Thursday, August 2, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 60 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 4



விதுரர் மேலும் கூறலானார்.
அறிஞரே, ஜீவனின் தன்மையையும் ப்ரபஞ்சமே மாயையின் தோற்றம் என்பதையும் விளங்கிக்கொண்டேன்.
தங்களைப்போன்ற பகவத் பக்தர்களே இறைவனை அடைய உண்மையான வழிகாட்டிகள்.
அற்ப புண்ணியம் செய்தவனுக்கு ஸத்சங்கம் கிடைக்காதன்றோ?
ஸத்சங்கம் கிடைக்காதவன் புண்ணியம் செய்யாதவன்.
ஆயிரக்கணக்கான பாதங்கள், தொடைகள், கைகளைக்கொண்ட அந்த விராட்புருஷனை வேதங்கள் புராண புருஷன் என்றழைக்கின்றன.
அவரிடம்தான் அனைத்துலகங்களும் ஒன்றோடொன்று மோதாமல் இடைவெளியுடன் இருக்கின்றன.
அவரிடமிருந்து சக்திகளுடன் பத்து பிராணன்கள் தோன்றின. அதிலிருந்து இந்திரியங்களும் அதன் சக்திகளும் அதன் தேவதைகளும் தோன்றின. அதிலிருந்து நான்கு வர்ணங்களும் தோன்றின.
அவரிடமிருந்து தோன்றிய பற்பலவிதமான உருவங்கள், குணங்கள் கொண்ட ஜீவர்கள்,இவ்வுலகம் முழுதும் நிறைந்த தங்களது மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், மற்றும் தங்களது கோத்திரத்தில் பிறந்தவர்கள் என்று எவ்வாறு பெருகினார்கள்?
எவ்வாறு வாழ்க்கையை நடத்துகிறார்கள்?
அனைவர்க்கும் பிதாவான ப்ரும்மதேவர் எந்தெந்த ப்ரஜாபதிகளைப் படைத்தார்?
எந்தெந்த ஸர்கங்களையும் அதன் பிரிவுகளையும், மன்வந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும் படைத்தார்?
மனுக்களின் வம்சாவளி, பூமிக்கு மேலும் கீழும் உள்ள லோகங்கள், அத்தனை விதமான பிறவிகளின் உடலமைப்பு, தோன்றும் விதம் ஆகியவற்றையும் சொல்லுங்கள்.
முக்குணங்களின் தன்மையை ஏற்றுக்கொண்டு அவர் வெவ்வேறு திருமேனிகள் கொண்டு எவ்வாறு முத்தொழில்களை செய்கிறார்?
ரூபம், ஆசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணங்கள், நான்கு ஆசிரமங்கள், மஹரிஷிகளின் பிறப்பு, வேதங்களின் பிரிவுகள், வேள்விகளின் விளக்கங்கள், யோகமார்கம், ஞானமார்கம், அதற்கு சாதனமான வேதாந்த சாஸ்திரங்கள், பகவானால் உபதேசிக்கப்பட்ட பாஞ்சராத்ரம் முதலிய ஆகம தந்திர நூல்கள், வேதநெறி தவறிய நாத்திக நெறியின் மாறுபாடுகள், ஜாதிக்கலப்பால் நிகழும் பிறவிகள், அவர்களது குணம், செயல்கள், ஆசாரங்கள், ஜீவன் தன் மரணத்திற்குப் பின் அடையும் கதிகள், அவற்றின் வகைகள் ஆகிய அனைத்தையும் விவரமாகக் கூறுங்கள்.
நான்கு புருஷார்த்தங்களையும் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி பெறும் வழிகள், வியாபாரம், அரச நெறி, சாஸ்திரங்கள் ஓதலும் கேட்டலுமான முறைகள், தென்புலத்தார் கடன் விதிமுறைகள்,பித்ருகணங்களின் படைப்பு, கோள்கள், தாரைகளின் கணங்கள், காலம் ஆகியவற்றின் போக்கை அளவிடும் ஜோதிர் மண்டலங்கள் முதலியவை பற்றியும் கூறுங்கள்
தானம், தவம், வேள்விகள், குளம் - கிணறுகள் வெட்டுதல் போன்ற தர்மங்களால் என்ன பயன்?
பகவானான ஜனார்த்தனர் எந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதால் மகிழ்ச்சியடைவார்?
எவ்வகையானவர்க்கு அருள் புரிவார்?
மஹத் தத்வங்களின் மறைவு எவ்விதம்? அவை எவ்வாறு இறைவனுள் ஒடுங்குகின்றன?
ஜீவனுடைய இயல்பு தத்துவம் என்ன? குரு சீடன் இவர்கள் ஒருவருக்கிடையே ஒருவர் அடையும் பயன் என்ன?
ஞானத்தை அடையும் வழிமுறைகள் யாவை?
குற்றமற்றவரே, வேதமோதுதல், தனங்கள், தவங்கள், ஆகிய எவையும் ஒரு ஜீவனது ஜனன மரண பயத்தைப் போக்க வல்லதன்று. தங்களைப் போன்ற பெரியோர்கள் வாயிலாகக் கேட்டுணரும் அறிவொன்றே அச்சத்தைப் போக்கவல்லது.
ஸ்ரீ சுகர் கூறினார்.
விதுரர் பகவானைப் பற்றிய புராண விஷயங்களைக் கேட்கவே,
மைத்ரேயர் அவற்றைச் சொல்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியமைக்காக மகிழ்ந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment