Sunday, January 20, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 196 வ்ருத்ராசுரன்

தன் மகனான விஸ்வரூபரைக் கொன்றதற்காக, இந்திரன் மீது சினம் கொண்டு அவனை அழிக்க, ஒரு பகைவனை ஏற்படுத்த, த்வஷ்டா ஒரு வேள்வி செய்தார்.

வேள்வியின் முடிவில் ப்ரளயகால காலனோ என்னும்படி ஒரு ப்ரும்மாண்டமான உருவம் அக்னிகுண்டத்திலிருந்து வெளிப்பட்டது. அவன் உடல் நாற்புறமும் பல காத தூரத்திற்குப் பெருகி வளர்ந்தது. எரிந்து கருகிய மலைபோலும், மாலை வேளையின் மேகக்கூட்டம்போலும் இருந்தான் அவன்.

அவனது தலைமுடியும் தாடியும் சிவப்பு நிறத்தில் இருந்தன. கண்கள் நெருப்புக் கங்குகளைப் போல் இருந்தன.

ஒரு பெரிய முத்தலைச் சூலத்தைக் கையிலேந்தியபடி உரக்கக் கத்திக்கொண்டு குதித்தாடத் துவங்கினான். பூமி நடுங்கியது.

அடிக்கடி கொட்டாவி விட்டன். அவன் வாய் மலைக் குகை போலிருந்தது. ஆகாயத்தை விழுங்குபவன்போல் வாயைத் திறந்தான். அவனைக் கண்டு அனைவரும் பத்து திசைகளிலும் சிதறி ஓடினர்.

அவனுக்கு வ்ருத்திரன் என்ற காரணப்பெயர் அமைந்தது. வ்ருத்திரன் என்றால் எங்கும் வியாபித்திருப்பவன் என்று பொருள்.

தலைசிறந்த தேவர் அனைவரும் பற்பல ஆயுதங்களைக் கொண்டு அவனைத் தாக்கினர். ஆனால், அவன் அனைத்தையும் விழுங்கிவிட்டான். அவனது திறன் வளர்ந்துகொண்டே போவதைக் கண்டு பயந்துபோன தேவர்கள், அந்தர்யாமியான ஸ்ரீ மன் நாராயணனைத் துதிக்கலாயினர்.

பகவானே! தங்களுக்கு எதுவும் புதிதல்ல. எதைக் கண்டும் தாங்கள் வியப்படைவதில்லை. வேண்டுதல் வேண்டாமையற்ற பூரணர். தங்களை விடுத்து பிறரைச் சரணடைபவன் மூடன். அவன் நாயின் வாலைப் பற்றிக்கொண்டு கடலைக் கடக்க முயற்சி செய்பவன்.

சென்ற கல்பத்தின் முடிவில், ஸத்யவிரதன் என்ற மனு, மத்ஸ்யமூர்த்தியான தங்கள் மூக்கிலுள்ள கொம்பில் படகைக் கட்டிக்கொண்டு ப்ரளயகாலத் துன்பத்தை வென்றார். தங்களைச் சரணடைந்த எங்களையும் காக்கவேண்டும்.

ஒருமுறை ஊழிக்காற்றின் இறைச்சலைக் கேட்டு பயந்த ப்ரும்மதேவர் நாபிக் கமலத்திலிருந்து ஊழிக்கால நீரில் தவறி விழுந்தார். அப்போது எந்த உதவியும் இன்றி, தங்களைச் சரணடைந்து அந்த துன்பத்தைக் கடந்தார். அதுபோல் நீங்கள் எங்களைக் காப்பாற்றவேண்டும்.

தேவர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் பகைவர்களால் துன்புறும் சமயம், பகவானான தாங்கள் மாயையால் பல உருவங்கள் ஏற்று எங்களையும் தங்கள் அடியார்களாகக் கருதி காப்பாற்றி வருகிறீர்.

நீங்களே எங்களது ஆன்மா. நீர் உலகமாகவும், தனித்தும் இருக்கிறீர். எங்களுக்கு எல்லா நலன்களையும் அளிப்பீராக. என்று வேண்டினர்.
அவர்களின் துதியைக் கேட்டு பகவான் நாராயணர் அங்கு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி மேற்கு திசையில் பதினாறு பார்ஷதர்கள் சூழத் தோன்றினார்.
அதைக் கண்ட தேவர்கள் அனைவரும் அவரை விழுந்து வணங்கினர்.

பகவானே! காலரூபனான தங்களுக்கு வணக்கம். வேள்விகளின் பயனாக ஸ்வர்கம் முதலிய லோகங்களை அளிப்பவரே! வேள்விகளுக்கு இடையூறு செய்பவரைத் தகர்ப்பவரே! பற்பல திருநாமங்கள் கொண்டவரே! தங்களுக்கு வணக்கம்! ஸ்ரீ மன் நாராயணா! பர வாஸுதேவரே! ஆதிபுருஷரே! புருஷோத்தமரே! எல்லை கடந்த பெருமை உடையவரே! மங்களரூபரே! கல்யாண ஸ்வரூபரே! ஏழைப் பங்காளரே! அகில உலகங்களுக்கும் ஆதாரமானவரே! ஒத்தார் மிக்கார் இலாதவரே! அனைத்துலக நாயகரே! ஸர்வேஸ்வரரே! அழகும் இளமையும் கொண்ட திருமகள் கேள்வரே! யோகிகளின் உள்ளத்தில் விளங்குபவரே! தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறோம்.
என்று கூறி இன்னும் பலவாறாகத் துதி செய்தனர்.

மேலும், தாங்களே எங்களைக் காத்தருளவேண்டும். வ்ருத்திராசுரன் எங்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விழுங்கி விட்டான். மேலும் ஒவ்வொரு உலகமாக விழுங்கிக்கொண்டு வருகிறான். அவனைத் தாங்கள் கொன்று ஒழிக்கவேண்டும். எங்களைக் காப்பற்றுங்கள் என்று கூறி வணங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment