Monday, January 21, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 197 ததீசியின் தியாகம்

பகவான் கூறலானார்.
தேவர்களே! உங்களின் துதி கேட்டு மகிழ்ந்தேன். என்னிடம் காதல் கொண்ட அடியவன் என்னைத் தவிர எதையும் விரும்பான். உலகப் பொருள்களை உண்மையென நம்பும் அறிவிலி உலகியல் இன்பங்களை நாடுகிறான். முக்தியின்பத்தை உணர்ந்தவன் அஞ்ஞானியானாலும் கூட அவனை கர்மத்தளையில் சிக்க உபதேசிக்கமாட்டான். நல்ல மருத்துவன் நோயாளி விரும்பிக் கேட்டாலும்கூட அவனுக்கு ஒவ்வாத மருந்தையோ உணவையோ கொடுப்பாரா?

இந்திரா! உனக்கு எல்லா நலன்களும் விளையட்டும். நீங்கள் ததீசி முனிவரிடம் சென்று அவரது உடலை தானமாக வேண்டுங்கள். அவ்வுடல் விரதபலம், உபாசனாபலம் மற்றும் தபோபலம் ஊறியது. மிகவும் உறுதியானது.

அவர் ப்ரும்ம ஞானி. தனமளிக்கும் வித்தையையும் அறிந்தவர். அஸ்வசிரஸ் என்ற உயர்ந்த வித்தையை அஸ்வினி குமாரர்களுக்கு உபதேசம் செய்தவர். அதன் மஹிமையால் அவர்கள் ஜீவன் முக்தர்களாயினர்.

அதர்வண வேதத்தை நன்குணர்ந்த ததீசி முனிவர், எவராலும் துளைக்க இயலாத நாராயண கவசத்தை முதலில் த்வஷ்டாவிற்கு உபதேசம் செய்தார். அதை த்வஷ்டா தன் மகனான விஸ்வரூபருக்கு உபதேசம் செய்தார். விஸ்வரூபர் அந்த நாராயண கவசத்தை ‌உனக்கு உபதேசம் செய்தார்.

நீ கேட்டால் ததீசி முனிவர் தன் உடலைத் தந்துவிடுவார். அவரது எலும்புகளைக் கொண்டு விஸ்வகர்மாவின் மூலம் ஒரு ஆயுதம்‌ செய்துகொள். இந்திரனே! நீ அந்த ஆயுதத்தால் வ்ருத்ராசுரனை அழிக்கலாம்.

அதன் பின் உன் தேஜஸ்,செல்வம், அஸ்திரங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள்.
என்றார்.

தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பகவான் தம்மை மறைத்துக்கொண்டார்.

பகவான் சொன்ன உபாயத்தின்படி தேவேந்திரன் அந்த பெருமனம் படைத்த முனிவர் ததீசியிடம் சென்று அவரது உடலை வேண்டினர்.

யாரேனும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது உங்கள்‌ எலும்புகளைக் கொண்டு ஆயுதம்‌ செய்ய உடல் வேண்டும் என்று கேட்பார்களா? கேட்டால் கொடுக்கத்தான் முடியுமா?

அம்முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் கொடுக்க இசைந்தார். இவ்வுடலால் எப்பயனும் இல்லை என்று நினைத்திருந்தேன். இவ்வுடலுக்கு ஒரு பயன் உண்டென்பதை அறிந்து மிக்க‌ மகிழ்ச்சி கொண்டேன். மண்ணில் மக்கப்போகும் உடல் உங்களுக்குப் பயன்படுவதை விட வேறென்ன ஆனந்தம்‌ இருக்கமுடியும்? என்றார்.

அவரது தியாகத்தைக் கண்டு நடுங்கிப்போனான் சுயநலமே உருவான இந்திரன்,

ப்ரும்மரிஷியே! சகல ஜீவன்களிடமும் அன்பு கொண்ட தங்களைப் போன்றவர்கள் எதைத்தான் தியாகம்‌செய்ய மாட்டார்கள்? என்று நெகிழ்ந்தான். இருப்பினும் அவரது உடலைப் பெறுவதில் குறியாக இருந்தான்.

ததீசி முனிவர் அக்கணமே தன்னுடலை விடத் தீர்மானம் செய்து, தன் ஜீவனை பகவானிடம் இரண்டறக் கலக்கச் செய்தார்.

பகவானின் திருவருளைப்‌ பெற்றிருந்த இந்திரனது பலமும் வீரமும் வளர்ந்தன. விஸ்வகர்மா ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் செய்து அதை இந்திரனுக்கு அளித்தான். தேவேந்திரன் தேவர்கள் சூழ, மூவுலகமும் மகிழ, ஐராவதத்தின் மீதேறி வ்ருத்ராசுரனை எதிர்க்கச் சென்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

படம்:
நைமிஷாரண்யத்தில் ததீசி முனிவர் உயிர் துறந்த இடம். அவ்விடத்தில் அவரது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோர்க்கும் தனித்தனி ஸந்நிதிகள் உள்ளன. ததீசி குண்ட் எனப்படும் அழகான குளக்கரையில் அமைந்திருக்கிறது இந்த ஆஸ்ரமம்.

No comments:

Post a Comment