Saturday, July 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 48 சதுஸ்லோகீ பாகவதம்

தன்னை வணங்கிய ப்ரும்மதேவரின்கரங்களைப் பிடித்துக்கொண்டு பகவான் உபதேசம் செய்த நான்கு ஸ்லோகங்களும் சதுஸ்லோகீ பாகவதம் எனப்படுகின்றன.
ப்ரபஞ்சம் மற்றும் படைப்பின் ரகசியங்களைக் கூறும் அந்த ஸ்லோகங்கள் பின்வருமாறு.

1. ‍அஹமேவாஸமேவாக்3ரே யதா2பா4வோ யத்3 ரூபகு3ணகர்மக:|
ததை2வ தத்த்வவிக்ஞாநமஸ்து தே மத3நுக்ரஹாத்||
படைப்பிற்கு முன் நான் மட்டுமே இருந்தேன். அதுதான் என் தூய்மையான பரிபூரண நிலை.
என்னைத் தவிர ஸ்தூலமாகவோ, ஸூக்ஷ்மமாகவோ வேறெதுவுமில்லை. படைப்பின் உருவமாகத் தோன்றும் அனைத்தும் நானே.
ப்ரபஞ்சம் ப்ரளயத்தில் லயமடைந்தபின் நானே தனித்திருக்கிறேன்.

2. ருதோ(அ)ர்த2ம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத சாத்மநி |
தத்வித்3யாதா3த்மநோ மாயாம் யதா2பா4ஸோ யதா மம||
ஒரு பொருளின் பிம்பம் என்பது உண்மையில் அந்தப் பொருள் அல்ல. அது வெறும் பிம்பமே.
பரமாத்மாவான என்னைத் தவிர வேறொரு பொருள் இல்லை.
என் ப்ரதிபிம்பமாகத் தோன்றும் பொருள்கள் நிஜம் இல்லை.
ராகு என்று ஒரு கிரகம் ஆகாயத்தில் காணப்படாத போதிலும் உண்மையில் இருப்பதுபோல், நான் யாராலும் காணப்படாவிடினும் உண்மையில் நான் மட்டுமே இருக்கிறேன்.
இருக்கும் பொருளை மறைப்பதும், இல்லாத பொருளைக் காட்டுவதுமாக, என் மாயை இரண்டு விதமாக செயல்படுகிறது.

3. யதா2 மஹாந்தி பூ4தாநி பூதேஷூச்சாவயேஷ்வநு |
ப்ரவிஷ்டாந்யப்ரவிஷ்டாநி ததா2 தேஷு ந தேஷ்வஹம் ||
ஆகாயம் முதலிய ஐம்பெரும்பூதங்கள் எல்லா பொருள்களிலும் உள் நிரம்பியுள்ளன. ஆனால், அப்பொருள்கள் தோன்றுமுன்னேயும் பஞ்சபூதங்களும் இருந்தன. எனவே உட்புகவில்லை என்றும் கூறலாம்.
இருவிதமாகவும் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.
அதுபோல்,
அனைத்துயிர்களிலும் ஆன்மாவாக உள்நுழைந்துள்ளவன் நானே.
ஆனால், உடல்களில் மட்டுமின்றி அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்தும் இருக்கிறேன்.
உதாரணத்திற்கு,
மண்ணைக் கொண்டு சுவற்றைக் கட்டுகிறார்கள். சுவற்றில் மண் இருக்கிறது.
மண் இல்லாமல் சுவர் இல்லை. ஆனால், சுவர் இல்லாமலும் மண் உண்டு.

4. ஏதாவதே3வ ஜி க்ஞாஸ்யம் தத்த்வஜிக்ஞாஸுநாssத்மந:|
அந்வயவ்யதிரேகாப்4யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா3 ||
உலகியல் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் இது ப்ரும்மமல்ல இது ப்ரும்மமல்ல என்று எதிர்மறைப் போக்கில் தள்ளிக்கொண்டு வருவதாலும்,
அவற்றின் ஆன்மாவாக விளங்குவதால் இது ப்ரும்மமே என்ற நேர்மறைப்போக்கிலும்
அறியப்படுபவன் நான் ஒருவனே.
அனைத்தையும் கடந்தும், உள்நுழைந்து வியாபித்தும்
இருப்பவன் இறைவன் ஒருவனே.
பரமாத்மாவின் உண்மைத் தத்துவம் இதுவொன்றே.

இக்கொள்கையை ஒருமனத்துடன் பற்றிக்கொள். உனக்கு எப்போதும் எவ்விதமான படைப்புகளாலும் மயக்கம் ஏற்படாது
என்று கூறி ப்ரும்மதேவரை ஆசீர்வதித்துவிட்டு தன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டார் இறைவன்.
அந்த ஸ்ரீ ஹரியை வணங்கிவிட்டு தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார் ப்ரும்மதேவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment