Saturday, March 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 413

மழைக்காலத்தை அடுத்த வசந்தகாலம் வந்தது. இரவில் மல்லிகைக்கொடிகள் இலைகளே தெரியாத அளவிற்கு பூத்து மலர்ந்திருந்தன.

மார்கழி மாதத்தில் குட்டி கோபிகளுக்கு வாக்களித்தபடி கண்ணன் இக்காலத்தில் திருவிளையால் செய்ய எண்ணம் கொண்டான்.

சந்திரன் தன் ஒளியால் பூமியைக் குளிர்வித்தான். அனைத்துப் பொருள்களும் நிலவொளியால் அழகு மிகுந்து மிளிர்ந்தன.

பூரணமாக 16 கலைகளும் கொண்ட கண்ணன், இரவில் ப்ருந்தாவனத்தை அடைந்து சந்திர ஒளியில் வனத்தின் அழகை வெகுவாக ரசித்தான்.

பின்னர் ஒவ்வொரு கோபியின் இதயமும் நுழைந்து இழுக்கும் வண்ணமாகத் தேனிசையை புல்லாங்குழலில் எழுப்பினான்.

கேட்கும் ஒவ்வொரு கோபிக்கும் தன் பெயரை அழைப்பதுபோலிருந்தது.

இறைவனிடமிருந்து வரும்‌ அழைப்பை எவரால் மறுக்க இயலும்?

கோபிகளின் கால்கள் நிற்க இயலவில்லை. தங்கள் நிலை மறந்து அப்படியே அனைத்தையும் விட்டுக் கிளம்பி குழலிசை வரும் திசையை நோக்கி ஓடினர்.

பசுவைக் கறந்துகொண்டிருந்தவர்கள், பாலைக் காய்ச்சிக்கொண்டிர்ருந்தவர்கள், உணவு பரிமாறிக்கொண்டிருந்தவர்கள், குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தவர்கள், கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர்கள், உண்டுகொண்டிருந்தவர்கள், அலங்காரம் செய்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

நீராடுபவர்கள், கண்களுக்கு மை தீட்டிக்கொண்டிருந்தவர்கள், எவருக்கும் தங்கள் நிலை நினைவில்லை. ஆடைகளயும் அணிகலன்களையும் மாற்றி அணிந்துகொண்டு ஓடினர்.

அவர்கள் சென்றதை குடும்பத்தில் இருந்தவர் எவரும் அறியவில்லை. எனில், அவர்கள் யோக சரீரத்துடன் சென்றனர் என்கின்றனர் பெரியோர். 

செல்ல இயலாத சில கோபிகள் அங்கேயே அமர்ந்து கண்ணனை தியானம் செய்தனர். எனவே அவர்கள் பாவவினை நீங்கியது. கண்ணனை அணைத்திருந்த ஆனந்தத்தை அனுபவித்ததால் புண்ய வினையும் நீங்கப்பெற்று அக்கணமே முக்தியடைந்துவிட்டனர்.

உடல் நிற்பது வினைப்பயனால் மட்டுமே. வினைகள் தீர்ந்தால் உடலால் நிற்க இயலாது. பரீக்ஷித் இடை மறித்தான்.

முனிவரே! அவர்கள் கண்ணனைக் காதலனகத்தானே கண்டனர்? எனில் வினைகள் தீர்வதெப்படி?

ஸ்ரீ சுகர் சிரித்தார்.

அரசனே! உனக்கு முன்பே கூறியிருக்கிறேன்.

கண்ணனின் ரூபம் மாயையின் தொடர்பில்லாதது. அவன் மீது எவ்வகையிலேனும் கருத்தைச் செலுத்துபவர்களின் வினை ஒழிந்துபோகும். 

சிசுபாலன், மற்றும் பல அசுரர்களும் கண்ணன் மீது பகை கொண்டிருந்தபோதிலும் முக்தியடைந்தனரல்லவா?

கோபிகளைப் போல்(காமம்), 
சிசுபாலன் போல் (பகை),
கம்சனைப்போல் (பயம்),
யசோதையைப்போல் (அன்பு),
பாண்டவர்களைப்போல் (உறவு), 
நாரதர் முதலியவர் போல் (பக்தி) 
இவர்களுள் எவ்வகையில் கண்ணனை நினைத்தாலும் முக்தி நிச்சயம். 

இதில் சந்தேகமோ, வியப்போ வேண்டாம். மரம், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியவை உள்பட முக்தியை அடையும்போது அன்பு செலுத்துபவர்க்கு முக்திக்குத்  தடையேது?

தொடர்ந்து ஸ்ரீ சுகர் அங்கு நடந்தவற்றை வர்ணிக்கலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment