Wednesday, February 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 214

தன் பக்தர்களான ஜெய விஜயர்கள் தானே ஹிரண்யாக்ஷனும், ஹிரண்யகசிபுவும்.  கால் கடுக்க எப்போதும் நின்றுகொண்டே இருப்பவர்கள். கைங்கர்ய சிரோமணிகள். வாய்ப்பு கிட்டும்போது,  தன்னிஷ்டம் போல்‌ சந்தோஷமாக இருக்கட்டும் என்று பகவான் ஒரு மன்வந்தரத்திற்கு ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

அசரீரி கேட்டதும் தேவர்களும் ரிஷிகளும் நிம்மதியடைந்தனர்.

ஹிரண்யகசிபுவுக்கு  நான்கு புதல்வர்கள். அவர்களுள் கடைசியாகப் பிறந்தவன் ப்ரஹ்லாதன்.

பொதுவாக முளைவிட்டு, செடி வளர்ந்து மலரும்போதுதான் நறுமணம் வரும்.  துளசி மட்டும் சிறியதாக முளை விடும்போதே இலையில் வாசனை வரும். அதுபோல் மஹான்கள் பிறக்கும்போதே பக்தியுடன் பிறக்கிறார்கள். பிற்காலத்தில் மஹானாகப் போகிறார் என்று  அவர்களின் இளவயதிலேயே தெரிந்துவிடும்.


ப்ரஹலாதன் மற்ற அசுரச் சிறுவர்கள் போல் இல்லை. அந்தணர்களிடம் பக்தி, ஒழுக்கம், வாய்மை, புலனடக்கம், அனைவரிடமும் அன்பு, இன்சொல், பிறர் நலம் பேணல் என்று அனைத்து நற்குணங்களும் பூண்டு ஒழுகினான்.

சான்றோரிடம் அடிமை போலவும், ஏழை எளியோரிடம் தந்தை போலவும், தன்னொத்த வயதினரிடம் உடன் பிறப்பைப் போலவும், ஆசார்யரிடம் பக்தனைப் போலவும் பழகினான். அரசனின் பிள்ளை என்ற செருக்கு துளியும் இல்லை.

ஏதேனும் துன்பம் நேர்ந்தாலும் வருந்துவதில்லை. இன்ப துன்பங்களில் சமபுத்தியுடன் விளங்கினான்.

யுதிஷ்டிரா! பகவானின் கல்யாண குணங்களுக்கு எல்லையில்லாதது போல் ப்ரஹலாதனின் கல்யாண குணங்களுக்கும் எல்லையே இல்லை.

சான்றோர்களே இவன் குணத்தைப் பாடுகின்றனர். அசுரர்களின் பகைவரான தேவர்களும்கூட ப்ரஹலாதனைப் பற்றியே எப்போதும் பேசினர்.

நாராயணன் மீது அவன் கொண்டிருந்த எல்லையற்ற அன்பு ஒன்றே போதும் அவன் குணங்களைப் பறை சாற்ற.

பாமர விளையாட்டுக்களை உதறிய ப்ரஹலாதன், அவ்வப்போது கண்களை மூடி இறைவனின் ஸ்வரூபத்தில் நிலைத்துவிடுவான். திடீரென்று பகவத் குணங்களைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணபக்தி என்ற கிரஹத்தால் பீடிக்கப்பட்டு நாமரூபம் உள்ள ப்ரபஞ்சத்தையே மறந்துவிடுவான்.

பகவானின் மடியில் அமர்ந்திருப்பது போன்றே  நினைத்துக்கொண்டிருப்பான். அமர்ந்தாலும் எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் நாராயணன் பெயரையே சொல்லி, பகவானின் நினைவில் ஆழ்ந்து செயல்களை மறந்திருந்தான்.

சிலசமயம், பகவத் விரஹத்தினால் கலங்கி அழுவான். பின்னர் பகவான் எதிரில் வந்துவிட்டதாகக் குதிப்பான். ஹ்ருதயத்தினுள் பகவானைக் கண்டு உரக்கச் சிரிப்பான்.

உலகினர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லை. சிலசமயம் பகவானுடன் தன்வயமாகி அவரது லீலைகளை அனுகரணம் செய்வான். சிலசமயம் மயிர் கூச்செறிந்து,‌ கண்கள் திறந்து நிலை குத்தியிருக்கும். சில‌சமயம் ஆனந்தக் கண்ணீர் வழியும்.

இத்தகைய பக்தனை எங்காவது பார்க்கமுடியுமா? அவனைப்போய் தன் பகைவன் என்றெண்ணினான் ஹிரண்யகசிபு.

யுதிஷ்டிரர் ஆச்சர்யம் மேலிட கேட்டார்.
மஹரிஷியே! இத்தகைய குழந்தையை யாராவது வெறுப்பார்களா? என்ன நடந்தது? விரிவாகச் சொல்லுங்கள் என்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment