Tuesday, August 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 75 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 19

கருடன் மீதேறி அழகே உருவாக எம்பெருமான் வந்த காட்சியை எவ்வளவு சொன்னாலும் முழுதும் சொல்ல இயலாது.

கர்தமர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். இரு கரங்களும் சிரமேற் குவிந்தன. தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.
ஸர்வேஸ்வரா! ஸத்வ குணமே உருவான தாங்கள் கண்கள் பயனுற தரிசனம் தந்தீர். பற்பல பிறப்புகளைப் பெற்றும் யோகிகள் மானுடப்பிறவியெடுத்து தங்களது இந்த தரிசனத்தைக் காணவே விரும்புகின்றனர்.

இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை சுலபமாக கடக்க ‌ஒரே சாதனம் தங்களது திருவடித் தாமரைகளே. அப்படிப்பட்டவற்றைக்‌ கண்ட பின்னும் மனிதன் உலக சுகங்களைக் கேட்கிறான்.

நீங்கள் வேண்டியதனைத்தும் அளிக்கும் கற்பகத்தரு. என் இதயம் காமத்தால்‌ கலங்கியுள்ளது. எனக்கு இல்வாழ்க்கையின் நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகும் ஒழுக்கமான, பக்தியுள்ள பெண்ணை மனைவியாக அருளவேண்டும்.

தாங்களே இவ்வுலகைப் படைத்து, காத்து, முடிவில் உம்மிடமே அடக்கிக்கொள்கிறீர்கள்.

சிலந்திப்பூச்சி தன்னிடமிருந்து வரும் திரவத்தால் வலையைப் பின்னி விருப்பம்போல் விளையாடிவிட்டு தன்னுள்ளேயே இழுத்துக்கொள்கிறது. திரவத்தை வெளியெ விடுவதாலோ, உள்ளிழுத்துக்கொள்வதாலோ அதற்கு எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. அதுபோல் ப்ரபஞ்சம் உங்களிடமிருந்து தோன்றும்போதும், அதை நீர் உள்ளடக்கிக் கொள்ளும்போதும், எந்த மாறுபாடும் இன்றி பூரணராக விளங்குகிறீர்.

மாயை எனும் சக்தியை ஏவி உலகை ஆட்டிப் படைக்கிறீர்கள்.

உலகியல் இன்பம் விரும்புபவர்களாயினும் சரி, முக்தியை விரும்புபவர்களாயினும் சரி, நீங்கள் வேண்டுபவர்க்கு வேண்டியவற்றை அருளுகிறீர்கள்
என்று சொல்லி நமஸ்கரித்தார்.

மனத்தைக் கவரும் புன்னகையோடு பகவான் பேச ஆரம்பித்தார்.
கர்தமரே! தாங்கள் மனம், பொறிகள் ஆகியவற்றை அடக்கி என்னை வழிபட்டீர்.‌ தங்கள் எண்ணம் அறிந்து, அதற்கான ஏற்பாட்டை நான் முன்னமே செய்துவிட்டேன். என்னை வழிபடுவது ஒருபோதும் வீணாகாது. ப்ரும்மதேவரின் புதல்வரான ஸ்வாயம்புவ மனு ஏழு தீவுகள்‌அடங்கிய இவ்வுலகைக்‌ காத்து வருகிறார்.

தர்மங்கள் அனைத்தும் அறிந்த ராஜரிஷியாகிய ஸ்வாயம்புவ‌மனு நாளை காலை இங்கு வருவார். அவருக்கு அழகும், இளமையும், நற்குணங்களும், ஒழுக்கமும் நிறைந்த பெண் இருக்கிறாள். அவளைத் தங்களுக்கு மணம் செய்துவைப்பார்.
அந்த அரசகுமாரி, தங்களுக்கேற்றவள். தங்கள் மனம் போல் நடந்துகொள்பவள். அவளைத் திருமணம் செய்துகொண்டு, உலகம்‌போற்றும்படி இல்லறம் நடத்துவீர். தங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் மரீசி முதலிய மஹரிஷிகளை மணந்து உலகம்‌போற்றும்‌ சந்ததிகளைத் தோற்றுவிப்பார்கள்.
கடைசியில் நானும் தங்கள் மகனாக அவதரித்து சாங்க்ய சாஸ்திரத்தை எழுதப்போகிறேன்.
இனிய இல்லறம் அமையப்பெற்று, ஜீவராசிகளிடம் அன்பு காட்டி வாழ்ந்து, பின் மனத்தையடக்கி உள்ளும் புறமும் என்னையே காண்பீர்.
என்று கூறினார்.

பகவானை ஆராதிக்கும் ஒவ்வொரு பக்தர்க்கும் இத்தகைய வாழ்வை அவர் அனுக்ரஹம் செய்கிறார்.
மனத்தை உட்செலுத்தினால் பகவான் வெளித்தோன்றுகிறார்.

இறைவன் கர்தம மஹரிஷிக்கு அருள் செய்துவிட்டு, அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிந்துஸரஸ் என்ற அவ்விடத்திலிருந்து கிளம்பி வைகுண்டம் சென்றார்.

அவர் செல்லும் வழியெங்கும் சித்தர் துதி செய்தனர். கருடனின் இறக்கைகள் இரண்டும், ப்ருஹத், ரதந்திரம் எனும் ஸாம வேதங்களாகும். அவற்றிலிருந்து வரும் கானத்தைக் கேட்டுக்கொண்டே பகவான் வைகுண்டம் சென்றார்.

இறைவன் போகும் முன் கர்தமரைப் பார்த்து அன்பொழுக கண்களும் இதழ்களும் பேச, முறுவலித்துவிட்டுச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment