொரு உலகில் வேறொரு விதமாக எப்படி வெளிப்படுகின்றன?

நாரதர் கூறலானார்.
அரசே! இந்த உடல் மனத்தை முக்கியமாகக் கொண்ட ஸூக்ஷ்ம சரீரத்திற்குக் கட்டுப்பட்டது. உலகில் கர்மா செய்வது உடல் அல்ல. மனமே. உடல் உலகை விடுத்ததும், அந்த ஸூக்ஷம சரீரமே மனத்துடன் பயணிக்கிறது. அதுதான் பலனை அனுபவிக்கிறது.

உறங்கும்போது உடல் பூமியில் கிடக்கிறது. உடல் மூச்சு விடுகிறது. மனமோ கனவில் வேறொரு உடலுடன் எங்கெங்கோ செல்கிறது. கனவில் அவன் தன்னையே காண்பதும் உண்டு.
அவ்வுடல் எவ்வாறு வந்தது? அவ்வுடலைப் படைத்தது மனமேதான். ஏதோ ஒன்றைக் காண ஆசைப்பட்டு படைக்கிறது.

முற்பிறவியில் செய்த கர்மாக்களின் நினைவு இல்லாவிட்டாலும் மனத்தில் மறைந்திருக்கும். அதனால், பிறவிகள் தோறும் தொடர்ந்துவரும்‌ மனத்தாலேயே எல்லா பயன்களும் அனுபவிக்கப் படுகின்றன.

ஒரே உடல்தான் என்பதல்ல. பசு, பக்ஷி மிருகங்களாகவும் உடல் எடுத்து கர்மாக்களை அனுபவிப்பது மனம் ஒன்றே.

ஜீவன் மனத்தால் செய்யும்‌ செயல்களை உடலால் செய்வதாக எண்ணிக் கொள்கிறான்.இவ்வுடலுடன் ஏற்படும் உறவுகளை என் உறவுகள் என்று நினைக்கிறான். உடலையே நான் என்றும் எண்ணுகிறான்.

அனைத்துச் செயல்களையும் தான் செய்வதாக எண்ணி அஹங்காரத்தை ஏற்றிக்கொள்கிறான். இதனால் வீணாகப் பிறவி வந்துவிடுகிறது.
மனத்தின் பல்வேறான செயல்பாடுகள் ஒருவனது முந்தைய பிறவியைக் காட்டிக்கொடுத்துவிடும்.

சிலசமயம் நாம் இப்பிறவியில் இதுவரை கண்டறியாத கேட்டறியாத விஷயங்கள் கனவில் தத்ரூபமாகத் தெரிகின்றன.

எப்படி எனில், அவை மனத்தில் பதிந்திருக்கும் முந்தைய பிறவிகளின் வாசனைகளே (நினைவுகள்).

கனவுலகில்‌ காணப்படும்‌ எதுவுமே உண்மையில்லைதான்.ஆனால்,‌ கனவு காணும்வரை அவை உண்மைதானே. அதுபோலவே இவ்வுடலும் அதனால்‌ நுகரப்படும் பொருள்களும் பொய்யே.
இதை ஜீவன் உண்மை என்று நினைக்கும்வரை தளை நீங்காது. பிறவி தொடரும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment