Monday, February 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 212 ஹிரண்யகசிபுவின் தவம்

ஹிரண்யாக்ஷன் இறந்துபட்ட துக்கத்தில் ஆழ்ந்துபட்ட அவனது மனைவி, மக்கள், மற்றும் தாயான திதிதேவியை சமாதானப்படுத்தினான் ஹிரண்யகசிபு.

ஒரு இறந்துபட்டவர் வீட்டின் உறவினர் வெகுநேரம் சமாதானம் ஆகாமல், ஸம்ஸ்காரங்களையும் செய்யாமல் அழுது கொண்டிருந்த போது, யமதர்மராஜனே ஒரு சிறிய குழந்தை உருவில் வந்து ஞானத்தை போதித்த கதையை ஹிரண்யகசிபு தன் உறவினர்களுக்குக் கூறினான்.

பலவிதமான உவமைகளுடனும், கதைகளுடனும் நிலையாமையை விளக்கிய ஹிரண்யகசிபு, தான் மட்டும் மரணமில்லாமல் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

தனக்குப் பகைவனே இருக்கக்கூடாது. உலகங்கள் அனைத்திற்கும் தானே தனியொரு அரசனாக விளங்கவேண்டும். என்பதே அவனது எண்ணம்.

அதற்காக மந்தரமலையின் தாழ்வறைக்குச் சென்று இரண்டு கைகளையும் உயர்த்தி, கண்களை உச்சியில் நிறுத்தி, கால் கட்டைவிரலை மட்டும் தரையில் ஊன்றி, மிகக் கடுமையாகத் தவம் செய்தான்.

அவன் தவம் செய்யப்போனதும், தேவர்கள் தத்தம் பதவிகளில் அமர்ந்தனர்.

நெடுங்காலம் செய்த தவத்தால், அவனது உச்சந்தலையிலிருந்து  எழும்பிய அக்னி, மூவுலகங்களையும் எரித்தது.

பூமி முதலான அனைத்து லோகங்களும் ஆடத்துவங்கின. விண்ணுலகம் வரை அக்னி படர்ந்தது. அதனால், தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ப்ரும்மாவை நோக்கிச் சென்றார்கள்.

அவரிடம், ஹிரண்யகசிபுவின் தவத்தை அமைதிப்படுத்துங்கள்  என்று வேண்டினர்.

மேலும், அவன் மூவுலகிற்கும் தலைவனாகி, ப்ரும்மாவான தங்கள்  பதவியைப் பறிப்பதற்காகவே தவம் செய்கிறான். அவன் தலைவனானால், உலகில் தீமை பெருகும். எனவே, சிந்தித்து ஆவன செய்யுங்கள் என்று வேண்டினர்.

இவ்வாறு அவர்கள் வேண்டியதும், ப்ரும்மா தன் வாகனமான  அன்னப்பறவை மீதேறி,  ப்ரஜாபதிகளை அழைத்துக்கொண்டு ஹிரண்யகசிபுவைக் காணச் சென்றார்.

அவனது தவத்தைக் கண்டதும் ப்ரும்மாவிற்கே இப்படி ஒரு கடுந்தவமா என்று  ஆச்சர்யம் மேலிட்டது.

பின்னர், ஹிரண்யகசிபுவைப் பார்த்து,

கச்யபர் மைந்தனே! எழுந்திரு! உன் தவத்தின் பயனை அளிக்கவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.

 நீ செய்யும் இந்தத் தவம் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இவ்வாறான கடுந்தவத்தை இதுவரை எவருமே செய்ததில்லை.

 உன் இதய வலிமை மிகவும் போற்றுதலுக்குரியது. உன் உடலை எறும்புகள் அரித்துவிட்டன. என்றாலும் உயிர் போகவில்லை. தண்ணீர்கூட அருந்தாமல் நூறு வருடங்கள் எவன் உயிருடன் இருப்பான்? உனக்கு என்ன வேண்டும் சொல்.

நீ மரண தர்மம் உள்ள மனிதன். எனவே, மரணமற்ற தன்மை தவிர்த்து, நீ எது வேண்டினாலும் தருவேன். என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, எறும்புகள் மொய்த்துத் தின்றபின் எஞ்சியிருக்கும் ஹிரண்யகசிபுவின் உடலின் மீது தன் கமண்டல நீரைத் தெளித்தார்.


அந்தப் புனித நீர் பட்டதும், மூங்கிற்புதற்களும், புற்களும் முளைத்திருந்த அந்தப் புற்றிலிருந்து ஹிரண்யகசிபு, வெளிப்பட்டான். முழுமையான, வஜ்ரம்போல்  வலிமையான, ஒளி பொருந்திய உடலைப் பெற்று, அவனது புலன்கள் உணர்வு பெற்றன. இளம் பருவத்தினனாக வெளியில் வந்தான்.

அன்னப்பறவை மேல் விளங்கிய ப்ரும்மதேவரை விழுந்து வணங்கினான். பின்னர் இரு கரம் கூப்பி அவரைத் தொழுதான்.

தாங்களே இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து, அழிக்கிறீர்கள். முக்குணங்களின் இருப்பிடம் தாங்களே. முதலில் தோன்றியவர். தாவர ஜங்கமங்கள் நிறைந்த ப்ரபஞ்சத்தின் மூலகாரணம் தாமே ஆவீர்.

மனத்தின் உயிரோட்டம், பஞ்ச பூதங்கள், புலன்கள், அவற்றின் குணங்கள், வாசனைகள் அனைத்தையும் செயல்படுத்தும் மஹத் தத்வம் தாங்கள்தான்.

வேதங்களின் இருப்பிடம் தாங்கள்தான். தாங்கள் தான் புராண புருஷர். ஒளிவீசும் இந்த ப்ரும்மாண்டம் தங்கள் வயிற்றினுள் இருக்கிறது. அருள் செய்வதில்  தங்களுக்கு இணை எவருமில்லை.

நீங்கள் எனக்கு வரம் தருவதாய் இருந்தால், தாங்கள் படைத்த எந்த ஜீவராசியாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது.

உள்ளிலோ, வெளியிலோ, மற்ற ப்ரஜாபதிகளின் ச்ருஷ்டிகளாலோ, அஸ்திர, சஸ்திரங்களாலோ, மண்ணிலோ, விண்ணிலோ, மனிதர்களாலோ,‌ விலங்குகளாலோ, உயிரற்றவைகளாலோ, உயிருள்ளவைகளாலொ, தேவர்கள், அசுரர்கள், முதலியவர்களாலோ,  எனக்கு மரணம் நிகழக்கூடாது.

எல்லா உயிர்கட்கும் நானொருவனே சக்ரவர்த்தியாக விளங்கவேண்டும். இங்குள்ள தேவர்களும், லோகபாலர்களும் தங்களைக் கொண்டாடுவதுபோல், என்னைக் கொண்டாடவேண்டும். எனக்கு அஷ்டமா சித்திகளும்‌ வேண்டும்‌.

என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment