Saturday, August 25, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -79 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23

மைத்ரேயர் தொடர்ந்தார்.
அனைவரின் உள்ளத்தையும்‌ அறியும் திறன்‌கொண்ட கர்தம மகரிஷி, இவ்வளவு அழகான விமானத்தைப் படைத்தும் தேவஹூதி மகிழ்ச்சி அடையவில்லை என்று உணர்ந்தார்.

தேவஹூதி கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தாள். மிகவும்‌ இளைத்துப்போய், கேசங்கள் அழுக்கடைந்து சடை போட்டிருந்தது.

அவளைக் கண்ணுற்ற கர்தமர்,
பயந்த சுபாவம்‌ உடையவளே, நீ இந்த பிந்துஸரஸில் நீராடி விமானத்தில் ஏறிக்கொள். இந்த நீர்நிலை பகவானால் உண்டாக்கப்பட்டது. அனைத்து விருப்பங்களையும்‌ பூர்த்தி செய்யவல்லது.
என்றார்.

அழகிய கண்களை உடைய தேவஹூதி, கணவரின் ஆணைப்படி, பிந்துஸரஸ் என்ற அந்த நீர்நிலையில்‌ மூழ்கினாள்.
அங்கே அவளுக்கு மிக ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.
பிந்துஸரஸினுள் ஒரு அழகிய மாளிகை இருந்தது‌. ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களது திருமேனி யிலிருந்து தாமரை மணம் வீசியது. அவர்கள் தேவஹூதியைக் கண்டு கைகூப்பி,
அம்மா, நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். தங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? கட்டளையிடுங்கள்.
என்றனர்.

அவர்கள் தேவஹூதியின் விருப்பத்திற்கிணங்க, அவளை உயர்ந்த வாசனைப்பொடிகளல் தைல ஸ்நானம் செய்வித்தனர். உயர்ந்த பட்டாடைகளை அணிவித்தனர். விலை உயர்ந்த ஆபரணங்களால் அவளை அலங்கரித்தனர். அறுசுவை உண்டியையும், இனிய நன்னீரும் கொடுத்தனர்.

மிக அழகிய பெண்ணாக அவளை உருமாற்றியிருந்தனர் அப்பெண்கள்.
ஏராளமான நகைகளுடன் அழகு மிளிரும்‌ தன்னை தன் கணவரான கர்தமருக்கு அர்ப்பணிக்க விரும்பினாள் தேவஹூதி. அவ்வாறு அவள் நினைத்ததுமே, பணிப்பெண்களோடு கணவனின் எதிரே நிற்கக்கண்டு வியந்தாள்.

கர்தமரின் யோகசக்தியைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றாள்.
கர்தமருடன், அவரால் படைக்கப்பட்ட அழகிய விம்மானத்தில் ஏறினாள்.

தன் மனைவி தேவஹூதியாலும், ஆயிரக்கணக்கான வித்யாதரப் பெண்களாலும் பணிவிடை செய்யப்பெற்று கர்தமர் தன்னையும் மிகுந்த அழகுடன் ஆக்கிக்கொண்டார்.

மன்மதன் போன்ற அழகுடன் தேவஹூதியின் மனம் மகிழும் வண்ணம்‌ விளங்கினார் கர்தமர்.
தன் மனைவியுடன் பலவிதமான தேவ உத்யான வனங்களிலும், மானஸ ஸரஸ்களிலும்‌ விமானம் மூலம் சுற்றினார்.

அவ்விமானம் நினைத்தபடி தடையின்றி எங்கும் செல்ல வல்லது. அதிலேறி அனைத்து உலகங்களிலும் தடையின்றி சஞ்சாரம் செய்து தேவர்களையும் விஞ்சினார்.

பகவானின் திருவடிகளில் பற்றுள்ளவர்க்கு அனைத்தும் கிடைக்கும். அவர்கள் விரும்ப மாட்டார்கள். விரும்பினால், அவர்களால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

உலகங்கள்‌ முழுவதையும் மனனைவிக்குச் சுற்றிக் காண்பித்து , அவளோடு பலவாறு இன்புற்ற பின்னர், தன் இருப்பிடம்‌ திரும்பினார் கர்தமர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment