Wednesday, August 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 76 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 20

கர்தமர் பதினாயிறம் ஆண்டுகள் தவம்‌ செய்தும், இறைவனை அடைய பக்குவம் போதவில்லையே என்று வருந்தினார். அவரது பக்தியை மெச்சி, அவருக்குக் காட்சி தந்தார் இறைவன்.

பக்தி செய்பவருக்கு தன்னையே தருவதற்கு பகவான் தயாராய் இருக்க, தான் இல்லறம் நடத்த மனைவி கேட்கிறோமே என்று கூனிக் குறுகினார் கர்தமர். இருப்பினும், அவரது தவத்தின் நோக்கம் அதுவே என்பதால், இறைவன் நல்ல இல்லறத்தையும் அருளி, தானே அவருக்கு மகவாய்ப் பிறப்பதாய் வாக்களித்து முக்தியும் தருவேன் என்று வாக்களித்துப்போனான்.

கர்தமரின் பக்தியை எண்ணி எண்ணி பகவானும் உண்மையில் உருகிப்போனார். அவரது கண்களிலிருந்து தன் பக்தரான கர்தமரை நினைத்து ஆனந்தக்கண்ணீர் பெருகியது.
பகவான் சிந்திய ஆனந்தக்கண்ணீர் ஒரு குளமாகி பிந்துஸரஸ் என்றழைக்கப்படுகிறது.
பகவான் கிளம்பிச் சென்றதும்,‌கர்தமர் பகவான் கூறிய காலத்தை எதிர் பார்த்திருந்தார். அவர் மனமோ, தான் கண்ட இறைக்காட்சியில் மூழ்கிப்போயிருந்தது.
அப்போது, தங்கத் தகடுகள் வேய்ந்த தேரில், ஸ்வாயம்புவ மனுவும், சதரூபையும் மகள் தேவஹூதியோடு அங்கு வந்தனர்.

நிறைய முனிவர்கள் வசிக்கும் ஸரஸ்வதி நதிக்கரையில் இருந்தது பிந்துஸரஸ். அதன் நீர் பரிசுத்தமானது. அமுதம் போன்ற சுவையுடையது. மரம் செடி கொடிகளால் சூழப்பட்டது. பூக்களும், பழங்களும்‌ நிறைந்தது. வண்டுகளின் ரீங்காரம்‌ எப்போதும்‌ கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு நிறைய விலங்குகள் இருந்தன.

மனு செல்லும் சமயத்தில், கர்தமர் தமது அனுஷ்டானங்களை‌முடித்து அமர்ந்திருந்தார்.

வெகுநாள்கள் தவம்‌ செய்திருந்தபடியால்‌ அவரது மேனி ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டது.

பகவானைக் கண்டதால், அவர் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில்‌ குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது.
நல்ல உயரமானவர். அகன்ற திருக்கண்கள். ஜடாமுடி, மரவுரி அணிந்திருந்தார்.
அவரைக் கண்டதுமே மனத்தைப் பறிகொடுத்தாள் தேவஹூதி.

தம் இருப்பிடம் நோக்கி வந்த மனுவை வரவேற்று இன்மொழிகளால் பலவாறு பாராட்டி, உபசரித்தார்.

கர்தமர் தன்னைப் புகழ்வது கண்டு சற்றே வெட்கத்துடன் பேசினார் மனு.
தங்களது உயர்ந்த ஸ்வபாவமும், ஞானமும் தங்கள் பேச்சில் தெரிகிறது. தாங்கள் அனைத்து தர்மங்களையும் அறிந்திருக்கிறீர். என்னைப் பற்றிச் சொல்லும் சமயம் ஒரு அரசனது அறநெறிகளை எனக்கு உபதேசம் செய்தீர். இது எனது பாக்யம். தங்களின் அனுக்ரஹம் கிடைக்கப்பெற்றேன்.

இவள் என் மகள். தங்களுடைய குணங்கள், ஒழுக்கம், தவம் ஆகியவற்றைப் பற்றி நாரத மஹரிஷி மூலம்‌ அறிந்தாள். அதுமுதல் தங்களையே மணாளனாக நிச்சயித்திருக்கிறாள். ஆகவே, அந்தணோத்தமரான தங்களுக்கு என்‌ மகளைக்‌ கன்னிகாதானம் செய்துகொடுக்கிறேன். இவள் தங்கள் வாழ்க்கை‌முறை செவ்வனே நடைபெறுவதக்கு உறுதுணையாக இருப்பாள். இதுவரை ப்ரும்மசர்யத்தில் இருந்தீர்கள். இனி அப்படி இன்றி இவளை ஏற்று இனிய இல்லறம் நடத்துங்கள்
என்று வேண்டினார்.

கர்தமர் மகிழ்ச்சியோடு தேவஹூதியைப் பற்றித் தான் கேள்வியுற்றவற்றைக் கூறி, ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவ்வுத்தமியை திருமணம் செய்து, இவள் வயிற்றில் ஒரு மகன் பிறக்கும் வரை இல்லறம்‌மேற்கொள்வேன். அதன்பின் பகவான் எனக்கு உபதேசித்தபடி ஜீவஹிம்சையற்ற துறவறம்‌ மேற்கொண்டு நாராயணனை ஆராதிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு கூறிய கர்தமர், கண்களை ‌மூடி ஒரு கணம் மனத்தில் நாராயணனை நினைத்து தியானம் செய்து மௌனமானார். நாராயணன் செல்லும் முன் தன்னைப் பார்த்து கொவ்வைப்பழ இதழ் விரித்துச் செய்த புன்முறுவல் நினைவுக்கு வந்தது.
கர்தமரின் முகம்‌மலர்ந்தது. அவரும் புன்னகை புரிந்தார். அப்புன்னகையின் அழகில் மனத்தைக் கொடுத்த தேவஹூதி, நிபந்தனைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அவரை மணக்க தந்தையிடம் உடனே சம்மதம்‌ தெரிவித்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment