Tuesday, March 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 420

இடையில் பொன் வரிகளாய் அசையும் பீதாம்பரம், கழுத்தில் ஐந்து மலர்களால் ஆன வண்டுகள் சூழந்த வனமாலை, முகத்தில் தவழும் புன்முறுவல் ஆகியவற்றுடன் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோன்றினான் கண்ணன்.

அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் கண்ணனை ஒவ்வொருவிதமாக எண்ணி ஆனந்தித்தனர். ஒருத்தி கையைப் பிடித்துக்கொண்டாள். ஒருத்தி அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ஒருத்தி சரணத்தைப் பிடித்துக்கொண்டாள். முக்தி நிலையை அடைந்த ஞானிகளின் ஆனந்தத்தை ஒத்தது அவர்களுடைய ஆனந்தம்.

அவர்களின் விரகதாபம்‌ முழுவதுமாக நீங்கியது. நக்ஷத்ரங்கள் சூழ ஒளிவீசும் நிலவைப்போல் கண்ணன் மிக அழகுடன் விளங்கினான்.

மலர்களின் நறுமணம் வீசியது. வண்டுகளின் ரீங்காரம் சீரான இசையாக ஒலித்தது. எங்கும் அமைதி நிலவியது. அவர்கள் அனைவரும் கண்ணனை அமரவைத்துப் பூஜை செய்தனர்.

பின்னர், கண்ணனுடன் ப்ரணய கலஹத்தினால் ஏற்பட்ட செல்லக் கோபத்தினால் பேசினர்.

கண்ணா! உலகில் மூன்று விதமானவர்கள் இருக்கின்றனர்.

ஒரு வகையினர் தம்மிடம் அன்பு செலுத்துபவரிடம் மட்டும் அன்பு செலுத்துவர்.

மற்றொரு வகையினர், தம்மிடம் அன்பு செலுத்தாதவரிடம்கூட அன்புடன் பழகுவர்.

இன்னொரு வகையினர் தம்மிடன் செலுத்தினாலும் சரி, செலுத்தாவிட்டாலும் சரி, அனைவரிடமுமே பழகுவதே இல்லை. ஏன் இவ்வாறு இருக்கிறார்கள்?

என்று கேட்டனர்.

அதனுள் மறைந்த பொருள் யாதெனில், நாங்கள் உன் மீது இவ்வளவு அன்பு செலுத்தினாலும் நீ அன்பே இல்லாதவன்போல் மறைந்தது சரியா? என்பாதாகும்.

விரித்துக்கூறியது, ஒளித்துக்கூறியது,  கூறாதது, நெஞ்சிலுள்ளது அனைத்துமறிவான் கண்ணன்.

அவர்கள் சொல்வது புரியாதா?

பெண்களே! 
தன்னிடம் அன்பில்லாதவரிடமும் அன்பு செலுத்துபவர் பெற்றோரைப்போல் கருணை உள்ளவர். எதிர்பார்ப்பே இல்லாத நல்லிதயம் கொண்டவர்.

தன்னிடம் அன்பாகப் பழகினாலும் அன்பு காட்டாதவர், அன்பில்லாதவரிடம் எப்படி அன்பு செலுத்துவர்? அவர்கள் செய்ந்நன்றி மறந்தவராகவோ, த்ரோகிகளாகவோ இருக்கக்கூடும். அல்லது நமது நன்மையே குறிக்கோளாகக் கொண்ட குருவாகவோ, ஞானியாகவோ இருக்கலாம். இரண்டு வகையானவரும் அன்புடையவர் அன்பில்லாதவர் இருவரிடமும் சமபுத்தியுடன் விளங்குவர்.

ஆனால், நான் இவற்றுள் எந்த வகையிலும் சாராதவன். என்னிடம் அன்புடன் பழகுபவர்களுக்கு என் மீதான அன்பு இன்னும் உறுதிப்படுவதற்காக நான் அவர்களை விட்டுச் சில காலம் விபகியிருப்பேன். பெருஞ்செல்வம் படைத்தவன் திடீரென்று அதை இழப்பானாகில் அவன் அதைப் பற்றியே சிந்திப்பானல்லவா? அதைப்போல் என்னுடைய பிரிவினால் என்னைத் தவிர வேறெதுவும் எண்ண இயலாமல் போகும். அதனால் பக்தி உறுதிப்படும்.

நன்மை, தீமை, தர்மம், அதர்மம், உறவுகள் என்று அனைத்தையும் துறந்து வந்த உங்கள் அனைவரின் பக்தியை இன்னும் உறுதிப்படுத்தவே சிறிது நேரம் உங்களிடமிருந்து மறைந்தேன். இனி, நான் உங்கள் அனைவருக்கும் கட்டுப்பட்டவன். உங்கள் அன்பிற்குக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்புக் கடனிலிருந்து என்னால் விடுபடவே இயலாது.
என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment