Tuesday, February 12, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 210 அசுரப்பிறவி

நாரதர் பக்தி மார்கத்தின் வழிகளை மேலும் விளக்கினார்.

குளவி ஒரு புழுவை எடுத்து வந்து தன் கூட்டில் அடைத்து வைக்கிறது. அந்தப்புழு பயத்தினாலும், த்வேஷத்தாலும் குளவியையே நினைந்து நினைந்து தானும் குளவியாக மாறிவிடுகிறது.

ஸ்ரீ மன் நாராயணனே லீலைகள் புரிவதற்காக ஸ்ரீ க்ருஷ்ணனாக அவதாரம் செய்திருக்கிறார். அவரிடம் பகை கொள்பவனும் அவரையே நினைந்து நினைத்து முடிவில் அவரையே அடைகிறான்.

ஒருவர் இருவரல்லர், பல்லாயிரம் பேர்கள்  காதல், பயம், பகை, நட்பு ஆகிய உணர்வுகளால் பகவானிடம் மனத்தை ஈடுபடுத்தி இறைவனை அடைந்துள்ளனர்.

கோபிகள் காதலாலும், கம்சன் பயத்தாலும், சிசுபாலன், தந்தவக்த்ரன் முதலானோர் பகையாலும், வ்ருஷ்ணி வம்சத்து யாதவர்கள் உறவுமுறையாலும், பாண்டவர்கள் நட்பினாலும், பக்தியால் நாங்களும் பகவானிடம் மனத்தை ஈடுபடுத்தியுள்ளோம்.

வேனனைப் பற்றிக் கேட்டாயல்லவா? அவன் மேற்கண்ட எந்த ஒரு வழியிலும் பகவானிடம் மனத்தைச் செலுத்தவில்லை. எனவே நரகத்தில் வீழ்ந்தான்.

பாண்டு வம்சத்தவனே! சிசுபாலனும், தந்தவக்த்ரனும், பகவானின் மிகவும் நெருங்கிய தொண்டர்கள். ஸனகாதிகளின் சாபத்தால் பதவியை இழந்து பகவானிடம் பகைமை பாராட்டினர்.

யுதிஷ்டிரன் அந்த சாபம் பற்றிக் கேள்வியெழுப்பினார்.

நாரதர் சாபம் பற்றிய விவரங்களைக் கூறினார்.


முன்பொருமுறை ப்ரும்மதேவரின் மானஸ புத்திரர்களான ஸனகாதிகள், தம் விருப்பம்போல் மூவுலகையும் சுற்றி வந்தனர். அவர்கள்  வைகுண்டம் சென்றபோது, துவாரபாலர்கள் அவர்களைத் தடுத்தனர். அதனால் கோபமடைந்த ஸனகாதிகள், அவர்களை அசுரப் பிறவிகள் எடுக்கும்படி சபித்தனர்.

அவர்கள் கீழே விழுவதைக் கண்டு ஸனகாதிகள் இரக்கம் கொண்டு, மூன்று பிறவிகள் இந்தச் சாபத்தை அனுபவித்து விட்டு பின் வைகுண்டம் வாருங்கள் என்றனர்.

அவ்விருவரும்தான் திதிதேவியின் புதல்களாக ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்னும் பெயர்களில் பிறந்தனர்.

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹ வடிவெடுத்தும், ஹிரண்யகசிபுவை நரஸிம்ம உருவெடுத்தும் வதைத்தார்.

பகவானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த ப்ரஹலாதனை அவனது தந்தையான ஹிரண்யகசிபு மிகவும் துன்புறுத்தினான்.

ப்ரஹ்லாதனோ பகவானிடம் உள்ளத்தை நிறுத்தியவன். அமைதியே வடிவானவன். அனைத்திலும் ஸ்ரீ ஹரியையே கண்டவன். அதனால், எவ்வளவு முயன்றும் ஹிரண்யகசிபுவால் ப்ரஹலாதனைக் கொல்ல முடியவில்லை.

அவர்கள் இருவரும் அடுத்த பிறவியில் விச்ரவஸ் முனிவரின் மனைவியான கேசினி என்னும் கைகஸியிடம் ராவணன் மற்றும் கும்பகர்ணனாகப் பிறந்தனர். அவர்களை பகவான் ஸ்ரீ ராமனாக அவதாரம்‌ செய்து கொன்றார்.

அவர்களே இப்போது மூன்றாவதாக உன் சிற்றன்னையின் புதல்வர்களாகப் பிறந்துள்ளனர். ஸ்ரீ க்ருஷ்ணன் சுதர்சன சக்ரம் கொண்டு அவர்களை வதைத்ததும், சாபம் நீங்கப்பெற்று மீண்டும் துவாரபாலகர் பதவியைப் பெற்றனர்.

உடனே பரீக்‌ஷித் கேட்டான். பரம ஸாதுவான பெற்ற பிள்ளையிடம் ஹிரண்யகசிபு ஏன் பகைமை கொண்டான்? அசுர வம்சத்தில் பிறந்த ப்ரஹ்லாதனுக்கு அத்தகைய த்ருடபக்தி எவ்வாறு உண்டாயிற்று?

இதற்கு பதிலாக ப்ரஹலாதனின் கதையை ஸ்ரீ சுகர் விளக்கமாகக் கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment