Friday, August 31, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 85 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 29

கபில பகவான் தன் பவள வாய் திறந்து தன்னைச் சுமந்த தாயின் பந்தங்களை அறச்செய்யுமாறு பேசினார்.
அம்மா! நான் அனைத்து ஜீவனுள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன். ப்ரக்ருதி, புருஷன் இவர்களை வழி நடத்துபவன்.

என்னை வணங்குவதால் மரணபயம்‌ நீங்கும்.

என்னிடம்‌ உள்ள பயத்தினாலேயே பஞ்ச பூதங்களும் தன் பணிகளைச் செவ்வனே செய்கின்றன.

ஆகவே, யோகிகளும், பக்தர்களும் பயமே இல்லாத என் சரணத்தையே பற்றுகிறார்கள்.

ப்ரக்ருதி முதலிய தத்வங்களின் இலக்கணத்தைத் தொடர்ந்து கூறினார் கபிலர்.

அன்பு அம்மா! ஆன்மாவைப் பற்றிய உண்மை அறிவே மோக்ஷத்திற்கு வழி காட்டும். அதுதான் மனிதர்களின் யான், எனது என்ற அஹங்காரத்தைக் களைய உதவும்.

இந்த அகில உலகங்களும் எந்த பரமானால் எங்கும் நிரம்பி வழிகிறதோ, அந்த ஆன்மதத்வமே புருஷன்.

அவன் அனாதி. தோற்றமும் முடிவும் இல்லாதவன். ப்ரக்ருதி வயப்படாதவன். ஹ்ருதய குகையில் காட்சி தருபவன். தனக்குத்தானே ஒளிர்பவன்.

ப்ரக்ருதி ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்னும்‌ முக்குணங்கள் உடையது. அதற்கு சுயமாக சக்தி கிடையாது. பகவானுடன் இருப்பதாலேயே சக்தி பெற்று தன் மாயையால் செயல்களைப் புரிகிறது.

ப்ரக்ருதி என்பது ஆவரண சக்தியான மறைக்கும் திறன், விக்ஷேப சக்தியான கலக்கும் திறன் என்று இருவகைப்படும்.

ஆவரண சக்தியோடு ஜீவனுடன் கூடினால் அது அவித்யை அல்லது அறியாமை எனப்படும். விக்ஷேப சக்தியுடன்‌ பகவானைக் கலந்தால், அது மாயை எனப்படுகிறது.

புருஷன் ஜீவன், ஈஸ்வரன் என்று இருவகையாகத் தோன்றமளிக்கிறான்.
ப்ரக்ருதியின் உண்மையறிவு இன்மையால், உலகியல்‌ இன்ப துன்பங்களை அடைகிறான் ஜீவன்.
அதே ப்ரக்ருதியைத் தன்வயப்படுத்தி படைப்பு முதலியவைகளைச் செய்கிறான்.

ப்ரக்ருதியின் உண்மை அறிவைப் பெறும் ஜீவன் ஈஸ்வரனின் ஸ்தானத்தை அடைந்து அவனுடன் கலந்து விடுகிறான்.

அவ்வாறு உண்மை அறிவைப் பெற்ற ஜீவனையும் ஈஸ்வரனையும் வேறுபடுத்த இயலாது.

ப்ரக்ருதியின் உண்மை அறிவற்ற ஜீவன் உலகை ஐந்து வழிகளால் அடைகிறது.

ப்ரக்ருதியின் ஸத்வகுணத்தைக் கொண்டு ஆதிபுருஷன் போன்ற ஜீவன் படைக்கப்படுகிறான்.

அந்த ஜீவன் ப்ரக்ருதியின் சக்தியில் மயங்கித் தன் உண்மை ஸ்வரூபத்தை மறந்துவிடுகிறான். இதனாலேயே ஆண் பெண்களுக்குள் ஈர்ப்புத்தன்மை தோன்றியது. அதை ஜீவன் தன் குணமாக ஏற்றுக்கொண்டான்.

அந்த ஜீவன் முக்குணத்தினால் ஏற்படும் செய்கைகளைத் தான் செய்வதாகவே எண்ணுகிறான்.

நானே செயல்களைச் செய்கிறேன் என்ற எண்ணத்தால்தான், செயலற்ற, ஸ்வந்தந்திரமான, ஆனந்தமயமான ஜீவனுக்கு பிறப்பு இறப்பு, ப்ரக்ருதிக்கு அடிமையாவது போன்ற தன்மைகள் ஏற்படுகின்றன.
தேவஹூதி கேட்டாள்.

புருஷோத்தமா! ப்ரக்ருதி அதாவது கண்ணால் காணப்படும் உலகம், புருஷன் இவை இரண்டின் இலக்கணம் என்ன? இவைதானே ப்ரபஞ்சத்திற்குக் காரணம்? இவை இரண்டும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?
பகவான் சொல்லத் துவங்கினார்.

ப்ரக்ருதி முக்குணங்களை உடையது. அழிவில்லாதது. காரண காரிய வடிவானது. எல்லாவிதச் செயல்பாடுகளுக்கும் நிலைக்களனாக விளங்குவது.

ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், அஹங்காரம், மஹத், அவ்யக்தம்‌ என்ற நான்கு அந்தக்கரணங்கள், பத்து பொறிகள், ஆகிய இருபத்து நான்கு தத்துவங்கள் அடங்கிய திறன் ப்ரக்ருதியின் காரியம்‌ என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு இந்த தத்வங்களை விளக்கிக் கூறினார் கபிலர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment