Thursday, January 31, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 203 சித்ரகேது - 3

பிள்ளை இறந்த துக்கத்தில் மூழ்கியிருந்த சித்ரகேதுவுக்கு ஆங்கீரஸ மஹரிஷியும், நாரத மஹரிஷியும் தத்வோபதேசம் செய்தனர்.

ஆங்கீரஸ் கூறினார்.
நீ பிள்ளைப்பேறின்றிக் கலங்கியிருந்தபோது உனக்காக யாகம் செய்த ஆங்கீரஸ் தான் நான்.

நீ பரம பக்தன். இப்போது அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறாய். நான் முதலில் வந்தபோதே உனக்கு ஞானத்தை உபதேசம் செய்திருக்கலாம்தான். ஆனால், அப்போது உன் மனம் பிள்ளைப் பேற்றிற்காக ஏங்கிக்கொண்டிருந்தது. எனவே நீ வேண்டிய வரத்தை மட்டும் அளித்தேன்.

இப்போது நீ ஒரு அஞ்ஞானி படும் துன்பத்தை அனுபவிக்கிறாய்.
உண்மையில் செல்வச் செழிப்பு, அரசுரிமை, படைகள், கருவூலங்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைத்தும் அழியக்கூடியவை.

இவையனைத்தும்‌ ஒரு ஜீவனின் துக்கம், பயம், வருத்தம், மோஹம் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன.

ஒரு நேரம்‌ இருப்பது போலிருந்து இன்னொரு சமயம் மறையக்கூடியவை. முற்பிறவி கர்ம வாஸனைகளால் தூண்டப்பட்டு மனம் இவற்றை நாடுகிறது.

இந்த உலகியல் விஷயங்களில் உலா வரும் உன் மனத்தை வசப்படுத்து. அமைதி கொள். உன் உண்மை ஸ்வரூபத்தை உணர். காட்சி தரும் இவ்வுலகம் உண்மை என்றெண்ணாதே.

அதிலுள்ள நம்பிக்கையை இறைவன்பால் வைத்து மனத்தை ஒருமுகப்படுத்து
என்றார்.

நாரதர் சித்ரகேதுவைப் பார்த்து,
அரசே, நான் உனக்கு உபநிஷத்தை உபதேசம்‌ செய்கிறேன். இதை முறைப்படி ஏழே நாள்கள் ஜபம் செய்தால்‌ போதும். ஸ்ரீமன் நாராயணனை நேரில்‌ காணலாம். என்றார்.

பின்னர், இறந்துபோன குழந்தையின் ஜீவாத்மாவை, சோகத்தில் தவிக்கும்‌ சித்ரகேதுவுக்கும் அவனது உறவினர்க்கும் நேராகக் காட்டினார்.

அதைப் பார்த்துப் பேசலானார்.
ஹே ஜீவாத்மாவே! உனது தாய் தந்தையர் உன்னைப் பிரிந்ததால் அடையும் வேதனையைப் பார். நீ இந்த உடலில் திரும்பவும் வந்து சேர்.

மீதியுள்ள உன் ஆயுள்காலத்தை உன் பெற்றோருடனும், சுற்றத்தாருடனும் மகிழ்ச்சியாகக் கழிப்பாய். அரசுகட்டிலில் நீ அமரலாம். என்றார்.

அதற்கு அந்த ஜீவன் பின்வருமாறு பேசிற்று.

தேவரிஷியே! நான் கர்ம வினையால் தேவன், மனிதன், விலங்கு, பறவை எனப் பல பிறவிகள் எடுத்துள்ளேன். இதில் எந்தப் பிறவியின் பெற்றோர் இவர்கள்?

பற்பல பிறவிகளில் அனைவரும் சகோதரர்கள், உறவினர், பகைவர் , நடுநிலையாளர் என்று பலவாறான உறவுகளில் இருந்திருக்கிறோம்.

விற்கும், வாங்கும் பொருள் ஒருவனிடமிருந்து மற்றவனுக்குக் கைமாறுவதுபோல் ஜீவன் பற்பல பிறவிகளில் பிறக்கிறான்.

எத்தனை காலம் ஒருவருடன் உறவு நீடிக்கிறதோ, அதுவரை அவர் தன்னுடையவர் என்ற எண்ணம் இருக்கிறது.

ஜீவாத்மா பற்றற்றவன். அழிவில்லாதவன். வாழும் வரையே அந்த உடல் என்னுடையது. இறந்த பிறகு, அவ்வுடலில் ஜீவனுக்கு எந்தப் பற்றும் கிடையாது.

ஜீவாத்மா எந்தவித ஒட்டுதலுமின்றி தனித்திருப்பவன். என்றது.
குழந்தையான ஜீவாத்மாவின் இப்பேச்சைக் கேட்டு அனைவரும் வியந்தனர். பின்னர் சோகத்தை விட்டு குழந்தைக்கு அந்திமக் கடன்களை செய்தனர்.

மற்ற மனைவியருக்கு சிசுஹத்தி தோஷம்‌ வந்தது. அதனால் பொலிவை இழந்து அருவறுக்கத்தக்க தோற்றத்துடன் மாறினர்.

பின்னர் ஆங்கீரஸ மஹரிஷியின் வழிகாட்டுதலின்படி தோஷம்‌ நீங்க யமுனைக் கரையில் ப்ராயசித்தம்‌ செய்தனர்.

சித்ரகேது யமுனையில் குளித்து முறைப்படி கர்மங்களை ‌முடித்து முனிவர்களை வணங்கினான். பின்னர் மௌனவிரதம்‌ ஏற்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment