Tuesday, February 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 205 சித்ரகேது -5

பரமேஸ்வரனை ஏளனமாகப் பேசிய சித்ரகேதுவை பார்வதிதேவி அசுரனாகப் பிறக்கும்படி சாபமிட்டாள்.

ஞானம் வந்த பின்னர் உடல் ஒரு பொருட்டல்லவே! சித்ரகேது கலங்கவில்லை.

தாயே! நீங்கள் அளித்த சாபத்தை மகிழ்வோடு ஏற்கிறேன்.
அஞ்ஞானத்தில் உழல்பவன் இவ்வுலக வாழ்க்கையில் மயங்கி இன்பதுன்பங்களை அனுபவிக்கிறான்.

இவ்வுலக வாழ்வே மாயையின் பெருவெள்ளம். இதில் சாபமென்ன? வரமென்ன? ஸ்வர்க நரகங்கள்தான் ஏது? இன்ப துன்பங்கள் ஏது?

இறைவன் பரிபூரணன். அவரே மாயையைத் தோற்றுவிக்கிறார். அதிலிருந்து விடுவிக்கவும் செய்கிறார். ஆனால் அவருக்கு மாயையின் தொடர்பு இல்லை.

அவருக்குப் பட்சபாதம் இல்லை. தூயவர். அவருக்கு பற்றுமில்லை. அதனால் தோன்றும் கோபமும் இல்லை.

கிடைப்பது எப்பிறவியானாலும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் உத்தம பதிவிரதை. தாங்கள் சினத்தை விட்டு எனக்கு அருள் செய்யுங்கள். சாபவிமோசனத்திற்காக அல்ல. நான் தவறு செய்தேன் என்று நீங்கள் நினைப்பதால், அதைப் பொறுத்தருளுங்கள்.

என்று கூறிவிட்டு, பதிலைக்கூட எதிர்பாராமல் தன் விமானத்தில் ஏறிப் புறப்பட்டுச் சென்றான்.

அப்போது பரமேஸ்வரன் பார்வதியிடம், கூடியிருந்த ரிஷிகள் கேட்கும் வண்ணம்,
ஸௌபாக்யவதீ! ஸ்ரீமன் நாராயணனின் பக்தர்களையும், அவர்களது பெருமைகளையும் பார்த்தாயா? பகவானைத் தஞ்சமடைந்தவர்களுக்கு ஸ்வர்கம், மோட்சம், நரகம், எல்லாம் ஒன்றுதான். அவர்களின் பெருமையை நான், ப்ரும்மா, ஸனகாதிகள் இன்னும் பலர் உள்பட எவரும் அறியார்.

சித்ரகேது பகவானின் அன்புத் தொண்டன். எதிலும் சம நோக்குடையவன். இவன் இப்படிப்‌ பேசியதில் வியப்பேதுமில்லை. என்றார்.

சித்ரகேது பார்வதியின் சாபத்திற்கு எதிர்சாபம் கொடுக்கத் தகுதி படைத்தவன்தான். ஆனாலும், சாபத்தைத் தலை வணங்கி ஏற்றான். இதுவே சான்றோர் குணம்.

இந்த சித்ரகேது பின்னர் த்வஷ்டாவின் வேள்வித்தீயினின்று வ்ருத்ராசுரனாய் வெளிப்பட்டான். அசுரனாக இருந்தபோதிலும், பகவத் பக்தியும், ஸ்வரூப ஞானமும் பெற்றிருந்தான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார், அசுரனாய் இருந்தும் வ்ருத்திராசுரனுக்கு பக்தி வந்தது எப்படி என்று புரிந்ததா?
பெருமனம் படைத்த சித்ரகேதுவின் இந்தப் புண்ணியக் கதை அவனுடைய கதை மட்டுமல்ல. அனைத்து பகவத் பக்தர்களின் பெருமைகளையும்‌ கூறுவதாகும். இதைக் கேட்பவன் எல்லா ஸம்சார பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment