Tuesday, March 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 415

கோபியரின் பேச்சைக் கேட்ட கண்ணன் சிரித்தான்.

பின்னர் அவர்களுடன் ராஸலீலை செய்யத் துவங்கினான்.

அச்சுதன் என்ற பெயர் கொண்ட கண்ணன், ஐஸ்வர்யமும், ஞானமும் நிரம்பியவன். தர்மத்திலிருந்து சற்றும் விலகாதவன். அடியார்களைக் கைவிடாதவன். 

கோபிகள் அனைவரின் முகங்களும் தாமரைபோல் மலர்ந்திருந்தன. நீலவண்ணனின் புன் முறுவலால் முல்லைச் சரம் போன்ற அவனது பல்வரிசை மின்னியது.

நட்சத்திரங்கள்‌ சூழ விளங்கும் நிலவைப் போல கண்ணன் அழகுற விளங்கினான்.

ஆயிரக்கணக்கான கோபியர் சூழ்ந்து நின்று பாட, கண்ணன் வனமாலை அசையப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு ப்ருந்தாவனத்தைச் சுற்றி சுறி வந்தான். 

பின்னர் அனைவரும் யமுனையின் மணல் திட்டிற்குப் போனார்கள்.

ஆம்பல் பூக்கள் பூத்துப் படர்ந்த யமுனை பார்க்கவே ரம்யமாக இருந்தது.

அங்கேயே கோபியருடன் விளையாடத் துவங்கினான். கோபியர் அனைவரும் தங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறப்பெற்றனர். பரந்தாமனான கண்ணன் விரும்பியேற்ற அழகிகள் அவர்கள். தங்களைப் போன்ற பாக்யசாலிகள் வேறெவரும் உண்டா என்று நினைத்தனர்.

ப்ரும்மாவும் பரமேஸ்வரனும் மயங்கும் அழகுள்ள கண்ணன், கோபியரின் தற்பெருமையைக் களைய எண்ணினான்.

அவர்கள் மனத் தெளிவு பெறுவதற்காக அவ்விடத்திலேயே மறைந்தான்.

பகவான் திடீரென மறைந்ததும் கோபிகள் அனைவரும் திகைத்தனர். இங்கு எங்கேயாவதுதான் இருப்பான் என்று தேடிப் பார்த்தனர். மணல் திட்டு முழுவதிலும் தேடியும் கண்ணனைக் காணவில்லை. 

தங்கள் தலைவனைக் காணாத பெண்யானைகள் போல் தவிக்க ஆரம்பித்தனர்.

காணுமிடமெல்லாம் கண்ணனின் முகமே அவர்களின் கண்களில் நின்றது. அதை நம்பி அருகே சென்று சென்று ஏமாந்துபோயினர். பைத்தியங்களைப்போல் புலம்பத் துவங்கத் துவங்கினர். 

கண்ணனைக் காணவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment