Friday, January 25, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 198

ததீசி முனிவரின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட வஜ்ராயுதத்துடன், தேவேந்திரன் வ்ருத்ராசுரனை எதிர்த்தான்.

வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் சதுர்யுகத்தில் வரும் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் நர்மதா நதி தீரத்தில் நிகழ்ந்தது இப்போர்.

முப்பத்து முக்கோடி தேவர் சூழ வரும் இந்திரனைக் கண்டு அசுரர்கள் வெகுண்டு எழுந்தனர்.

மிகவும் கடுமையான இப்போரில், அஸ்த்ர சஸ்த்ரங்கள் தீர்ந்துபோனதும், மலைச் சிகரங்களைக் கொண்டுதாக்கினர் அசுரர்கள்.

எவ்வளவு தாக்கியும், தேவர்களின் பலம் ஓங்கியே இருந்ததால், அசுரப்படைக்கு பயம் ஏற்பட்டது.

அவர்களது உற்சாகம் குறையத் துவங்கியதும், வ்ருத்ராசுரனைப் போர்முனையில் தனியே விட்டு நாற்புறமும் சிதறி ஓடத் துவங்கினர்.

வ்ருத்ராசுரன் புறமுதுகிட்டு ஓடும் அசுரர்களைப் பார்த்துச் சிரித்தான்.
விப்ரசித்தி, நமுசி, புலோமா, மயன், அனர்வா, சம்பரன் முதலிய அசுரர்களை விளித்துக் கூறினான்.

அசுரர்களே! ஓடாதீர்கள்! மானமே பெரிது. பிறப்பவன் எப்படியும் இறந்துதான் ஆகவேண்டும். மரணத்திலிருந்து விடுபட இதுவரை எந்த உபாயமும் எவராலும் கூறப்படவில்லை. சமரில் ஏற்படும் வீரமரணத்தால், இம்மையில் புகழும், மறுமையில் ஸ்வர்கமும் கிட்டும். அதை வேண்டாம் என்று யாரேனும் மறுப்பரா?

யோகிகள் தன் ப்ராணன்களை வசப்படுத்தி, பயிற்சியால் ப்ராணனை ஆத்மாவுடன் ஒடுங்கச் செய்து உடலை விடுகின்றனர். போர் வீரன் முன் வைத்த காலைப் பின்னெடுக்காமல் மார்பில் அடிபட்டு உயிரை விடுகிறான். இந்த இருவகையான மரணங்களும் மிகவும் உயர்ந்தவை. கிடைத்தற்கரிதானவை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்து போரிடுங்கள் என்றான்.

அவர்கள் உயிர் பயத்தினால் வ்ருத்ராசுரனின் பொருள் பொதிந்த சொற்களைச் செவி மடுக்காமல் தப்பி ஓடினர்.

உடனே தேவர்களைப் பார்த்துக் கூவினான்.
அற்ப தேவர்களே! உயிருக்கு பயந்து ஓடும் அசுரர்களை ஏன் தாக்குகிறீர்கள்? அவர்கள் பெற்றோரின் கழிவுகள். நீங்கள் சுத்த வீரர்கள் என்ற எண்ணம் இருப்பின், என்னெதிரே வந்து நில்லுங்கள்‌ என்றான்.

வ்ருத்ரனின் பெரிய உடலைப் பார்த்தாலே பல தேவர்களுக்குக் குலை நடுங்கியது. பலர் மூர்ச்சையடைந்தனர். அவனது கர்ஜனைக்குப் பலர் மயங்கி விழுந்தனர்.

அவ்வாறு விழுந்தவர்களை வ்ருத்ரன் காலால் நசுக்கிக் கொன்றான்.
அதைக் கண்டு சினம் கொண்ட தேவேந்திரன் ஒரு கதையை வீச, அதைப் பந்தாட்டம் போல் பிடித்த வ்ருத்ரன், அந்த கதையால் ஐராவதத்தின் தலை மீது ஒரு அடி வைத்தான்.

ஐராவதம் வலி தாங்காமல், உதிரம்‌ பெருக ஏழு வில்லடிகள்‌ (ஒரு வில்லடி - நான்கு முழம்) பின்னால் நகர்ந்து மூர்ச்சையடைந்தது.

அதைக் கண்டு இந்திரன்‌மிகவும் மனம் வருந்தினான். போரின் தர்மத்தை நன்கறிந்த வ்ருத்ரன், மீண்டும் ஆயுதப் ப்ரயோகம் செய்யவில்லை. தேவேந்திரன் தன் அமுதம்‌ நிரம்பிய கைகளால் ஐராவதத்தைத் தடவிக் கொடுக்க, அது புத்துணர்வு பெற்று எழுந்தது.

அப்போது வ்ருத்ரன் தேவேந்திரனைப் பார்த்து,
தீயவனே! நீ ஒரு குருத்ரோஹி. அந்தணனைக் கொன்றவன். பாவியான உன் இதயத்தை நான் பிளப்பேன். என் தமையனான விஸ்வரூபன் ஆத்மஞானி. ஒரு பாவமும் அறியாத அப்பாவி அந்தணன். வேள்வி தீக்ஷையில் இருந்தவனின் தலையை வெட்டினாய்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? விண்ணுலக இன்பங்களுக்கு அடிமையாகி, வேள்விப் பசுவைக் கத்தியால் வெட்டுவது போன்றது. இன்று என் சூலம் உன் உடலைப் பிளக்கப் போகிறது.

ஹே! தேவேந்த்ரா ! ஒருக்கால், நீ பகவானை வேண்டி என்னைக் கொல்வதற்காகவே வாங்கி வந்திருக்கும் வஜ்ராயுதத்தால் என் தலையைக் கொய்யக்கூடும். அப்போது என் உடலை விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அர்ப்பணம் செய்து, உலகியல் தளைகளிலிருந்து விடுபட்டு மஹான்களின் சரண தூளியை அடைவேன். சான்றோரின் உலகம்‌ எனக்குக் கிடைக்கும்.

எது நிகழ்ந்தாலும் எனக்குத்தான் நன்மை.
கொடியவனான நீ ஏன் வாளாவிருக்கிறாய்? உன் வஜ்ராயுதத்தை எடுத்து என் மீது வீசு பார்க்கலாம்.
என்றான்.

இதன் பின் அத்தனை சான்றோர்களும் புகழ்ந்தேத்தும் ஸ்லோகங்களை வ்ருத்ராசுரன் கூறுகிறான். அவை அடுத்த பதிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment