Wednesday, July 25, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 52 விதுரரின் தீர்த்தயாத்திரை


தீர்த்த யாத்திரை சென்ற விதுரர், மதுரா, ப்ருந்தாவனம், அதன் உபவனங்கள், கோவர்தனம், யமுனை, கங்கை, இன்னும் பல புண்ய நதிகள், நாராயண ஸரஸ், போன்ற பல இடங்களுக்கு தனி ஒருவராகவே யாத்திரை சென்றார்.
உயிர்வாழத் தேவையான மிதமான, ஸாத்வீகமான, சுத்தமான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
ஒவ்வொரு நதியிலும் தனித்தனியாக நீராடி, விரிப்பு ஏதுமின்றி நிலத்தில் படுத்தார். மிக மெல்லிய தேகமுடையவராகி அவரைச் சேர்ந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு மரவுரியுடுத்து, விரதங்களை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார்.
பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு ப்ரபாஸ தீர்த்தத்திற்குத் திரும்புவதற்கு வெகு காலமாயிற்று.
இதற்கிடையில் பாரத யுத்தம் முடிந்து தர்மபுத்ரர் நேர்மையுடன் நல்லாட்சி புரிந்துவந்தார்.
பாரதப்போரில் நிகழ்ந்தவை அனைத்தையும் கேள்வியுற்ற விதுரர் வருந்தியவராக மௌனவிரதமேற்று ஸரஸ்வதி நதி மேற்கு நோக்கிப் பாயுமிடத்தை அடைந்தார்.
அங்கு
திரிதர், உசனஸ், மனு, ப்ருது, அக்னி அஸிதர், வாயு, ஸுதாசர், கோ, குகன், சிராத்ததேவர் ஆகியோரின் பெயர்களில் இருந்த புண்ய தீர்த்தங்களில் நீராடி, இறந்துபோன உறவினர்களுக்காக நீர்க்கடன் செய்தார்.
ஸரஸ்வதி நதி தீரத்தில் மஹரிஷிகளாலும், தேவர்களாலும் நிறுவப்பட்ட பற்பல திருக்கோவில்கள் இருந்தன. எல்லாவற்றையும் தரிசனம் செய்தார் விதுரர்.
அக்கோவில்களின் கோபுர கலசங்களில் சுதர்சன சக்கர அடையாளங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் கண்ணன் நினைவு வந்தது.
அங்கிருந்து கிளம்பி, ஸௌராஷ்டிரம், சௌவீரம், மத்ஸ்யம், குருஜாங்காலம் ஆகிய தேசங்களைத்தாண்டி யமுனைக்கரையை அடைந்தார்.
அங்கு பரம பாகவதரான உத்தவரைச் சந்தித்தார்.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே பரமபக்தர் என்று தெரிந்துவிட்டது.
பாம்பின் கால் பாம்பறியும்..உத்தம பக்தர்களை அத்தகையோரே அறிவர் அன்றோ..
துவாரகையில் கண்ணனோடு அல்லவா இருப்பார். இங்கு வந்திருப்பவர் உத்தவர் மாதிரி இருக்கிறதே..
உத்தவரும் விதுரர் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறார். பரம பக்தர் என்று நன்றாய்த் தெரிந்தது. ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் ஒத்துப்போகாத அளவிற்கு விதுரர் உரு மாறியிருந்தார்.
தான் கண்ணனின் மந்திரி என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் மலர்ந்திரு க்கும் உத்தவன் முகமோ வாடிப்போயிருந்தது. ஏதோ பெயருக்கு உயிரைச் சுமந்தவரைப்போல் காணப்பட்டார்.
பக்தர்களின் ஹ்ருதயம் ஒன்றே.. ஏனெனில் அவர்கள் ஹ்ருதயத்தில் குடியிருப்பவன் ஒருவன்தானே..அதனால் ஹ்ருதயத்திலும் பேதம் இல்லை.
அருகில் வந்ததும், அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
கண்ணனையே நேரில் கண்டவர்போல் அகமகிழ்ந்துபோனார்கள் இருவரும்..
ஆரத்தழுவிக்கொண்டு பேச்சற்ற நிலையில் தவித்தார்கள் இருவரும். ஒருவாறாக சிறிது நேரம் கழித்து விதுரர், கேள்விமழை பொழிந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment