Sunday, March 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 409

கோபர்கள் அனைவரும் நந்தனிடம் கண்ணனின் லீலைகளைச் சொல்லி சொல்லி பின்னர் அவன் யார் என்று கேட்டனர்.

நந்தன் மிகுந்த பெருமையுடன் அவர்களைப் பார்த்துக் கூறத் துவங்கினான்.

முன்பொரு முறை கர்காச்சாரியார் என்னிடம் கூறியவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

இங்கு வளரும் இந்தக் குழந்தை க்ருதயுகத்தில் வெள்ளையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும்,  துவாபர யுகத்தில் சிவப்பாகவும், இருந்தது. இப்போது கறுமை நிறத்தில் இருக்கிறது. இவன் ஒரு சமயம் வசுதேவரின்‌ மகனாகப் பிறந்தானாம். எனவே, வாசுதேவன் என்பதும் இவன் பெயரே.

இவனது செயல்கள், குணங்கள், வடிவங்கள் ஆகியவற்றிற்கேற்ப ஏராளமான பெயர்கள் உண்டு. அவை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கர்காச்சாரியாருக்குத் தெரியும்.

இவன் உங்களுக்கு இன்னும் பல நன்மைகளைச் செய்வான். இவனால் நமது பல துன்பங்கள் எளிதாக விலகும்.

இவனிடம் அன்பு கொண்டவர்கள் பெரும் பாக்யசாலிகள். விஷ்ணுவின் அடியார்களை யாரும் துன்புறுத்த முடியாதல்லவா? அதே போல் கண்ணனிடம் அன்பு கொண்டவர்களையும் யாரும் துன்புறுத்த இயலாது.

கர்கர் மேலும் என்ன சொன்னார் தெரியுமா? கண்ணன் குணங்களிலும், செல்வத்திலும், பெருமை, புகழ் ஆகியவற்றிலும் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஒப்பானவன் என்றார். ஸ்ரீ மன் நாராயணனுக்கு ஒத்தார் மிக்கார் உண்டா?

எனவே கண்ணன் ஸ்ரீ மன் நாராயணனின் அம்சமாக வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன்.

கோபர்கள் அனைவரும் மிகவும்‌ மகிழ்ந்தனர். 
நான் அப்பவே நினைச்சேன், நான்தான் சொன்னேனே. கண்ணன் சாதாரணப் பையனில்லன்னு என்று வளவளவென்று கண்ணனின் பெருமைகளைப் பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்.

அனைவரும் வீட்டுக்குச் சென்று சகஜ நிலைக்குத் திரும்பியதும், கண்ணன் மீண்டும் தனியாக கோவர்தன மலைக்குச் சென்றான். 

மலை மீதேறி அங்கிருந்த கல்லின் மீது தனியாக அமர்ந்து கொண்டான்.

தேவேந்திரன் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக்கோர வருவான் என்பதைக் கண்ணன் அறிந்திருந்ததால் தனியாகச் சென்றான். பெரிய பதவியிலிருப்பவர்கள் சாதாரண மக்கள் முன்பு அவமானத்தால் குறுகினால், அவர்களை மக்கள் மதிக்காததோடு, அவர்களால் தம் பணியையும் குற்ற உணர்வின்றித் தொடர இயலாது. எனவே, கோபர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து வந்து காத்திருந்தான்.

இந்திரனுக்கு கண்ணன் ஸாக்ஷாத் பகவான் என்பதை உணர்ந்தது முதல் மிகவும் பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது. கண்ணனைக் காணக் கிளம்பும் சமயம் தனியாகச் செல்வதற்கு சங்கோஜப் பட்டுக்கொண்டு பசுக்களின் தேவதையான  காமதேனுவையும் அழைத்துக்கொண்டு வந்தான். 

கண்ணனைக்‌ கண்டதும் தன் கிரீடம் தரையில் படுமாறு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment