Wednesday, August 8, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 66 விதுர மைத்ரேய‌ ஸம்வாதம் - 10

மைத்ரேயர் தொடர்ந்தார்
ப்ரும்மா ஸப்தப்ரும்மமாக, வேதமாகத் தோன்றிய காலம் ப்ரும்ம கல்பம். அதன் முடிவில்
தாமரை மலரில் தோன்றினார். அதனால் அது பாத்ம கல்பம் என்றழைக்கப்படுகிறது.

அவரது இரண்டாவது பரார்த்தத்தின் துவக்கத்தில் ஆரம்பித்து இப்போது வரை வராக கல்பம். இதில் பகவான் வராக மூர்த்தியாக அவதாரம் செய்தார்.

பரமாணு காலம் துவங்கி இந்த இரண்டு பரார்த்தங்கள் வரையிலான ப்ரும்மாவின் ஆயுள் காலம் பகவானுக்கு ஒரு நொடியாகும்.

இந்த ப்ரும்மாண்ட கோசம் எட்டு அடிப்படைத் தத்துவங்கள் கொண்டது.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், சப்தம், ஸ்பர்சம் முதலிய ஐந்து தன்மாத்திரைகள்.
இவை மேலும் ஐந்து பூதங்கள், பத்து பொறிகள், மற்றும் மனம் என்று பதினாறு மாறுதல்களை உடையது.

இது உள்ளும் புறமும் 50 கோடி யோஜனை தூரம் உள்ளது. பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம், அஹங்காரம், மஹத் என்ற 7 ஆவரணங்கள் உடையது. இந்த ஆவரணங்கள் (திரை) ஒன்றுக்கொன்று பத்து மடங்கு பெரியவை.

இப்படிபட்ட ப்ரும்மாண்ட கோசம் பகவானிடம் ஒரு அணுபோல் காணப்படுகிறது. இதைப்போல் கோடிக்கணக்கான ப்ரும்மாண்டங்களை உடையவர் அவர். புராண புருஷரான (பழைய வஸ்து) இவரை மஹாவிஷ்ணு எனவும் அழைக்கின்றனர்.
விதுரரே, இனி ப்ரும்மதேவரின் ஸ்ருஷ்டிகள் பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள்..

ப்ரும்மா முதலில்
அஞ்ஞானத்தின் ஐந்து தொழில்களைப் படைத்தார்.
1.தாமிஸ்ரம்(துவேஷம்)
2. அந்ததாமிஸ்ரம் (மரணமே ஜீவனின் முடிவு என்ற எண்ணம்)
3. மோகம் (உடல் பற்று)
4. மகாமோகம் (பொறிகளின் சுகத்தில் பற்று)
5. தமஸ் (ஆன்ம தத்வத்தை மறைக்கும் அறியாமை எனும் மாயை)

முதலில் தத்வங்களைப் படைத்தபின் ஜீவ ஸ்ருஷ்டியைத் துவக்கினார்.
இதன் பின், வேதங்கள்,
வேள்விகள் (ஷோடஸி, உக்தம், சயனம், அக்னிஷ்டோமம், அப்தோர்யாமம், அதிராதரம், வாஜபேயம், கோஸவம்), அவற்றின் விரிவுகள், உபவேதங்கள், ப்ரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம், ஆகிவற்றின் நெறிகள், ரித்விக்குகளின் வகைகள், அவர்களின் நெறிகள், ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (ஆயுதங்கள், போர் வகைகள்) காந்தர்வ வேதம் (இசை, பரதம் முதலையன) ஸ்தாபத்ய வேதம் (வீடு கட்டுதல் முதலியன), ஐந்தாவது வேதமான இதிஹாஸ புராணங்கள்,
தர்மத்தின் நான்கு பாதங்களான வித்யை, தானம், தவம், ஒழுக்கம், அவற்றின் நெறிமுறைகள் ஆகியவற்றைப் படைத்தார்.

உஷ்ணீக், காயத்ரி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, பங்க்தீ, ப்ருஹதீ ஆகிய சந்தங்கள் ப்ரும்மாவின் உடலிலிருந்து தோன்றின.

அ முதலான உயிழுத்துக்கள், க முதல் ம வரையிலான மெய்யெழுத்துக்கள், ஶ, ஷ, ஸ, ஹ, முதலிய ஊஷ்ம எழுத்துக்கள், ய,ர, ல, வ என்ற அந்தஸ்த (இடையின) எழுத்துக்கள் ஆகியவையும் ப்ரும்மாவிடமிருந்து வந்தன. அவரது திருவிளையாடல்களிலிருந்து ஸப்தஸ்வரங்களின் த்வனி தோன்றியது.

ப்ரும்மா வெளிப்படையாக ஸப்தப்ரும்மத்தின் எழுத்துக்களின் ஒலிகளாகவும், உள்முகமாக ஓம் எனும் ப்ரணவத்தின் த்வனியாகவும் இருக்கிறார்.
இவ்வளவு செய்தும் படைப்பு பெருகாததைக் கண்டு வருத்தமுற்றார் ப்ரும்மா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment