Wednesday, March 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 408

கண்ணன் தன் அமுதப் பார்வையாலேயே கோகுல வாசிகளின் பசி தாகங்களைப் போக்கினான். அவர்களும் வைத்த கண் வாங்காமல் கண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கோபியரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மற்ற நாள்களில் காலையில் கண்ணன் மாடு மேய்க்கக் கிளம்பினால் மறுபடி அவனது காட்சிக்கு மாலை வரை காத்திருக்க வேண்டும். ஏழு நாள்களாக கண்ணன் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிற்க அவனைக் கண்களால் பருகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே. விடுவர்களா. 

சிறுவர்களுக்கோ கண்ணனைப் பகல் முழுதும் காண இயலும், விளையாடலாம். மாலையானால் பிரிய வேண்டும். கண்ணனைப் பார்க்க மறுநாள் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அனைவரும் இரவு பகலாக கண்ணனுடனேயே இருந்தனர்.

எட்டாம் நாள் காலை இந்திரன் வந்து பார்த்துவிட்டு வெட்கினான். அதற்கு மேல் மேகங்களும் இல்லை. கண்ணனின் யோக சக்தியைக் கண்டு வியந்தான்.

வானம் வெளுத்து சூரிய கிரணங்கள் படர்ந்ததும், கண்ணன் அனைவரையும் மலையை விட்டு வெளியில் போகச் சொன்னான்.

அனைவரும் வெளியே சென்றதை உறுதிப் படுத்திக்கொண்டு மலையை மறுபடி உயரே தூக்கி வீசினான்.
விறுவிறுவென்று தானும் வெளியில் வந்து கீழே வந்த மலையைப் பிடித்து வாகாக முன்னிருந்தது போலவே வைத்தான். 

இக்காட்சியைக் கண்டு வானத்தவர் அனைவடும் பூமாரி பெய்து பாடி ஆடினர்.

பலராமனுடன் கண்ணன் கிளம்ப, கோகுலவாசிகள் அவனைத் தொடர்ந்தனர். அனைவரும் கண்ணன் புகழைப் பாடிக்கொண்டே தத்தம் வீடுகளை அடைந்தனர்.

வெள்ளத்தால் உருக்குலைந்த வீடுகளைச் சரி செய்ய நந்தன் ஆள்களை அனுப்பி உதவி செய்தான்.

அனைவரும் கண்ணன் மலையைத் தூக்கியது பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் எல்லோரும் நந்தனிடம் சென்றனர்.

கண்ணனின் செயல்கள் அமானுஷ்யமானவை. அவன் எப்படி பாமரர்களான நம்மிடையே பிறந்தான்? 
யானை தாமரையைத் தூக்குவதுபோல் ஏழே வயதில் ஒரே கையால் மலையைத் தூக்கினானே.

காலனைப்போல் பூதனையின் உயிரைக் குடித்தானே

வண்டிக்குக் கீழே படுத்திருந்த மூன்று மாதக் குழந்தை பசிக்காக காலை உதைத்து அழுதால் அது பட்டு வண்டி உடையுமா?

ஒரு வயதில் த்ருணாவர்த்தன் தூக்கிச் சென்றான். ஆனால் அவனைக்‌ கழுத்தை இறுக்கிக் கொன்றானே.

உரலை இழுத்துக்கொண்டுபோய் மரங்களை வீழ்த்தினானே!

கன்று மேய்க்கச் சென்றவன் தன்னைக் கொல்ல வந்த கொக்கைக் கிழித்துப்போட்டானே.

கன்றோடு கன்றாகப் புகுந்து கொல்ல வந்த வத்ஸாஸுரனை விளாமரத்தின் மீது வீசியெறிந்து வீழ்த்தினானே. அதெப்படி?

கழுதையாக வந்த தேனுகாசுரனையும் அவனது சுற்றத்தையும் கொன்று பனம்பழக்காட்டை எல்லோர்க்கும் பயன்படச் செய்தானே.

வலிமை மிக்க ப்ரலம்பாசுரனை மாய்த்து பசுக்களையும் கோபர்களியும் காட்டுத்தீயினின்று காத்தானே.

விஷம் கொண்ட காளியனை அடக்கி அவனை வெளியேற்றி யமுனையின் மடுவை நன்னீராக்கினானே

இயற்கையாகவே நமக்கு அவனிடம் அன்பு பெருகுகிறதே. ஏன்?

ஏழே வயதுள்ள சிறுவன் ஏழு நாள்கள் மலையைத் தாங்குவது எப்படி? நந்தரே! உண்மையில் கண்ணன் யாரென்பதைக் கூறுங்கள். 
என்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment