Saturday, January 26, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 199 வ்ருத்ராசுரனின் முக்தி

வ்ருத்ராசுரன் தொடர்ந்து கூறினான்.
ஹே இந்திரனே! எம் தலைவனான பகவான் ஸ்ரீமன் நாராயணன் தன் அடியார்கள் விரும்பும் அறம், பொருள், இன்பத்திற்கான முயற்சிகளைப் பலனற்றுப் போகச் செய்வார். அவர்களுக்குத் தானே செல்வமாக விளங்குவார்.

இதை அந்த அடியாரையன்றி வேறெவராலும் புரிந்துகொள்ள இயலாது.
என்று சொன்னான்.

பின்னர் சட்டென்று தியான யோகத்தினால் ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்தி துதிக்கத் துவங்கினான்.

ஹே! நாராயண! உமது அடியாரின் திருவடித் தொண்டை அடுத்த பிறவியிலாவது கொடு. எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு அடியார் சேவையே கிட்டவேண்டும். உமது கல்யாணகுணங்களை நான் மறவாதிருக்கவேண்டும். உமது பணியே எப்போதும் நான் செய்திடல் வேண்டும்.

செல்வக் களஞ்சியமே! நீ இல்லாத விண்ணுலகோ, ப்ரும்மலோகமோ, ஸ்வர்கமோ, எண்வகை சித்திகளோ எதற்காக? முக்தியைக் கூட நான் வேண்டவில்லை.

இறக்கை முளைக்காத குஞ்சுகள் கூட்டி லிருந்து கொண்டே தாய்ப் பறவையை எதிர்நோக்கும்..

கவையில் கட்டப்பட்டிருக்கும் கன்று தன் தாய்ப்பசுவுக்காக ஏங்கி நிற்கும்.

கணவனின் பிரிவைத் தாங்காத கற்புக்கரசி அவன் வரவையே எதிர்பார்த்து ஏங்கி நிற்பாள். அதுபோல் என் மனம் உன்னையே நாடுகிறது.

என் வினைப்பயனால் இந்த ஸம்சாரத்தில் சிக்கித் தவிக்கிறேன். நான் எங்கு எப்படிப் பிறந்தாலும் உமது அடியாரின் நல்லிணக்கம் வேண்டும். உன் மாயைக்கு ஆட்பட்டு வீடு, மனைவி, மக்கள், செல்வம் என்று உழலும் வீணர்களின் தொடர்பு எந்நிலையிலும் எனக்கு வேண்டாம்.
என்று வேண்டினான்.

இந்திரனை வென்று ஸ்வர்கத்தை அனுபவிப்பதை விட, போரில் உயிர் துறந்து பகவானை அடைய விரும்பினான் வ்ருத்ராசுரன்.

படு கோபத்துடன் தீப்பொறிகள் கக்கும் தன் சூலத்தை இந்திரன் மீது எறிந்தான். இந்திரன் சற்றும் கலங்காமல் அதையும் வ்ருத்ரனின் பரந்த தோளையும் தன் வஜ்ராயுதத்தால் வெட்டித் தள்ளினான்.

ஒரு கை வெட்டுப்பட்ட நிலையில் வ்ருத்ரன் இந்திரனின் அருகில் சென்று அவனையும், ஐராவதத்தையும் ஓங்கி அடிக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை நழுவவிட்டான்.

அதை எடுக்க இந்திரன் வெட்கினான். அப்போது வ்ருத்ரன், வருந்தாதே! உன் ஆயுதத்தைக் கையிலேந்தி எனைத் தாக்கு. பகவான் ஒருவரே படைப்பிற்கும் அழிவிற்கும் காரணம். வலையில் சிக்கிய பறவை போல் மாயையில் மாட்டிக்கொண்டு, அனைத்து உலகங்களும் அதன் தலைவர்களும் பகவானின் இஷ்டப்படி ஆடுகின்றனர். காலதேவனே வெற்றிதோல்வியை நிர்ணயிப்பவன்.

மரத்தால் செய்யப்பட்ட பொம்மை ஆட்டுவிப்பவனுக்கேற்ப ஆடுவதுபோல் இறைவனால் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம்.

கெட்டகாலம் வந்தால் விரும்பாவிடினும் அவமானமும், அவப்பெயரும் வருவதுபோல், நல்லகாலம் வந்தால் நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவை தானாகவே வரும்.
போர்முனையில் உணர்வுகளுக்கு இடமில்லை. நீ என்னை வெட்டியபோதும் நான் என் முயற்சியைச் செய்கிறேன் அல்லவா? அதுபோல் நீ மனம் தளராமல் உன் முயற்சியைச் செய்.

அவனது வாக்கைக் கேட்ட இந்திரன் அவனைக் கொண்டாடினான்.
தானவர் கோனே! நீ சித்த புருஷன். உனக்கு பகவானிடம் அன்பும், பற்றும் உறுதியாக ஏற்பட்டுள்ளது. நீ மாயையை வெற்றிகொண்டுவிட்டாய். உன் அசுரத்தன்மை நீங்கி மஹானாகிவிட்டாய். நீயோ ரஜோகுணம் நிரம்பிய அசுரன். ஆனால், சுத்த ஸத்வ குணமுள்ள பகவானிடம் உனக்கு காதல் உண்டானது பெரும் வியப்பு.

இதைக் கேட்ட வ்ருத்திரன் ஒரு கத்தியை எடுத்து வீச, இந்திரன் அந்த ஆயுதத்தையும், வ்ருத்ரனின் இன்னொரு தோளையும் சிதைத்தான். இரு கரங்களும் வெட்டுப்பட்டு மலை போல் காட்சியளித்த வ்ருத்ரன், அசைந்து அசைந்து வந்து, மலைப்பாம்பு யானையை விழுங்குவதுபோல் தேவேந்திரனை விழுங்கி விட்டான்.

வ்ருத்ரனின் வயிற்றுக்குள் சென்று விட்ட போதிலும் நாராயணகவசத்தால் காக்கப்பட்ட இந்திரன் இறக்கவில்லை. தன் வஜ்ராயுதத்தால் வ்ருத்ரனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். பின்னர் வ்ருத்ரனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அப்போது துந்துபி முதலிய வாத்யங்கள்‌முழங்கின. இந்திரனை அனைவரும் கொண்டாடினர்.

வ்ருத்ராசுரனின் உடலிலிருந்து கிளம்பிய ஜ்யோதி அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எல்லா உலகங்களையும் தாண்டி, ஸ்ரீ மன் நாராயணனின் ஸ்வரூபத்தில் கலந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment