Monday, August 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 81 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 25

தன் ஒன்பது பெண்களின் திருமணத்தையும் முடித்த கர்தமர், தனக்கு மகனாகப் பிறந்திருக்கும் கபிலரிடம்‌ தனிமையில் சென்றார். அவரை வணங்கிப் பின் கூறலானார்.
தத்தம் ‌வினைகளால் பாவ புண்யங்களை அனுபவிக்கும் ஜீவர்களிடம்‌ தேவதைகள் வெகு நாள்கள் கழித்துத்தான் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

துறவிகளோ பக்தியோகத்தினால் தனிமையில் தங்களது திருப்பாதகமலங்களை ஆராதிக்கிறார்கள்.

ஆனால், பகவானாகிய தாங்களோ ஸம்சாரிகளான இவர்கள் உலகியல்‌ இன்பங்களை விரும்புபவர்கள் என்றும், எங்களது தாழ்மையையும்‌ சற்றும்‌ நினையாமல் அற்பர்களான எங்கள் வீட்டில்‌ வந்து அவதாரம்‌ செய்தீர்கள்.

முன்பு‌ என்னிடம்‌ என் மகவாய்ப் பிறப்பதாகக்‌ கூறிய வாக்கை மெய்ப்பித்தீர்கள். நான்கு கரங்கள்‌ கொண்ட திருமேனியை விட்டு இரு கரங்களோடு மானிட உருவம்‌ கொண்டீர்.

ஐஸ்வர்யம், வைராக்யம், புகழ், அறிவு, வீரம், ஸ்ரீ எனப்படும் செல்வம் இவை ஆறும் ஒருங்கே கொண்ட பகவான் ஆகிய உங்களை சரணமடைகிறேன்.
(மேற்சொன்ன ஆறு குணங்களும் ஒன்றிணைந்தது 'பக' என்னும் குணம். அந்த குணத்தை உடையவர் பகவான்.)
சக்திகள் அனைத்தும் தங்களுக்கு அடிமை. ப்ரக்ருதி, அதன் அதிஷ்டான புருஷன், மஹத் தத்வம், அவற்றை இயக்கும்‌ காலம், முக்குணங்களின்‌ அஹங்காரம், அண்ட சராசரங்கள், அதனுடைய பாலர்கள் அனைத்தும்‌ தாங்களே. அனைத்தையும் நீங்கள் ‌உங்கள் வாயில் அடக்கிக்கொள்கிறீர்கள். அனைத்திலும் பெரியவரான கபில மூர்த்தியான தங்களைச் சரணமடைகிறேன்.

தங்கள்‌ கருணையால் மூன்று விதமான கடன்களிலிருந்தும் விடுபட்டேன். என் விருப்பங்கள்‌ அனைத்தும் நிறைவேறின. நான் துறவறம்‌ ஏற்று இவ்வுலகியல் இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டு உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு உலா வர விரும்புகிறேன்.
எனக்கு அனுமதி தாருங்கள்.
என்றார்.

பகவான் கூறினார்.

முனிவரே, நான் முன்பு உம்மிடம் கூறியதை மெய்ப்பிக்கவே உமக்கு மகனாகப்‌ பிறந்தேன்.

இவ்வுடலானது ஆன்மா என்று தவறாக அறியப்பட்டு வருகிறது. இவ்வுலகோர்க்கு ப்ரக்ருதி, ஜீவன், பரமன் இவைகளின் உண்மை தத்துவத்தை எடுத்துரைக்கவே அவதாரம்‌ செய்துள்ளேன்.
ஆன்ம அறிவைப் பற்றிய இந்த நுண்ணிய வழி வெகு காலமானதால் அழிந்தேபோனது. அதைத் திரும்பவும் நிறுவுவதற்காகவே இத்திருமேனியைக் கொண்டுள்ளேன்.
நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீங்கள் துறவறம்‌ மேற்கொள்ளலாம். பயனில் பற்றில்லாமல் பணி செய்து, பயனை எனக்கு அர்ப்பணம் செய்து, ம்ருத்யுவை வெற்றிகொண்டு முக்தி அடைவதற்காக என்னைப் பணிந்து வாரும்.

நான் தேவஹூதிக்கு ஆன்மவித்யையை உபதேசிக்கப்போகிறேன். அவளும் உலகியல்‌ துன்பங்களைத் தாண்டி, ஞானம்‌ பெற்று என்னை அடையப்போகிறாள்.

மைத்ரேயர் தொடர்ந்தார்..
பகவான் சொன்னதைக்கேட்டு கர்தமர் கபில பகவானை விழுந்து வணங்கிவிட்டு யாருக்கும் சொல்லாமல் அவ்விடம் விட்டு நீங்கினார்.

அதன் பின் அஹிம்சையை வேராகக் கொண்ட துறவறத்தை ஏற்று, வைதிக கர்மங்களையும்‌ துறந்து, எங்கும், எதிலும் பற்றின்றிச் சுற்றித் திரிந்தார்.
யான், எனது என்ற அஹங்காரத்தை விட்டு பகவானிடம்‌ மனத்தை ஒரு நிலைப்படுத்தினார். அவரது அறிவு உள்நோக்கி அமைதியாய் இருந்தது.

அலைகளற்ற நடுக்கடல்போல் அமைதியாய் விளங்கினார் கர்தமர்.
அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று, விருப்பு வெறுப்பற்ற சமநோக்குடன் பகவத் பக்தி நிறைவு பெற்று பரமபதத்தை அடைந்தார் கர்தமர்.

சாங்க்ய சாஸ்திரத்தை எடுத்துரைக்க வந்த கபில பகவானின் பெருமைகள் கேட்கக் கேட்க அலுக்கவேயில்லையே. அவர் மேலும் என்னென்ன செய்தார் என்று விளக்கிக் கூறுங்கள் என்றார் சௌனகர்.

ஸூத பௌராணிகர் இதையே தான் விதுரரும் கேட்டார். அதற்கு மைத்ரேயர் கூறியவற்றைக் கூறுகிறேன் என்று கூறி, தொடர்ந்து தேவஹூதிக்கும் கபிலருக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறத் துவங்கினார்.

#மஹாரண்‌யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment