Friday, January 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 194 ஸ்ரீ நாராயண கவசம் - 3

27,28.
நவக்ரஹங்கள், வால் நட்சத்திரம், தீய மனிதர்கள், கொடிய விலங்குகள், அமானுஷ்ய பயங்கள், ஆகியவற்றால் ஏற்படும் மன சஞ்சலங்களும், விளைவுகளும் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தைச் சொல்லும் கணத்திலேயே மறைந்துவிடும்.

29. ஸாமவேதத்தை இறக்கைகளாகக் கொண்ட கருட பகவானும், விஷ்வக்சேனரும், ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தைச் சொன்னதுமே என்னை எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் காக்கட்டும்.

30. பகவான் ஸ்ரீ ஹரியின் நாமம், திருவுருவம், வாகனங்கள், ஆயுதங்கள், பார்ஷதர்கள் அனைத்தும், எங்களது புத்தி, புலன்கள், மனம், ஐந்து ப்ராணன்கள் ஆகியவற்றை அனைத்துவிதமான ஆபத்துக்களிலிருந்தும் எல்லா வகையிலும் காத்தருளட்டும்.

31. அனைத்து உலகங்களும், அவற்றின் செயல்பாடுகளும் உண்மையில் ஸக்ஷாத் பகவானின் ஸகுண வடிவம் என்பது உண்மையெனில், அவர் பெயரால் நமது அனைத்து துன்பங்களும் அழிந்து ஒழியட்டும்.

32, 33. எல்லா ரூபங்களும், ஜீவன்களும் மாறுபாடற்ற பகவத் ஸ்வரூபமே என்றாலும் பகவான் தன் மாயையினால் மந்த புத்தியுள்ளவர்களுக்கு, பல்வேறு ரூபங்களைக் காட்டுகிறார். எனவே, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்ரீ ஹரி எனக்கு எல்லா வகையிலும் காவலாய் விளங்கட்டும்.

34. ஸ்ரீ ந்ருஸிம்ம மூர்த்தியின் ஒளியால் அனைத்து ஒளி மண்டலங்களும் மங்கிப்போகின்றன. அவர் தன் அட்டஹாஸச் சிரிப்பால் அனைத்து ஜீவராசிகளின் பயத்தையும் போக்குகிறார். அவர் என்னை மேலும், கீழும், உள்ளும், வெளியும், எல்லா திசைகளிலும் காக்கட்டும்.

35. ஹே! இந்திரா! இத்தகைய நாராயண கவசத்தை உனக்கு உபதேசித்தேன். இதை நீ பல முறை ஜபம் செய்து உனக்குக் கவசமாக்கிக்கொள். இதனால் நீ அசுரர்களை எளிதில் வெல்லலாம்.

36. ஸ்ரீ நாராயண கவசத்தை ஓதி சித்தி பெற்றவன் யாரைத் தொட்டாலும், பார்த்தாலும் அவன் எல்லா வித பயங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

37. இந்த மந்திர கவசத்தை அணிந்து கொள்பவனுக்கு அரசர்கள், திருடர்கள், பூத பிசாசங்கள், கொடிய விலங்குகள் ஆகிய எதனாலும் எங்கும் எப்போதும் எவ்விதத்திலும் பயமில்லை.

38. முன்னொரு சமயம் கௌசிக கோத்திரத்தில் பிறந்த அந்தணன் ஒருவன் இந்த ஸ்ரீ நாராயண கவசத்தை சித்தி செய்து தன் யோகசக்தியால் தன் உயிரை ஒரு பாலைவனத்தில் விட்டான்.

39, 40. ஆகாயத்தில் மனைவிகளுடன் விமானத்தில் பறந்துகொண்டிருந்த சித்ரரதன் என்ற கந்தர்வ அரசன் அவ்விடம் வந்ததும் தலைகீழாக விழுந்தான்.
அதனால் வியப்படைந்த வால்கியர்கள்‌ என்ற முனிவர்கள் அவ்விடத்தில் இறந்துபோன அந்தணன் ஸ்ரீநாராயண கவசத்தை சித்தி பெற்றவன் என்று சொல்லி அதன் மஹிமையையும் அவனுக்குச் சொன்னார்கள்.

அதைக் கேட்டு சித்ரரதன் அந்த அந்தணனின் எலும்புகளை பொறுக்கி எடுத்து ஸரஸ்வதி நதியில் போட்டு நீராடிப் பின் தன் இருப்பிடம்‌ சென்றான்.

41.ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! துன்பம் நேரும் சமயத்தில் இந்த ஸ்ரீ நாராயண கவசத்தை மிகுந்த மன ஈடுபாட்டுடன் கேட்பவன், மற்றும் சித்தி செய்து அணிபவன் அனைத்து பயங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை எல்லா ஜீவராசிகளும் தலை வணங்கும்.

42. நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரன், குருவான விஸ்வரூபரிடமிருந்து உபதேசமாகப் பெற்ற இந்த ஸ்ரீ நாராயண கவசத்தின் மஹிமையால் போர்முனையில்‌ அசுரர்களை வென்று மீண்டும் இந்திரபதவியை அடைந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment