Saturday, February 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 216

நவவித பக்தி

சண்டாமர்க்கர்கள் ப்ரஹலாதனை எப்படி உனக்கு பகவானைப் பற்றித் தெரியும் என்று விசாரித்தனர்?

ப்ரஹலாதன் மிக அழகாக பதில் உரைத்தான்.

உலகியல் விஷயங்களில் பற்றுக் கொள்பவருக்கே மாயையினால், நான், எனது என்ற எண்ணம் வரும். பரமாத்மாவின் கருணைக்கு ஆட்பட்டவர்களுக்கு  இரண்டாவதாக ஒரு பொருள் தெரிவதில்லை.

என்று சொல்ல, அவர்கள் ஒன்றும் புரியாமல்  திருதிருவென்று விழித்தனர்.

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், பகவான்தான் எனக்கு இந்த புத்தியைக் கொடுத்தான் என்று எளிமையாக முடித்தான்.

காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல்  என் மனம் பகவானை நோக்கி ஈர்க்கப்படுகிறது.
என்றான்.

ஆசிரியர்களுக்கு ஒரு பக்கம் இவன் இப்படிப் பேசினால்  தங்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம். ஒரு பக்கம் மாணவன் சொல்பேச்சு கேட்கவில்லை என்ற கோபம்.

ஒரு பிரம்பை எடுத்துவந்து அடிப்பதைப் போல் மிரட்டி, அதட்டி, உருட்டி, இன்னும் பல உபாயங்கள் செய்து, ப்ரஹலாதனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கூறும் சாஸ்திரங்களை போதித்தனர்.

குறுகிய காலத்திலேயே அனைத்து பாடங்களையும் கற்றுத் தேர்ந்தான் ப்ரஹலாதன்.

அவனை அழைத்துச்சென்று அவன் தாயான கயாதுவிடம் விட்டனர் குருமார்கள்.

கயாது குழந்தைக்கு மங்கள ஸ்நானம்‌ செய்வித்து, பட்டு உடுத்திவிட்டு, மிக அழகாக அலங்கரித்து, ஹிரண்யகசிபுவிடம்  அழைத்துச் சென்றாள்.

ப்ரஹலாதன்  தந்தையைக்  கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

ப்ரஹலாதன் மிகவும் தேஜஸ் மிகுந்தவனாக, அழகான திருமேனியுடன் விளங்குவான். அவனை ஆசையுடன் தூக்கி எடுத்து மடிமேல் அமர்த்திக் கட்டியணைத்து உச்சி மோந்தான் ஹிரண்யகசிபு.

மனதார நீடுழி வாழ்வாய் குழந்தாய்! என்று ஆசீர்வாதம் செய்தான்.

ஹிரண்யகசிபு பெரிய தபஸ்வியாதலால், அவன் மனமகிழ்ந்து செய்த ஆசீர்வாதம் அப்படியே பலித்துவிட்டது ப்ரஹலாதனுக்கு.

துரியோதனனின் ஏச்சு தாங்கமல், பாண்டவர்களை அழிப்பேன். அர்ஜுனை வீழ்த்துவேன் என்று பீஷ்மர் சபதம் செய்தபோது பாண்டவர்கள் நடுங்கினர். அப்போது கண்ணன் மிகவும் தந்திரமாக போர்ப் பாசறையில் திரௌபதியை அழைத்துக் கொண்டு போய் பீஷ்மரை வணங்கச் செய்தான். பீஷ்மர் தீர்க சுமங்கலி பவ என்று ஆசீர்வாதம் செய்ய, கண்ணன் ததாஸ்து என்று முடித்தான். அவரது ஆசீர்வாத பலத்தினால் மஹாபாரதத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டபோதும், பாண்டவர்கள் ஐந்துபேரும் தப்பினர்.

அதே போல், தந்தையும் மிகப்பெரிய தபஸ்வியுமான  ஹிரண்யகசிபுவின் ஆசீர்வாதம் பின்னாளில்  அவனுக்கெதிராகவே வேலை செய்தது.

குழந்தையின் கமல முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஹிரண்யகசிபு, அவனிடம் கேட்டான்.

குழந்தாய்! எல்லாப் பாடங்களையும் இவ்வளவு சீக்கிரமாகவே  கற்றுத் தேர்ந்துவிட்டாயாமே? எங்கே நீ கற்றுக்கொண்டவற்றுள் சிறந்ததும் உனக்குப் பிடித்தமானதையும் கூறு பார்க்கலாம். என்றான்.

முதல் முறை கேட்டபோதே ஹரி சரணத்தை ஆஸ்ரயிக்கவேண்டும் என்று சொன்னோமே. தந்தைக்குப் புரியவில்லை போலும். எப்படி ஆஸ்ரயிப்பது என்று சொன்னால்தானே தெரியும் என்று நினைத்தான் குழந்தை.

உடனே சற்றும் தயங்காமல், அப்பா! நாராயணனிடம் பக்தி செய்யும் முறைகள் ஒன்பது.


ச்ரவணம் - பகவான்‌‌ ஸ்ரீ ஹரியின்  கதைகளைக் கேட்பது,

கீர்த்தனம் - அவரது பெயரையும் புகழையும் பாடுவது,

விஷ்ணோ: ஸ்மரணம் - அவரை எப்போதும் நினைத்து க் கொண்டிருப்பது, தியானம் செய்வது,

பாதஸேவனம் - அவரது திருவடி சேவை,

அர்ச்சனம் - அவரது மூர்த்திக்குப்  பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்வது

வந்தனம் - அவரை வணங்குவது

தாஸ்யம் - செய்யும் ஒவ்வொரு வேலையையும் பகவானின் உகப்பிற்காக மட்டும் செய்வது

ஸக்யம் - அவரை நண்பராக நினைத்துப் பழகுவது

ஆத்ம நிவேதனம் - தன்னையே அவரிடம் ஒப்படைத்து, ஒரு ஜடப்பொருள் போல் தன் வாழ்வு பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது

என்று மிக அழகாக விளக்கினான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment