Monday, March 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 407

மழை வலுத்துக்கொண்டே இருந்தது.
விறுவிறுவென்று கோலை ஊன்றி வேகமாய் நடந்தான் கண்ணன்.

பின்னால் ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்த கோப கோபியர்களின் மனத்தில் கண்ணன் என்ன செய்யப்போகிறான் என்ற ஆச்சரியமே நிறைந்திருந்தது. அவனுடன் இணைந்து நடப்பது ஆனந்தமாக இருந்தது. 

கோவர்தன மலையடிவாரத்தில் வந்து நின்றான்.
இதுநாள் வரை நம்மைக் காத்த இம்மலையே இப்போதும் காக்கும் என்றான் கண்ணன். 

மலையின் அருகில் சென்று காலால் ஒரு உதை விட, அது அழகாக மேலே கிளம்பி ரங்கராட்டினம் போல்  சுழன்றது.. ஒரே பாய்ச்சலில் மலையின் அடியில் சென்று நடுவிலிருந்த பெரிய கல்லின் மீது ஏறிக்கொண்டான். இடது கை சுண்டுவிரலை மேலே உயர்த்தி மேலே பார்த்துத் தலையசைத்ததும், மலை அழகாக வந்து குடைபோல் அமர்ந்தது. 

சிறுவர்கள் நாய்க்குடையைப் பிடுங்குவது போலிருந்தது அக்காட்சி.

நண்பர்களே! பயப்படாதீர்கள்! என் கையிலிருந்து மலை நழுவாது. எல்லாரும் உள்ளே வாருங்கள். இம்மலை நமக்கு பாதுகாப்பளிக்கும். மாடுகளையும், மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே வாருங்கள். என்றான்.

தலைக்கு மேல் பழமோ, இலையோ, மயில்பீலியோ குடையோ இல்லை. பெரிய மலை. 

ஒரு கணம் கண்ணன் தடுமாறினாலும் அனைவரும் சட்டினி.

எதையாவது யோசித்தார்களா அவர்கள். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று போற்றுகிறாள் ஆண்டாள். உண்மையில் இவ்விஷயத்தில் அறிவைப் பயன்படுத்தினால் அவநம்பிக்கை தான் வரும். இறைவன்/ குருவின் மீது கேள்வி கேட்கத் தோன்றாத நம்பிக்கை வந்துவிட்டால் போதும். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான். இறைவன் கொடுத்த அறிவைக் கொண்டு அவனை அறிய இயலாது என்பதை உணரும் கணத்தில் அறிவு செயல்படாமல்‌ நிலைக்கும் தருணத்தில் இறைவனின் பரிபூரணமான அருள் தடையின்றிக் கிடைக்கிறது.

அத்தனை பேரும் சற்றும் தாமதிக்காமல் மலைக்கடியில் ஓடினர். ஆங்காங்கே தமக்கேற்ற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கையிலிருந்த பொருள்களை வைத்துவிட்டு ஈரத் துணிகளைப் பிழிந்து உதறினர். ஆண்கள் குச்சியை நட்டுக் கொடி கட்டிக்கொடுக்க துணிகளை உலர்த்தினார்கள். 

பின்னர் அனைவரும் கண்ணனின் இணையடியில் குழுக்களாக அமர்ந்தனர்.

யசோதையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம்,  சிறுமிகள்‌ ஒரு கூட்டம், சிறுவர்கள் ஒரு கூட்டம், நந்தனுடன் பெரிய கோபர்கள்.

ஆளாளுக்குக் கண்ணனின் புகழைப் பேசத் துவங்கினார்கள்.

நந்தன், என் மகனைப் பாத்தீங்களா. ஒரு கஷ்டம்னதும் எப்டி மலையையே தூக்கிட்டான் பாருங்க.
என்று பெருமை பேசினார். 

உண்மையில் மலையை ஒரு ஏழு வயதுச் சிறுவனால் தூக்கமுடியுமா என்ற கேள்வியே இல்லை.

பெண்கள் பேசுவதைக் கேட்க கேட்க, யசோதைக்கு நந்தனின் மேல் கோபம் வந்தது. நேராக நந்தனிடம் வந்து,

உமக்கென்ன வேலை செய்ய ஆள்களா இல்லை? தடிதடியாக இத்தனை காவலர்கள் இருக்காங்களே. அவங்களை வெச்சு மலையைத் தூக்கிக்கறதுதானே. என் பையன் பாவம் சின்னப்பையன். அவன்தான் எல்லா வேலையும் செய்யணுமா. அவனுக்குக் கை வலிக்காதா. என்று கத்தினாள்.

நந்தன் திகைத்துப்போய் நிற்க, கண்ணன் சிரித்தான். அம்மா, விடுங்கம்மா. எனக்கொன்னும் கஷ்டமில்ல. என்றான்.

கண்ணனின் அருகே வந்து அவனை முத்தமிட்டாள் யசோதை. சிறுமிகள் முகம் சிவந்தது.

சிறுவர்களோ கண்ணா, நீ விளையாட வா.  இந்தக் குச்சிகளை அங்கங்க வெச்சு மலையை கீழ விழாம நிறுத்திக்கலாம். என்றழைக்க, கண்ணன் சிரித்தான். நீங்க விளையாடுங்க. அண்ணா இவங்ககூட விளையாடுங்களேன் என்று அனுப்பிவைத்தான்.

சிறுமிகள் மெதுவாக கண்ணனின் அருகே வந்தனர். 
கண்ணா!

ம்ம்..

கை வலிக்கிறதா?

ஆமா, கொஞ்சமா வலிக்கற மாதிரி இருக்கு.

நாங்கல்லாம் செத்தாலும் பரவால்ல. மலையைக் கீழ வெச்சுடேன். உன்னைக் கஷ்டப்படுத்திக்காதயேன். 

கண்ணனின் கையைத் தடவி ஒருத்தி எவர்க்கும் தெரியாமல் முத்தமிட, 

இந்த மாதிரி முத்தம் கொடுத்தா வலியெல்லாம் பறந்துபோயிடும். எத்தன மலை வேணா தூக்குவேன். என்றான்.

சிறுமிகள் முகமும் கண்களும் சிவந்துபோய் ஓடிவிட்டனர்.

தான் கஷ்டப்படவில்லை. லீலையாகத்தான் மலையைத் தூக்குகிறேன் என்பதாக, இடுப்பிலிருந்த புல்லாங்குழலை எடுத்து, வலது கையால் வாசிக்கத் துவங்கினான்.

குழலிசையில் மயங்கி அனைவரும் மோனத்திலாழ்ந்தனர்.
காலம் கடிதே விரைந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment