Wednesday, January 30, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 202 சித்ரகேது - 2

வாராது வந்த மாமணி.

பல வருடங்களாக ஏங்கி ஏங்கித் தவித்த பிள்ளைச் செல்வம். சித்ரகேது விற்குத் தலைகால் புரியவில்லை. க்ருதயுதியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டான்.

மற்ற மனைவியர் அனைவர்க்கும் மன்னன் தங்களைச் சற்றும் மதியாதது கண்டு பொறாமைத்தீ வளர்ந்தது.

இனி இந்த க்ருதத்யுதி நம்மைப் பணிப்பெண்களைப் போல் நடத்துவாள். கணவனும் நம்மை நினைக்கவே மாட்டான். அரசிகளாய் இருந்தும் அநாதைகள்போல் ஆகிவிட்டோமே. வேலைக்காரிகளே தேவலாம். நாம் இப்படி ஒதுக்கப்படுகிறோமே என்று வருந்தினர்.

மனம் புழுங்கிய அப்பெண்கள், குழந்தைக்கு நஞ்சைக் கொடுத்தனர். அந்தோ.. பச்சிளம் குழந்தை எப்படித் தாங்கும்?

வெகுநேரமாகக் குழந்தை அசைவின்றி உறங்குவதைக் கண்ட க்ருதத்யுதி, பணிப்பெண்ணை அழைத்து குழந்தையைத் தூக்கிவரச் சொன்னாள். அவள் அருகில் வந்து பார்த்தபோது, குழந்தையின் உயிர் பிரிந்திருந்ததைக் கண்டு பதறிப்போனாள். பணிப்பெண்ணின் கதறியதைக் கேட்டு ஓடிவந்த க்ருதத்யுதிக்கு எப்படி இருக்கும்? அவளது கதறல் மூவுலகிற்கும் கேட்டது.

மற்ற அரசிகளும் ஓடிவந்து துக்கத்தில் பங்கு கொள்வதைப்போல் பாசாங்காய் அழுது புலம்பினர்.

நாடே துக்கத்தில் மூழ்கியது. க்ருதத்யுதி குரரிப் பறவைபோல் கதறினாள். ப்ரும்மதேவரைப் பலவாறு பழித்தாள்.

சித்ரகேதுவின் நிலைமை இன்னும் மோசம். அவன் புத்ரசோகத்தால் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டான்.

ஒருவன் துக்கத்தில் மூழ்கும் நேரம் அழைத்தால் உடனே வருபவன் இறைவன். அழையாமலே வந்து அன்னைபோல் காப்பவர் குருநாதரைத் தவிர வேறெவர்?

குருதேவர் பெரும்பாலும் துக்கத்தைப் போக்குவார். சில நேரங்களில் துக்கத்தைச் சந்திக்கும் மனோபலத்தைக் கொடுத்து சீடனைத் தன்னைப்போல் உயர்த்துவார்.

அழையாமலே வந்தனர் ஆங்கீரஸ முனியும், நாரத மஹரிஷியும்.
இறந்துகிடக்கும் குழந்தையின் அருகில் இன்னொரு பிணம்போல் கிடக்கும் சித்ரகேதுவின் அருகில் சென்று நல்லுபதேசம் செய்தனர்.

இது மிகவும் அரிய உபதேசம். பிறப்பு இறப்பு பற்றிய உண்மை நிலையை உரைப்பதாகும்.

நம் தமிழ் மொழியின் அற்புதம் இது. பிறந்த குழந்தையிடம் நாரதர் சொல்லும் அதே விஷயத்தைப் பேசுகிறது. ஆம். நமது மொழியின் தாலாட்டுப்பாடல்.

ஆராரோ.. ஆரிவரோ..
நீ யாரோ.. நான் யாரோ..
என்பதாகத் துவங்குகிறது.

சித்ரகேது! இந்தக் குழந்தையை நினைத்து வருந்துகிறாயே.. இது முற்பிறவியில் உனக்கு உறவா என்ன? நீ அவனுக்கு யார்? உனக்கும் அவனுக்கும் உறவேது?

ஆற்றுநதியின் ஓட்டத்தில் மணற்துகள்கள் பிரிந்து பிரிந்து சேர்வதைப்போல் ஜீவன்கள் ஸம்ஸார ஓட்டத்தில் தத்தம் வினைக்கேற்ப சேர்ந்து பிரிகின்றன.

எந்த ஜீவராசியானாலும் முந்தைய பிறவிகளில் அதன் பெற்றோர் வேறு. ஒரு ஜீவனுக்கு எத்தனை பெற்றோர்கள் என்பதைக் கணக்கிடவே முடியாது. அத்தனை பேரும் உறவு கொண்டாடவும் இயலாது. மரணத்திற்குப் பின்னால் ஜீவனுக்கு அவ்வுடலின் தொடர்பு அறுந்துபோகிறது.

பகவான் ஒருவனே அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயும் தந்தையுமானவன்.

உன் பிள்ளையின் உடல்தான் அழிந்தது. அந்த ஜீவன் தன் பயணத்தைத் துவங்கிவிட்டது. ஜீவனுக்கு அழிவில்லை. அது முக்தியடையும் வரை வெவ்வேறு உடல்களில் வாசம் செய்யும்.

இவ்வாறு உபதேசம் செய்த முனிவர்களை வணங்கினான் சித்ரகேது.

துக்கத்தினால், தனக்கு யாகம் செய்து வைத்த ஆங்கீரஸ‌முனியைக் கூட அவனால் அடையாளம் காணமுடியவில்லை.

நீங்கள் இருவரும் சான்றோர்களுக்கெல்லாம்‌ சான்றோர்கள்.
என்னைப் போன்ற பாமரனுக்கு உண்மைப் பொருளை விளக்க எண்ணி சஞ்சரிக்கிறீர்கள்.

நான் விலங்குபோல் அஞ்ஞானத்தில் மூழ்கித் தவிக்கிறேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. எனக்கு ஞானச்சுடரேற்றி வழிகாட்டுங்கள் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment