Wednesday, January 16, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 192 ஸ்ரீ நாராயண கவசம் - 1

இந்திரன் செய்த அவமரியாதையால் தேவகுருவான ப்ருஹஸ்பதி பகவான் மனம் வருந்தி தன்னை மறைத்துக்கொண்டார். குருவை அலட்சியம் செய்ததால் தேவர்களுக்கு ஆபத்து சூழ்ந்தது. அவர்களின் தேஜஸ் அழிந்துபோனது. சக்திகளை இழந்தனர். குருகடாக்ஷம் இல்லையெனில் வெற்றி பெற இயலாது என்பதால் ப்ரும்மா தற்காலிகமாக த்வஷ்டாவின் புதல்வனான விஸ்வரூபனை குருவாக நியமித்துக்கொள்ளும்படி தேவேந்திரனுக்கு பரிந்துரை செய்தார்.

தேவர் தலைவன் விஸ்வரூபனை குருவாக இருக்கும்படி வேண்டினான். விஸ்வரூபனும் மனம் மகிழ்ந்து சம்மதித்தான்.

சுக்ராசார்யார் தமது பலத்தால் அசுரர்களின் செல்வத்தைக் காத்தபோதிலும், அனைத்திலும் வல்ல விஸ்வரூபன் ஸ்ரீநாராயண கவசத்தின் பலத்தால் அவற்றை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்.

ஸ்ரீ நாராயண கவசத்தை இந்திரனுக்கு மீண்டும் உபதேசித்தார்.

அப்போது பரீக்ஷித் ஸ்ரீநாராயண கவசத்தை தனக்கும் உபதேசம் செய்யும்படி வேண்டினார்.

விஸ்வரூபனால் இந்திரனுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த ஸ்ரீ நாராயண கவசம் அதை சித்தி செய்துகொள்பவனை முக்காலமும் காக்க வல்லது. எதிரிகளை அழிக்கவல்லது.

நாற்பத்தியிரண்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1,2.

ரிஷிகளில் சிறந்தவரே! இந்திரன் எந்த மந்திரத்தால் காப்பாற்றப்பட்டான்? அதை எனக்குக் கூறுங்கள். அவன் தன் பகைவர்களை எவ்வாறு வென்றான் என்றும் அறிய விரும்புகிறேன்.
என்றான்.

3. ஸர்வ மங்களமும் தரும் ஸ்ரீ நாராயண கவசத்தைக் கூறுகிறேன் கேள் என்று சொல்லித் துவங்கினார் சுகர்.

4-7.
விஸ்வரூபன் கூறலானார்.
பயம் ஏற்படும்போது ஸ்ரீ நாராயண கவசத்தைக் கூறி நம்மைப் பாதுக்காத்துக்கொள்ள வேண்டும்.
அதன் நியமங்களாவன.

முகம், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.
வலக்கை மோதிர விரலில் தர்பையினால் ஆன பவித்ரத்தை அணிந்து வடக்கு நோக்கி அமரவேண்டும். மேலும், த்வாதஸாக்ஷரி மற்றும் அஷ்டாக்ஷர மந்திரங்களால் உடலின் பாகங்களைத் தொட்டு அங்க நியாஸம் மற்றும் கர ந்யாஸம் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

8-10. விஷ்ணவே நம: என்ற மந்திரத்தால்‌ உடலின் சந்திகளில் நியாஸம்‌செய்துகொண்டு தலைச் சுற்றி திக்பந்தனம் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் செய்பவன் மந்திரமயமான உடலைப் பெறுகிறான்.

11. ஆறு குணங்கள் கொண்ட பகவானை தியானம் செய்தல் வேண்டும். தன்னையும் பகவானின் ஸ்வரூபத்தில் ஒருவனாகக் காணவேண்டும்.
அதன் பின்னர் ஸ்ரீ நாராயண கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

12. பகவானுக்கு அனைத்து விதமான ஸித்திகளும் சேவை செய்கின்றன. சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்பு, வில், பாசம், ஆகியவற்றைத் தன் எட்டு கரங்களிலும் தாங்கி கருடனின் முதுகில் தன் தாமரைத் திருவடிகளைப் பதித்து நிற்கும் ஸ்ரீமன் நாராயணன் என்னை எல்லா உலகங்களிலும் காக்கட்டும்.

13. மீன் வடிவம் கொண்ட பகவான் என்னை நீரிலும், நீருக்கடியிலும், நீர்வாழ் உயிரினங்களிடமிருந்தும், மற்றும்‌ வருண பாசத்தினொன்றும் என்னைக் காத்தருளட்டும். ப்ரும்மசாரியாக வந்து திரிவிக்ரமூர்த்தியாக வளர்ந்த வாமன பகவான் என்னை நிலத்திலும், ஆகாயத்திலும் காக்கட்டும்.

14. அசுரக்கூட்டங்களின் பகைவரான ஸ்ரீ நரஸிம்மரின் அட்டஹாஸச் சிரிப்பு எண்டிசைகளிலும் எதிரொலித்ததே. அதைக் கேட்டு அசுரப் பெண்களின் கர்பங்கள் பயத்தால் நழுவிற்றே. அத்தகைய ந்ருஸிம்ஹர் என்னை கோட்டை, போர்முனை, காடுகள் ஆகியவற்றில் என்னைக் காக்கட்டும்.

ஸ்ரீ நாராயண கவசத்தின் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதம் PDF வடிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment