Tuesday, February 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 218

ப்ரஹலாதனின் ஆன்மபலம்

ஹிரண்யகசிபு ப்ரஹலாதனை பலப்பல முறைகளில் கொல்ல முயற்சி செய்தான்.

ஐந்து வயதுக் குழந்தையைக் கொண்டுபோய் பனிக்கட்டிகள் நிரம்பிய அறைக்குள் நாள் கணக்காய்த் தள்ளினான். குழந்தை அன்றலர்ந்த தாமரையைப் போல் இருந்தான்.

சூறாளவளிக் காற்றை அவன் மீது ஏவ, ஹ்ருதயத்தில் நாராயணனைப் ப்ரதிஷ்டை செய்த ப்ரஹலாதன் அசையக்கூட இல்லை.

நெருப்பை மூட்டி, அதன் நடுவில்‌ நிற்கவைத்தனர் குழந்தையை. அவனோ, தென்றல் வீசுவதை அனுபவிப்பதுபோல் மகிழ்வோடு இருந்தான்.


கல்லில் கட்டி நடுக்கடலில் கொண்டுபோய் குழந்தையைப் போட்டார்கள் அந்தக் கல் நெஞ்சத்தினர்.

ஸமுத்திரராஜன், பாக்யமென்று கருதி,  அவனைத்  தன் மடியில் ஏந்தி லாலனை செய்தவாறு  கரையில் கொண்டு சேர்த்தான்.

மலைக் குகைகளில் கொண்டு விட்டார்கள். குழந்தை பயப்படுகிறானா என்று பார்த்தால், அவன் கண்களை மூடி தியானம் செய்தவாறு அமர்ந்திருக்க, குகையில் இருந்த விஷ ஜந்துக்கள் அவனைச் சுற்றிக் காவலாய் நின்றன.


இவ்வளவு செய்தும் ப்ரஹலாதனைக் கொல்லமுடியாததால், அவனைக் கண்டாலே காவலர்கள் பயந்து ஓடினர்.

வேறு உபாயங்கள் ஏதும் தோன்றாததால், தன் இயலாமையை நினைந்து தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஹிரண்யகசிபு.

எத்தனை கொடூரமான வார்த்தைகளால் இவனைத் திட்டினேன். கொல்வதற்கு எத்தனை உபாயங்கள் செய்தேன். இருப்பினும் இவன் எந்த உதவியும் இன்றித் தன் ஆன்மபலத்தாலேயே தப்பித்துக்கொண்டானே.

சிறுவனானாலும், எவ்வித ஐயமும் இன்றி திடநம்பிக்கையுடன் இருக்கிறான். இவனிடம் ஏதோ மகிமை இருக்கிறது. எதற்கும் அஞ்சுவதில்லை. இறக்கவும் இல்லை.

நான் செய்த கொடுமைகள் மறக்கக்கூடியவை அல்ல.

ஒருக்கால், தந்தை சொத்து பிள்ளைக்கு என்பதுபோல், நான் செய்த தவத்தின் பயன் இவனை அடைந்துவிட்டதா?

இவனாலேயேகூட எனக்கு மரணம் வருமோ?

இப்படிக் கவலை கொண்ட ஹிரண்யகசிபுவின் முகம் வாடி, ஒளியிழந்து தரையை நோக்கத் துவங்கியது.

அதைக் கண்ட சண்டாமர்க்கர்கள் தனிமையில் அவனைச் சந்தித்து பின்வருமாறு கூறினர்.

அரசே! கவலைப் படாதீர்கள். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர் தாங்கள். இந்தச் சிறிய விஷயத்திற்கு ஏன் இவ்வளவு கவலை? குழந்தையின் செயலில் குற்றம் காணவேண்டாம். தானே சரியாகும். காலம் அனைத்தையும் மாற்றும்.

எங்கள் தந்தை சுக்ராச்சாரியார் வந்தால் இவனை சரி செய்துவிடுவார். அவர் வரும் வரை இவனை வருணபாசத்தால் கட்டி வையுங்கள். வளர வளர இவனது புத்தி மாறும். என்றனர்.

இதைக் கேட்டு ஹிரண்யகசிபு, சரி, இவனைக் கொண்டுபோய் க்ஷத்ரியர்களுக்குரிய கடமைகளை நன்கு உபதேசம் செய்யுங்கள். என்றான்.

அவர்கள் ப்ரஹலாதனை அழைத்துக்கொண்டு மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.

அவனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றிய அனைத்து சாஸ்திரங்களையும் போதித்தனர்.

ப்ரஹலாதன் இயல்பிலேயே வணக்கமுடையவன். குருமார்கள் சொல்லிக் கொடுத்ததைக் கற்றாலும் அவை சரியென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அவர்கள் அறம், பொருள், இன்பம் பற்றி‌ மட்டும் கற்பிக்கிறார்களே. அது விருப்பு வெறுப்புகளுடன் உலக சுகங்களில் உழல்பவர்க்குத்தானே பொருந்தும்?

அவனோ நான்காவதான வீடு எனப்படும் மோக்ஷத்தைக்கூட உதறிவிட்டு பகவான் மேல் அன்பு பூண்டொழுகுபவன். அதனால், அந்தப் பாடங்களை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment