Friday, August 17, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 71 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 15

சுழலும் தாமரை
காதலியின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் காதலர் மனம் துள்ளுவதுபோல், பகவானின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் பக்தர் மனம் எழும்பிக் குதிக்கும்.
வைகுந்த வாசலை அடைந்துவிட்ட ஸனகாதியரின் மனநிலையை எப்படிச் சொல்வது?

அங்கிருக்கும் எந்த அற்புதப்பொருளின் மீதும் அவர்களது கவனம் செல்லவில்லை. ஓட்டமும் நடையுமாக, ஆனந்தக் கண்ணீரோடு, ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு ஆறு வாயில்களைக் கடந்துவிட்டனர்.
ஏழாவது வாயில் அருகே வந்தாயிற்று..

ரத்தினங்கள் பதித்த தகதகக்கும் தங்க வாயில்..

ஆச்சு.. இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில் ..

இந்த வாசலைத் தாண்டினதும் பகவத் தரிசனம்..

ஆஹா..

நினைக்கும்போதே மேனி சிலிர்த்தது..

ஒரே ஓட்டம், தாண்டப்போனால், சட்டென்று குறுக்கே தங்கப் பிரம்புகள்.
ஒன்றும் புரியவில்லை. மீண்டும் போக முயற்சித்தால் மறுபடி தடுக்கப்பட்டனர்.
ஐந்து வயது பாலகர் உருவத்தில் இருப்பவர்கள், திகம்பரர்கள், பரம பக்தர்கள், ஆர்வத்தினால், எதையும் கவனியாதவர்கள்,
எங்கும் எதிலும் ஒரே விஷயத்தையே காண்பவர்கள், தங்கு தடையின்றி எல்லா இடங்களுக்கும் செல்பவர்கள்,
தாங்கள் தடுக்கப்படுகிறோம் என்றதும் சட்டென்று சினம் வந்துவிட்டது.
யாரென்று நிமிர்ந்து பார்த்தால், நெடிதுயர்ந்த பெரிய உருவங்கள், பகவானை ஒத்த திருமேனி, விலையுயர்ந்த ஆபரணங்கள், குண்டலங்கள், கிரீடங்கள், கையில் கதை. நீலமேனியர்கள், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் தவழும் வனமாலை. கண்கள் சிவந்து, சற்றே சினந்து காணப்பட்டனர்.

ஸனகாதியர் அவ்வாறு தடுக்கப்படவேண்டியவர்கள் அல்லர். பகவத் தரிசனத்திற்கு வந்த இடையூறு கண்டு ஒரே ஒரு கணம் சினந்ததில், வார்த்தைகள் சீற்றமாய் வந்து விழுந்தன.

பகவானிடம் பயன் கருதாது பக்தி செய்பவர்க்கே வைகுந்த வாசம்‌ கிட்டும். அவர்களிடம் தீய குணங்களே இராது. அப்படியிருக்க உங்களுக்கு இறைவனைச் சந்திக்க வருபவரைத் தடுக்கும் புத்தி எவ்வாறு ஏற்பட்டது?
நீங்கள் உண்மையான பகவத் பக்தர்களாயிருப்பின் எங்கள் மீது சந்தேகம் வந்து தடுத்திருக்கமாட்டீர்.
பகவானைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் அவனையே காண்கின்றனர். நீங்கள் எங்களை வேறாகப் பார்ப்பதாலேயே தடுத்தீர். பார்ஷதர்களாயினும் உண்மைப் பொருளை உணராது நிற்கிறீர்.
வேற்றுமை எண்ணம் இருப்பதால், வைகுந்தத்தை விடுத்து காம, க்ரோத, லோப மோஹம் நிறைந்த அசுரப் பிறவிகளாகக் கடவீர்கள். இது உங்களுக்கு நன்மையே பயக்கும்.
இதுவரை எந்த அஸ்திர- சஸ்திரத்தாலும் தடுக்கமுடியாத அந்த பகவத் பார்ஷதர்கள் சாபத்தைக் கேட்டு நடுநடுங்கிப் போனார்கள்.
சட்டென்று அவர்களது பாதங்களில் வீழ்ந்தனர்.

ஐயன்மீர்! எங்கள் தவற்றுக்கு ஏற்ற தண்டனைதான் இது. பகவானின் கருத்தை அறியாது தடுத்துவிட்டோம். எங்கள் பாவங்கள் தாங்கள் தந்த தண்டனையால் தீரட்டும். எங்கள் மீது சற்றே பரிதாபம் கொண்டு, ஒரே ஒரு க்ருபை செய்யுங்கள். நாங்கள் எந்த லோகத்தில் எவ்வளவு கீழ்த்தரமான பிறவியுற்றாலும், இறைவனின் நினைவு எங்களை விட்டு அகலாமல் இருக்கவேண்டும்.

இவ்வளவையும் அறிந்த கபட நாடக ஸூத்ரதாரியான பகவான் திருமகளுடன் அங்கு வந்தார்.

அவர் வரும் முன்னரே திருவடிக் கமலங்களில் திருமகள் அர்ச்சனை செய்த துளஸியின் கந்தம் முன்னறிவிப்பு செய்ய, புளகாங்கிதம்‌ அடைந்து மூர்ச்சையடைந்தனர் முனிவர்கள்.

பின்னர்
மூர்ச்சை தெளிந்து,
இதுவரை இதயத் தாமரையில் கண்டுகொண்டிருந்த பகவான் இப்போது ஸனகாதியரின் கண்களுக்கு விருந்தாக எதிரே..

பார்ஷதர்கள் வெண்கொற்றக்குடை பிடிக்க, ராஜஹம்ஸத்தின் இறக்கைகள் போல இருமருங்கும் சாமரங்கள் வீச,
வெண்கொற்றக்குடையின் முத்துக்கள், சந்திரனிலிருந்து அமுதம் சொட்டுவதுபோல் காற்றில் இங்குமங்கும் அசைய..

என்னே ஒரு காட்சி!!

நீலத்திருமேனி, மார்பில் தங்க ரேகையாய் ஒளிரும் திருமகள்,
அழகிய உருண்ட இடுப்பில் பீதாம்பரம், அரையில் கனக மேகலை, வண்டுகள்‌ சூழ்ந்து பாடும் வனமாலை, திருக்கைகளில் கங்கணங்கள்,
மின்னொளியை விஞ்சும் மகர குண்டலங்கள், அதை விஞ்சும் பளபளக்கும் கன்னங்கள், எடுப்பான அழகிய நாசி, கண்ணைப் பறிக்கும் அழகிய திருமுகமண்டலம், அழகிய முத்துமாலைகள், மார்பில் கௌஸ்துப மணி,
அவரது ஒளியால் வைகுந்தம் மேலும் அழகுபெறுகிறது.

ஒரு கையை கருடனின் தோளில் ஊன்றிக்கொண்டு, மறு கையால் தாமரை மலரைச் சுழற்றிக்கொண்டு வருகிறார்.

போதுமென்றே தோன்றாமல் பார்க்கத் தூண்டும் திருமேனியழகு. சட்டென்று தலைதாழ்த்தி வணங்கினார்கள் ஸனகாதியர்.

அதென்ன? தாமரைப்பூவைச் சுழற்றுவது?
அடுத்த பதிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment