Thursday, February 7, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 206 கச்யப வம்சம்

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கச்யபரின் வம்சத்தைக் கூறலானார்.


ஸவிதாவின் மனைவி ப்ருச்னி என்பவள், ஸாவித்ரி என்ற மந்திர தேவதையையும், பூ:, புவ:, ஸுவ: ஆகியவற்றின் வ்யவஹார தேவதைகளையும், ரிக், யஜுர், ஸாமம் முதலிய வேதங்களின் தேவதைகளையும், அக்னிஹோத்ரம், நிரூடசுபந்தம், சோமம், சாதுர்மாஸ்ய யக்ஞம், பஞ்சமஹா யக்ஞம் ஆகியவற்றின் தேவதைகளைப் பெற்றெடுத்தாள்.

பகனின் மனவி ஸித்தி என்பவள், மஹிமா, விபு, ப்ரபு ஆகிய மகன்களையும், ஆசிஷ் என்ற பெண்மகவையும் பெற்றாள். அந்தக் குழந்தை மிகுந்த அழகும், ஒழுக்கம் உடையவளாகத் திகழ்ந்தாள்.

தாதாவிற்கு குஹூ, ஸினீவாலி, ராகா, அனுமதி என்று நான்கு‌ மனைவிகள். இவர்களுக்கு ஸாயம், தர்சன், பிராதன், பூர்ணமாஸன் ஆகியமகன்கள் பிறந்தனர்.

தாதாவின் சகோதரன் விதாதா. அவனது மனைவி க்ரியா. அவர்களது மகன்கள் புரீஷ்யர் என்ற ஐந்து அக்னிகள். வருணனின் மனைவி சர்ஷணீ. ப்ரும்மாவின்‌ மகனான ப்ருகு மஹரிஷி வருணனுக்கு மீண்டும் பிறந்தார்.

வால்மீகியும் வருணனின் மகனே. ஊர்வசியைப் பார்த்து மயங்கிய மித்ரன், வருணன் ஆகியோரிடமிருந்து தோன்றியவர்கள்‌ அகஸ்தியரும், வசிஷ்டரும். அதிதியின் பத்தாவது மகனான மித்ரனின் மனைவி ரேவதி. அவர்களுடைய மகன்கள் உத்ஸார்கன், அரிஷ்டன், பிப்பலன் ஆகியோர்.

அதிதியின் பதினோராவது மகன் இந்திரன். அவனது மனைவி புலோமனின் பெண் சசீதேவி. அவளது மகன் ஜயந்தன், ரிஷபன், மீட்வான் ஆகியோர்.

பகவான் நாராயணனே வாமன மூர்த்தியாக அதிதியிடம் அவதாரம் செய்தார். அவர் மூன்றடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்தார். அவரது மனைவி கீர்த்தி. அவர்களது மகன் ப்ருஹத்சுலோகன். அவருக்கு ஸௌபகன் முதலிய பல குழந்தைகள் பிறந்தனர்.

வாமன மூர்த்தியைப் பர்றியும், அவரது லீலையையும் பிறகு சொல்கிறேன்.
கச்யபரின் இரண்டாவது மனைவி திதி. அவளது வம்சத்தில்தான் பரம பக்தர்களான ப்ரஹ்லாதனும், பலியும் பிறந்தனர்.

திதிக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.
ஹிரண்யாக்ஷனைப் பற்றி மூன்றாம் ஸ்கந்தத்தில் பார்த்தோம்.

ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது. அவளுக்கு ஸம்ஹ்ராதன், அனுஹ்ராதன், ஹ்ராதன், ப்ரஹ்லாதன் என்ற நான்கு புதல்வர்கள். அவளது தங்கை ஸிம்ஹிகை விப்ரசித் என்பவனை மணந்து ராகுவைப் பெற்றாள்.

அமுதத்தைப் பருகுவதற்காக தேவ வரிசையில் அமர்ந்த ராகுவின் தலையை மோஹினி அவதாரம் செய்திருந்த விஷனு பகவான் அறுத்துவிட்டார்.

ஸம்ஹ்ராதனின் மனைவி கிருதி. அவளது மகன் பஞ்சஜனன்.
ஹ்ராதனின் மனைவி தமனி. அவள் வாதாபி, இல்வலன் என்னும் இரு பிள்ளைகளைப்‌ பெற்றாள். இல்வலன் தன் தம்பியான வாதாபியைச் சமைத்து அகஸ்தியருக்குப் போட்டான்.

அனுஹ்ராதனின் மனைவி ஸூர்மி. அவளது மகன்கள் பாஷ்கலன், மஹிஷாஸுரன் ஆகொயோர். ப்ரஹ்லாதனின் மகன் விரோசனன். அவனது மனைவி தேவிக்குப் பிறந்தவன் பலி.

பலியின் மனைவி அசனா. அவளது மகன்கள் பாணன் முதலான நூற்றுவர். பாணன் பரமேஸ்வரனை ஆராதித்து அவரது ப்ரமத கணங்களின் தலைவன் ஆனான். இன்றும் பரமேஸ்வரன் பாணாசுரனின் நகரத்திற்குக் காவல் நிற்கிறார்.

ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷனைத் தவிர திதிக்கு 49 புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் மருத்துக்கள் ஆவர். அவர்கள் மக்கட்பேறற்றவர்கள். இந்திரன் தேவ பதவி கொடுத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment