Friday, February 8, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 207 பும்ஸவன விரதம்

மிகவும் கவனமாகக் கதை கேட்டு வரும் பரீக்ஷித் உடனே கேட்டான்.

மஹரிஷியே! திதியின் புதல்வர்களான மருத்துக்கள் இயற்கையில் அசுரர்கள்தானே. அவர்களை ஏன் தேவேந்திரன் தேவர்களாக்கினான்? அப்படிச் செய்ய அவர்கள் என்ன நற்செயல் செய்தனர்? அசுர குணத்தை எவ்வாறு கைவிட்டனர்?

ஸ்ரீ சுகர் தொடர்ந்து பதில் சொல்லத் துவங்கினார்.
ஹிரண்யாக்ஷன், மற்றும் ஹிரண்யகசிபு இருவரையும்‌ இந்திரனுக்கு உதவுவதற்காக பகவான் அழித்தார். கர்மப் பித்து பிடித்தலையும்‌ இந்திரன் தன் தம்பிகளைக் கொன்றுவிட்டான். அவனை அழிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தால்தான் நான் சுகமாக உறங்கமுடியும் என்று நினைத்தாள் திதி தேவி.

அன்புடனும் விநயத்துடனும் புலனடக்கத்துடன் கணவரான கச்யபருக்குப் பணிவிடை செய்தாள். அவரது மனமறிந்து செய்யும் பணிவிடைகளாலும், இனிய பேச்சு மற்றும் ஜாடைகளாலும் அவரைக் கவர்ந்தாள்.

கச்யபர் பேரறிஞராயினும், அவளது பணிவிடைகளில் மெய் மறந்து, உன் விருப்பம் எதுவோ சொல். நிறைவேற்றுகிறேன் என்று வாக்களித்தார்.

தேவீ.. அனைத்து ஜீவன்களின் உருவிலும் இறைவனே விளங்குகிறான். கணவனுக்கு பக்தியுடன் செய்யப்படும் பணிவிடை இறைவனுக்குச் செய்வதேயாகும். எனவே தான் கற்புடை மகளிர் கணவரின் உருவில் இறைவனைப் பூஜிக்கின்றனர். உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறைவேற்றுகிறேன் என்றார்.

திதி கேட்டது என்ன தெரியுமா?
ப்ரும்மஞானியே! இந்திரன் என் இரு மகன்களையும் அழிவித்தான். எனக்குக் குழந்தைகளே இல்லையென்றாகிவிட்டது.

நீங்கள் வரம் தருவதானால் இந்திரனைக் கொல்லக்கூடிய ஆற்றலுடையவனும், மரணமற்றவனுமான ஒரு மகனை எனக்கு அருளவேண்டும் என்றாள்.

கச்யபர் அதிர்ந்துபோனார்.
தவறு செய்துவிட்டேனே என்று கலங்கினார்.

பெண்ணுருவில் வந்த மாயையில் மயங்கினேனே.
இவள்மேல் தவறில்லை. இவள் கணவனான எனக்குப் பணிவிடை செய்தாள். ஆனால், நான் தான் பொறிகளின் வயப்பட்டு மனம் மயங்கி வலுவில் வாக்களித்துவிட்டேன். என்று மனம் வருந்தினார்.

பின்னர் சற்று சினந்து அவளிடம் கூறினார்.
தேவீ, நான் கூறும்‌ விரதத்தை ஒரு வருட காலம்‌ முறைப்படி செய்தால் இந்திரனைக் கொல்லும் மகன் பிறப்பான். அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அவன் தேவர்களின் நண்பனாகிவிடுவான். என்றார்.

திதி தான்‌ முறைப்படி விரதம்‌ இருப்பதாகச் சொல்லி உபதேசம் வாங்கிக்கொண்டாள்.
விரத நியமங்களாக கச்யபர் கூறியவை பின்வருமாறு.

* எந்த ஜீவராசிக்கும் மனம், சொல், செயலால் எவ்விதத் தீங்கும் செய்யலாகாது.

* எவரையும் கடிந்து பேசலாகாது.

* பொய் சொல்லக்கூடாது.

* நகம், தலைமுடி ஆகியவற்றை வெட்டக்கூடாது.

* தூய்மையற்ற எலும்பு முதலியவற்றைத் தொடலாகாது.

* நீரில் மூழ்கி நீராடலாகாது.

* சினம் கூடாது.

* தீயோரிணக்கம்‌ கூடாது.

* அழுக்கு உடையை உடுக்கலாகாது.

* ஒரு முறை அணிந்த அல்லது பிறர் அணிந்த மாலையை அணியலாகாது.

* எச்சில் சோறு, காளிக்கு நிவேதனம் செய்த அன்னம், எறும்பு மொய்த்த சோறு, மாமிசம், ஆகியவற்றை உண்ணக்கூடாது.

* வெளியே செல்லும்போது, அசுத்தமாகவோ, நீராடாமலோ, சந்திவேளையிலோ, தலைமுடியை விரித்துக்கொண்டோ, மங்கள ஆபரணங்கள் இன்றியோ, நாவடக்கமின்றியோ, மேலங்கி அணியாமலோ செல்லக்கூடாது.

* கால் அலம்பாமலும், அசுத்தமாகவும், ஈரக்கால்களுடனும், வடக்கு மற்றும்‌ மேற்கு திசைகளில் தலை வைத்தும் உறங்கக்கூடாது.

* பிற ஆடவர்களுடன் பேசக்கூடாது.

* காலை மாலை சந்தி வேளைகளில் படுத்து உறங்கக்கூடாது.
எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்து, சுமங்கலிகளுக்குரிய மங்கள ஆபரணங்களை அணிந்து, காலை உணவுக்கு முன், பசு, அந்தணன், திருமகள், நாராயணன் ஆகியோரைப் பூஜை செய்யவேண்டும்.

* பின்னர் சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கிப்‌ பூஜை செய்யவேண்டும்.

* கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முகம் கோணாமல் செய்யவேண்டும்.

இந்த விரதத்திற்கு பும்ஸவனம் என்று பெயர். இதை நீ‌ விதி வழுவாது மேற்கொண்டால் நீ விரும்பிய வண்ணம் உனக்கு மகன் பிறப்பான்.
என்று கூறினார்.

திதி தேவி மிகுந்த சிரத்தையுடனும், கவனத்துடனும் பும்ஸவன விரதத்தைக் கடைப்பிடிக்கத் துவங்கினாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment