Thursday, February 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 215

கற்றதில் உயர்ந்தது

நாரத மஹரிஷி கூறலானார்.

அசுரர்களின் குரு சுக்ராசார்யார். அவரது மகன்களான  சண்டன், அமர்க்கன் இருவரும் அரண்மனைக்கருகிலேயே பாடசாலை அமைத்துக் கொண்டனர்.

ப்ரஹலாதன், அவனது சகோதரர்கள் மற்றும் ராஜ வம்சத்து குழந்தைகள் அனைவரும் அந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களும் செவ்வனே அனைத்து சாஸ்திரங்களும் கற்றுக்கொடுத்தனர்.
ப்ரஹலாதன் ஏகசந்த க்ராஹி என்பதற்கேற்ப ஒரு முறை கேட்டதுமே அப்படியே பாடங்களை ஒப்பித்தான்.

ஆனால், அவனுக்குப் பாடங்கள் சரியாகப் படவில்லை.

அவை ப்ரும்மத்தைப் பற்றிய உண்மைப் பாடங்களாக இல்லாமல், தான், பிறர் என்ற வேற்றுமையை வளர்க்கும் பொய்ப்பாடங்களாக இருந்தன.

சிலநாள்கள் கழித்து, ஹிரண்யகசிபு பாடசாலையிலிருந்து திரும்பியிருந்த ப்ரஹலாதனை மிகவும் ஆசையுடன் மடியில் ஏற்றி வைத்துக்கொண்டு கேட்டான்.

குழந்தாய்! நீ இவ்வளவு நாள்கள் படித்தாயே. அதில் எதை  உயரந்த விஷயம் என்று நினைக்கிறாய்? சொல் பார்க்கலாம் என்றான்.

ப்ரஹலாதன் சற்றும் தயங்காமல் சொன்னான்.

அப்பா! உலகில் உள்ளவர் எல்லார்க்கும் நான் எனது என்ற பற்று வளரும்படியாக பாடங்கள் இருப்பது வருத்தமாய் இருக்கிறது. உண்மையில் நன்மை தருவது எது தெரியுமா? இந்த வீடு வாசல், உறவுகள் எல்லாம் என்னுடையது என்ற பற்றே ஜீவன்களின் தாழ்மைக்குக் காரணம். அவர்கள் பற்றை விடுத்து வைராக்யத்துடன் காட்டுக்குச் சென்று ஸ்ரீஹரியைச் சரணடையவேண்டும். அதுவே உயர்ந்தது என்றான்.

தந்தையின் நியமனப்படியே பாடத்திட்டம் இருப்பதால், அவரிடம் சொல்லி மாற்றலாம் என்று நினைத்தான் போலும்.

எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேலாக பகவன் நாம ஒலியே கேட்காத வண்ணம் உலகை ஆண்ட ஹிரண்யகசிபு, இப்போது தன் பாசத்திற்குரிய மகன் வாயிலாக இறைவன் புகழைக் கேட்டான்.

ஆனால், அந்தோ..ஆசிரியர்களால் குழந்தையின் மனம் கெடுக்கப்படுகிறதே என்றெண்ணினான்.

விஷ்ணுவின் பக்தர்கள் யாரோ பாடசாலையில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள்தான் குழந்தைகளுக்கு போதிக்கிறார்கள் என்று நினைத்தான்.

சண்டாமர்க்கர்களை அழைத்து, குழந்தைக்கு தீய பாடங்களை எவரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறு நிகழா வண்ணம் இவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களோடு ப்ரஹலாதனை அனுப்பிவிட்டான்.

சண்டாமர்க்கர்களுக்குத் தலை சுற்றியது.
ப்ரஹலாதனை அழைத்து விசாரித்தனர்.

குழந்தாய்! பொய் சொல்வது தவறு. உண்மையைச் சொல். உனக்கு மட்டும் ஏன் இந்த கெட்ட புத்தி? மற்ற எந்தக்‌ குழந்தையும் இவ்வாறு சொல்லவில்லையே. நாங்கள் சொல்லிக் கொடுப்பதைத்தானே கற்றுக்கொள்கிறாய்? வேறெவராவது வந்து உனக்கு ரகசியமாகச் சொல்லிக்கொடுக்கிறார்களா? ஏன் இந்த புத்தி மயக்கம்? என்று பலவாறு விசாரிக்க,

மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையைப் பேசுவதில் தீதென்ன இருக்கிறது என்று யோசித்தான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment