Tuesday, February 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 213 ஹிரண்யகசிபுவின் ஆட்சி

ஹிரண்யகசிபு கேட்ட வரங்கள் அனைத்தையும் ப்ரும்மதேவர் அளித்தார்.


அவன் கேட்ட வரங்கள் மிகவும் ஆபத்தானவைதான். ப்ரும்மாவை வணங்கிவிட்டு அவரையே அவமானப்படுத்துவதுபோல், உமது படைப்பினால் மரணம் நேரக்கூடாது என்று வேண்டினான் அவன்.

 ப்ரபஞ்சம் முழுவதுமே ப்ரும்மாவின் படைப்பு, அவருக்கு மேற்பட்ட தலைவர் இல்லையென்று நினைத்தானோ?

ப்ரும்மாவைப் படைத்தவர் பகவான் என்பதை அறியானோ?

அல்லது ஏற்கனவே த்வாரபாலகனாக இருந்தமையால், பகவானைப் பார்க்கவேண்டும், அவர் கையாலேயே மடிய வேண்டும் என்ற ஆசையால், வேறொருவரால் மரணம் வேண்டாம் என்று நினைத்தானோ?

காரணம் எதுவாயினும் கேட்டுவிட்டான். ப்ரும்மா ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சி, இப்போது அருள் செய்யக் கடமைப்பட்டுவிட்டார்.

எனவே, எவ்வளவு புத்திசாலித்தனமாக  வரம் கேட்டாலும், அதிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவனை அழிப்பது பகவானுக்கு வெகு சுலபம் என்று நினைத்து அசுரன் கேட்ட எல்லாவற்றிற்கும் தலையசைத்துவிட்டு, மீண்டும் அவனுக்கு ஏதேனும் நினைவுக்கு வருவதற்குள் தப்பித்துக்கொள்வோம்  என்று மறைந்துவிட்டார்.

இப்போது ஹிரண்யகசிபுவின் உடல் எல்லையற்ற வலிமை உடையதாயிற்று. தம்பி இறந்ததை நினைத்து நினைத்து பகவானிடம் மென்மேலும் பகையை வளர்த்துக்கொண்டான்.


நாட்டுக்குத் திரும்பியவன், மூவுலகங்களையும் வென்றான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷ, கின்னரர்கள், பித்ரு கணங்கள், பிசாசர்கள், மற்றுமுள்ள அனைத்து ப்ராணிகளின் தலைவர்களையும் வென்றான். எண்டிசை பாலகர்களின் சக்தியையும் பதவிகளையும் பறித்துக்கொண்டான்.

ஆலயங்கள் அனைத்திலும் ஹிரண்யகசிபுவின் உருவம்‌ ப்ரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. வேத மந்திரங்கள் அவனுக்கேற்றவாறு மாற்றி உச்சரிக்கப்பட்டன.‌ அனைத்து உலகங்களிலும் யார் என்ன நல்ல காரியங்களைச் செய்தாலும், அவற்றின் பலன் ஹிரண்யகசிபுவை அடையும்படி செய்யப்பட்டது.

புதிதாகத் தோன்றிய தலைமுறையினருக்கு பகவான் என்றாலே ஹிரண்யகசிபுதான் என்பதாக உபதேசிக்கப்பட்டது. எந்த இடத்திலும் பகவான் நாராயணனின் பெயரோ, மற்ற தேவர்களின் பெயரோ உச்சரிக்கப்படாத வண்ணம் அனைத்துமே மாறிற்று.

பின்னர் ஸ்வர்கத்திலேயே சென்று வசிக்கலானான்.
வேள்விகளில் தேவர்களுக்குத் தரப்படும் அவியுணவையும் தானே ஏற்றான்.

அவன் விரும்பிய வண்ணம் உலகங்கள் மாறின.
எல்லா விதமான சுகங்களையும், அற்புதப் பொருள்களையும் கடல்களும், மலைகளும் வாரிக் கொடுத்தன. புலன்களுக்கு அடிமைப்பட்டவனாக அனைத்தையும் ஆசைதீர அனுபவித்தான்.

இவ்வாறு எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேல்  ஹிரண்யகசிபுவின் ஆட்சி நீடித்தது.

ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியால் மிகவும் வருந்திய திக்பாலர்களும், மக்களும் பகவானைச் சரண் புகுந்தனர். மனத்திற்குள்ளாகவே துதிக்கலாயினர்.

அவர்கள் பலநாள்கள் புலன்களை அடக்கி மனத்தை ஒருமுகப்படுத்தி, உணவும் உறக்கமும் துறந்து தம்மைக் காக்கும்படி  பகவானை வேண்டினர்.

அப்போது ஒரு நாள், அசரீரி கேட்டது.

தேவர்களே! ஸாதுக்களே! பயம் வேண்டாம். எனக்கு இந்த அசுரனைப் பற்றித் தெரியும். சிறிது காலம் பொறுத்திருங்கள். நானே அவனை அழிப்பேன்.

எப்பேர்ப்பட்டவனாக இருப்பினும் தேவர்கள், பசுக்கள், அந்தணர்கள், சாதுக்கள், வேத தர்மம் ஆகியவற்றில் பகை கொள்பவன் விரைவிலேயே அழிவான்.

ஹிரண்யகசிபு மஹாத்மாவான தன் மகன் ப்ரஹ்லாதனுக்கே துன்பம் இழைக்க முற்படுவான். அப்போது நானே அவனை அழிப்பேன்.
என்பதாக அசரீரி ஒலித்தது.

இதைக் கேட்ட தேவர்களுக்கு மனத்தில் ஓர் ஐயம் எழுந்தது. எழுபத்தோரு சதுர்யுகங்களாக அசுரனிடம் வதைபடுகிறோமே. நாங்களும் பகவானின் குழந்தைகள்தானே. நாங்கள் சாதுக்கள் இல்லையா? எம்மைக் காக்க இறைவன் வரலாகாதா? ப்ரஹலாதனை ஹிரண்யகசிபு துன்புறுத்தும்போது மட்டும்தான் இறைவன் வரவேண்டுமா? என்பது.

இந்த தேவர்களைத் துன்புறுத்துவதுபோல், ப்ரஹலாதனை இன்னும் பல மடங்கு துன்புறுத்தப்போகிறான். தேவர்கள் இவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போது ஹிரண்யகசிபுவின் அழிவை விரும்புகின்றனர்.

ஆனால், தன்னைக் கொல்லத்துணியும்  தந்தையை அழிக்கும்படி ப்ரஹலாதன் ஒருபோதும் நினைக்கக்கூட மாட்டான் என்பதாலேயே அவனுக்காக பகவான் நேரில் வருகிறார். அத்தகைய சுத்த சாத்வீகம் நிறைந்த பக்தன் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment