Monday, March 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 419

கோபிகா கீதம் (2)

நாங்கள் சௌபக மதம் கொண்டதால் எங்களை விட்டு நீ நீங்கினாயா? நாங்கள்தான் அழகிகள், நாங்கள்தான் பாக்யசாலிகள் என்ற செருக்கு எங்களுக்கு இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால் எங்கள் மத்தியில் நின்று நீ ஒரு புன்முறுவல் செய்தால் போதுமே. எங்களது மனமே அழிந்துபோகும். பிறகு செருக்கு மட்டும் எப்படி இருக்கும்? எங்கள் செருக்கை அழிக்க நீ மறைந்து போக வேண்டிய அவசியமில்லை. நேரில் வந்து உன் தாமரை முகத்தைக் காட்டு.

பசுக்களைப் பின் தொடர்ந்து செல்லும் உன் தாமரைபோன்ற திருவடிகளை வணங்கியவரின் பாவம் போகும். எவ்விடத்தில் உன் திருவடி படுமோ அவ்விடத்திலேயே மஹாலக்ஷ்மி வசிக்கிறாள். கங்கையின் தோற்றுவாயான  அந்தத் திருவடியை எங்கள் மேல் வைத்து எங்கள் மனத்திலுள்ள காமத்தீயை அழித்துவிடு.

மனம் கவரும் இனிய சொற்களைப் பேசுபவனே! தேனினும் இனிய உன் குரலில் மயங்கினோம்.

உனது கதையமுதம் மூன்று விதமான துன்பங்களையும் போக்குவது. (ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம்). வாடும் மனத்திற்கு உற்சாகம் தருவது. கேட்க இனியது. மங்களமானது. ஞானிகளால் துதிக்கப்படுவது. எங்கும் நிறைவது. 

பகவானின் கதைகளைச் சொல்வதும் பாடுவதுமே சிலருக்கு வாழ்வாதாரமாகிறது. அத்தகைய பாக்யசாலிகள் கவி எனப்படுகின்றனர்.

கண்ணா! உன் சிரிப்பு, அன்பு பொழியும்‌ பார்வை, உனது லீலைகள் ஆகிய அனைத்தும் நினைக்க நினைக்க இனிமையானவை. மங்களம் தருபவை. தனிமையில் நீ எங்களுடன் பேசிய பேச்சுக்களும், விளையாட்டுக்களும் எங்கள் மனத்தைக் கலக்குகின்றன.

நீ தினமும் காலையில் மாடு மேய்க்கக் கிளம்பும்போது காட்டிலுள்ள கல்லும் முள்ளும் உன் பாதத்தில் குத்துமே என்று‌ எண்ணி எங்கள் நெஞ்சம் புண்ணாகும்.

வீரனே! மாலை நீ திரும்பி வரும்போது, உன் தாமரை முகத்தில் கருங்குழல் தவழ, உடல்‌ முழுதும் புழுதி படிய நீ தரும் காட்சி எங்கள் மனத்தில் ஆசையை வளர்க்கும்.

ப்ரும்மதேவரால் வழிபடப்படும்  திருவடி. வணங்குபவரின் விருப்பத்தை நிறைவேற்றும் திருவடி.
 ஆபத்தில் நினைத்தால் ஓடிவரும் திருவடி. பூமியை அழகு மிளிரச் செய்யும் திருவடி. மங்களம் தரும் திருவடி.
அந்தத் திருவடியை எங்களுக்குக் கொடு.

எல்லையற்ற இன்பம் தரும் உன் திருவாயமுதை புல்லாங்குழல் நன்கு பருகிவிடுகிறது. உன்னைத் தவிர வேறு ஒரு பொருளிலும் எங்கள் கவனம் செல்லாமல் தடுப்பது உன் திருவாயமுதமே ஆகும்.

நீ வனம் செல்லும் சமயம் ஒரு நொடி எங்களுக்கு ஒரு யுகமாகிறது. நீ திரும்பி வரும்போது உன் அழகை முழுதும் காண முடியாமல் இமைகளைப் படைத்த ப்ரும்மாவின் மேல் கோபம் வருகிறது.

கணவர், உற்றார், புதல்வர், உடன் பிறந்தோர், உறவினர் அனைவரையும் துறந்து தடைகளை மீறி, உன் வேணுகானத்தின் குறிப்பை உணர்ந்து அதில் மயங்கி ஓடிவந்திருக்கிறோம். நம்பி வந்த எங்களைக் கைவிடலாகுமா?

உன் லீலைகளையும், திருவுருவையும் தவிர வேறெதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அவற்றிலேயே மயங்கிக் கிடக்கிறோம்.

அனைவரின் வினைகளையும் எரிக்கவே அவதாரம் செய்திருக்கிறாய். உன்னிடம் மனவருத்தம் நீக்கும் மருந்து ஏதாவது இருக்குமானால், அதை உன்னிடம் அன்பு கொண்ட எங்களுக்குக் கொடு.

வனத்தில் அலைந்தால் தாமரை போன்ற  மெல்லிய உன் திருவடி நோகும். எனவே அலைந்தது போதும். சிற்சிறு கற்கள் குத்தினால் உன் திருவடி வருந்துமே என்‌று எங்கள் மனம் கலங்குகிறது. நீ உடனே வா. அந்தத் திருவடிகளை நாங்கள் எங்கள் மார்பில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறோம்.

இவ்வாறு பலவாறு புலம்பி உரத்த குரலில் தேம்பி தேம்பி அழத் துவங்கினர் கோபிகள்.

அவர்கள் அழுவதைப் பொறுக்காத கண்ணன் அக்கணமே அவர்கள்‌ மத்தியில் சூரியனைப்போல் ஒளிவீசிக்கொண்டு தோன்றினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment