Sunday, July 8, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 35 விராட்புருஷன்

ஸ்ரீ சுகாசார்யார் கட்வாங்கர் ஒரு முஹூர்த்தத்தில் பகவானை அடைந்ததைச் சொல்லி பரீக்ஷித்தை உற்சாகப்படுத்திவிட்டு மேலும் சொல்லலானார்.

ஹே பரீக்ஷித், மனத்தில் திடம் கொண்டு, அனைத்தையும் துறந்து வெளிக்கிளம்பி, ப்ரும்மச்சர்ய விரதத்தை மேற்கொள்ளவேண்டும். புண்ய நதிகளில் நீராடி, தனியிடம் சென்று ப்ராணாயாமத்தினால் மூச்சை அடக்கி, ப்ரணவ ஜபம் செய்யவேண்டும்.
ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை பகவானின் மேனியழகில் செலுத்தவேண்டும்.
பகவானையே இடையறாது தியானிக்கவேண்டும்.
பகவானின் ஒவ்வொரு அங்கமாகத் தியானித்து வேறு விஷயங்களில் மனம் திரும்பாதவாறு பகவானிடம் மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும். மனம் ஓய்வடையும் இடமே பகவானின் இருப்பிடம்.
இவ்வாறு தியானம் செய்யும்போது ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் ஏற்படும் மன மயக்கங்களை தைரியமாக யோகதாரணை அதாவது மீண்டும் மீண்டும் பகவானின் ஸ்வரூபத்தில் மனத்தை செலுத்தி ஜெயிக்கவேண்டும்.

பரிக்ஷித் கேட்டான்
எவ்வாறு தியானம் செய்தால் மன மாசுகள் அழியும்?
புலன்களை அடக்கி, பகவானின் உருவத்தில் மனத்தை நிறுத்தவேண்டும். முக்காலங்களில் நிகழும் அனைத்துமே பகவானின் திருவுருவத்தில் அடங்கும். என்று சொல்லி வைராஜன் என்னும் விராட்ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.
ப்ரபஞ்சத்தைத் தோற்றுவித்த விராட்புருஷரான பகவானுக்கு பாதாள லோகமே உள்ளங்கால்கள். ரஸாதலம் பாதங்கள், மஹாதலம் கணுக்கால்கள்,
தலாதலம் முன்னங்கால்கள்,
சுதலம் முழங்கால்கள், அதலமும், விதலமும் இரண்டு தொடைகள், பூதலம் இடுப்பு,
ஆகாயமே தொப்புள், நக்ஷத்ர லோகமே திருமார்பு,
மஹர்லோகமே கழுத்து,
ஜனோலோகமே திருமுகம்,
தபோலோகமே நெற்றி, இவரது ஆயிரக்கணக்கான தலைகளே ஸத்யலோகம்.
இந்த்ராதி தேவர்களே கைகள்,
திசைகளே காதுகள்,
ஒலியே கேட்கும் திறன்,
அசுவினி தேவர்களே சுவாசத்வாரங்கள்,
மணமே முகரும் சக்தி,
ஒளிரும் அக்னி வாய்,
அந்தரிக்ஷ உலகமே கண்கள்,
சூரியன் பார்க்கும் திறன்,
இரவுபகலிரண்டும் கண் இமைகள்,
ப்ரும்மலோகம் புருவங்கள்,
நீர் இரு கன்னங்கள், சுவையுணர்வே நாக்கு,
வேதங்களே ப்ரும்மரந்திரம்(உச்சந்தலை),
யமதர்மராஜனே தெற்றிப்பற்கள்,
மற்ற பற்றுக்களே பற்கள், மாயையே புன்னகை,
கடைக்கண் பார்வையே ஸ்ருஷ்டி,
நதிகளே நாடிகள்,
மரங்கள் ரோமங்கள்,
வாயு மூச்சுக்காற்று, நடையே காலகதி,
ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களே லீலைகள், மேகங்களே கேசங்கள்,
ஸந்தியாகாலமே ஆடை,
மூலப்ரக்ருதியே ஹ்ருதயம்,
சந்திரனே மனம்.
அனைத்துமாக விளங்கும் பகவானுக்கு மஹத் தத்வமே அறிவுத்திறன்.
இவ்வாறு ஏராளமான விவரங்களை விளக்கமாகச் சொல்லி, இவரை தியானித்து தாரணை செய்தல் வேண்டும். இவரே அனைத்தும். இவரைத் தவிர வேறொன்றுமில்லை. எனவே, எதைக் கண்டாலும் அதை பகவானின் அங்கம் என்றே பார்ப்பது சுலபமான ஸ்தூல உருவ தியானம்.
இவ்வாறு ப்ரும்மதேவர் பகவானை தியானம் செய்து பகவானை மகிழ்வித்து, படைக்கும் திறனான அறிவைப் பெற்று முன்பு இருந்ததுபோலவே, ஒவ்வொரு ப்ரளயத்திற்குப்பின்னும் உலகைப் படைக்கிறார்.
என்றார் ஸ்ரீ சுகர்.

பார்க்கும் பொருள்களிலெல்லாம் பகவானை நினைவுபடுத்திக்கொள்வதற்கு வைராஜபுருஷனின் தியானம் மிகவும் உதவி செய்யும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment