Saturday, March 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 417

கண்ணனைத் தேடிக்கொண்டு வனத்தில் அலைந்த கோபியர் ஓரிடத்தில் கண்ணனின் திருவடி அச்சுக்களையும் அவற்றுடன் ஒரு பெண்ணின் காலடி அச்சுக்களையும் கண்டனர். 
கண்ணனுடன் சென்ற பெண் யாராக இருக்கும்? இவள் கண்ணனை நன்கு பூஜை பண்ணியிருப்பாள். அதனால்தான் கண்ணன் நம்மையெல்லாம் விட்டு இவளை மட்டும் ரகசியமாக அழைத்துச் சென்றிருக்கிறான்.

ப்ரும்மாவும் ஈசனும் லக்ஷ்மியும் விரும்பும் திருவடி இம்மண்ணின் மீது படர்ந்ததே. இதைத் தலையில் அணிந்தாலே கண்ணன் கிடைத்துவிடுவானோ.. ஆனால், இதைத் தலையில் வைத்துக் கொண்டால் தாபம் இன்னும் பெருகுகின்றதே அன்றிக் குறையவில்லையே..

 காலடிகளைப் பின்தொடர்ந்து செல்லத் துவங்கினர்.

சற்று தூரம் சென்றதும், 
இங்கே பார்த்தாயா.. பெண்ணின் காலடிகளைக் காணவில்லை. கண்ணனிம் பாதம் பூமியில் நன்றாய்  அழுந்தியிருக்கிறது. கண்ணன் அவளைத் தூக்கிக்கொண்டு சென்றிருப்பானோ..

தொடர்ந்து செல்ல, ஒரு மரத்தின் அருகே இருவரின் காலடிகளும் இருந்தன. கண்ணனின் காலடிகள் இன்னும் அதிக அழுத்தமாகவும் மரத்தைச் சுற்றியும் இருந்தன. அவ்விடம் முழுவதும் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் பூமியை மூடியதுபோல் காணப்பட்டது.

பார்த்தயா கண்ணன் அவளுக்காக மரத்திலிருந்து பூக்களை உதிர்த்திருக்கிறான். எழும்பிக் குதித்திருக்கிறான். இவ்விடத்தில் அவளுக்குத் தலைவாரிப் பின்னி பூச்சூட்டியிருப்பான்.

கண்ணன் ஆத்மா ராமன். அவனுக்கு வெளியிலிருந்து இன்பம் தேவையில்லை. அந்தப் பெண்ணுக்காக இவற்றை செய்திருக்கிறான்.

தொடர்ந்து கண்ணன் சென்ற பாதையிலேயே தங்களை மறந்து புலம்பிக்கொண்டு சுற்றித் திரிந்தனர்.

கண்ணனுடன் சென்ற கோபி, மற்ற கோபிகளை விட்டுக்‌ கண்ணன் என்னுடன் தனித்து வந்தானே என்று மகிழ்ந்தாள். காட்டின் இன்னொரு பகுதிக்குச் சென்றதும், இனியும் என்னால் நடக்கமுடியாது. என்னைத் தூக்கிச்செல் கண்ணா. என்று கூறினாள்.

இவ்வாறு அவள் சொல்லக்கேட்ட கண்ணன், என் தோளில் ஏறிக்கொள் என்று சொல்லிக் குனிந்தான். அவள் ஏற முயற்சி செய்யும்போது சடாரென்று மறைந்துவிட்டான். நிலை தடுமாறி தொபுக்கடீர் என்று கீழே விழுந்தாள் அவள்.

அங்கேயே அமர்ந்து அழுது தவிக்கலானாள்.

ஹே! கண்ணா! எங்கிருக்கிறாய்? எங்கு போனாய்?  ஏன் மறைந்தாய்? என்னையும் அழைத்துப்போ என்று கதறினாள்.

பகவானின் காலடியைப் பின்பற்றி வந்த மற்ற கோபிகள் அழுதுகொண்டிருக்கும் கோபியைக் கண்டனர். அவளை அணைத்துத் தேற்றி நடந்ததை விசாரித்தனர். கண்ணன் தன்னிடம் பிரியமாக நடந்து கொண்டதையும், தன் கொழுப்பினால் தான் பட்ட அவமானத்தையும் சொன்னாள் அவள்.

சூரிய ஒளியும் நிலவொளியும் கூடப் புகமுடியாத பல அடர்ந்த காடுகளைக் கொண்டது ப்ருந்தாவனம். நிலவொளி தெரியும் வரை உள்ள இடங்களில் சுற்றித் தேடிவிட்டு, இருளில் செல்லாமல் மீண்டும்‌ யமுனைக் கரைக்கே அனைவரும்‌ திரும்பினார்கள்.

அங்கே ஒன்று கூடி, கண்ணனின் வரவை எதிர்நோக்கிக்கொண்டு அவன் புகழைப் பாடத் துவங்கினர்.

இவ்விடத்தில் கோபிகளுக்கு ஸௌபக மதம் ஏற்பட்டதாகவும், அதனால் கண்ணன் விலகியதாகவும் கொள்ளலாகாது. தனித்துக் கண்ணனுடன் சென்ற கோபி ராதையாவாள். 

ஸ்ரீமத் பாகவதம் முழுதும் ராதை என்ற பெயரை ஸ்ரீசுகர் பயன்படுத்தவில்லை. ஏனெனில்‌ ப்ரேமையின் தலைவியான நீளா தேவியின் அம்சமாக வந்திருப்பவள் ராதை. ப்ரும்மஞானியான ஸ்ரீ சுகர் ஏற்கனவே பகவானின் கருணையைச் சொல்லுமிடங்களில் எல்லாம் ஆங்காங்கே மூர்ச்சையாகி ஸமாதிக்குச் சென்று, பிறகு மீண்டும் தன்னிலை அடைந்து கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். ராதையின் பெயரை உச்சரித்தாலோ, கேட்டாலோ, மீண்டும் ‌ஸமாதி அவஸ்தை வந்தால் மீண்டு வர எத்தனை நாளாகும் என்பது அவருக்கே தெரியாது. பரீக்ஷித்திற்கு ஏழு நாள்கள் கெடுவில்‌ ஏற்கனவே ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. இன்னும் மீதி இருக்கும் கண்ணனின் கதையை அவர் விரிவாகக் கூறியாகவேண்டும். எனவே கால அவகாசத்தைக் கருதி, ராதையின் பெயரைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்திவிட்டு, தொடர்ந்து கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார். 

பின்னால் வந்த அத்தனை மஹாத்மாக்களும் ராதையைப் பாடித் தள்ளிவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியுமாதலால், பரீக்ஷித்திற்குக் கதை சொல்வதற்காக இவ்விடத்தில் தன் ப்ரேமானுபவத்தை விட்டுக் கொடுக்கிறார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment