Friday, July 20, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம்- 47 பகவான்

ப்ரும்மாவின் கடும் தவத்தில் மகிழ்ந்த இறைவன் அவருக்கு வைகுண்ட தரிசனத்தை அளித்தார்.
அங்கு விஷ்ணு பார்ஷதர்கள் ஸ்ரீ விஷ்ணுவைப்போலவே தோற்றமளித்தனர்.
திருமகள் அனைத்துச் செல்வங்களையும் கொண்டு பற்பலவிதங்களில் இறைவனுக்கு பூஜை செய்கிறாள்.
தன் அன்புக்கணவனின் திருவிளையாடல்களை இனிமையான குரலில் பாடுகிறாள்.
வண்டுகள் அவளின் அழகில் மயங்கி அவளது குணங்களைப் பாடுகின்றன.
ஒப்பற்ற தலைவனும், அழகே உருவானவனுமான இறைவன் ப்ரகாசமாக விளங்குகிறார். சுநந்தன், நந்தன், ப்ரபலன், அர்ஹணன் முதலிய பார்ஷதர்கள் பகவானுக்குப் பணிவிடை செய்கின்றனர்.
அவரது திருமுகம் தாமரையை ஒத்தது. மயக்கும் இனிய புன்முறுவல் தவழ்கின்றது. பெரிய அகன்ற திருக்கண்களில் செவ்வரியோடுகிறது. தலையில் திருமுடி, காதுகளில் குண்டலங்கள், அரையில் மஞ்சள் பட்டாடை, திருமார்பில் தங்கத்தாலான ரேகைபோல் (மின்னற்கொடிபோல்) திருமகள். நாற்கரங்கள். ஆஹா! என்ன அழகு!
விலை மதிக்கவொண்ணா பீடத்தில் பகவான் எழுந்தருளியிருக்கிறார்.
செல்வம், தர்மம், புகழ், செழிப்பு, ஞானம், வைராக்யம் இந்த ஆறுகுணங்களும் சேர்ந்திருப்பதே 'பக' எனப்படும். பக என்னும் தன்மை கொண்டவர் பகவான் ஆகிறார்.
இவை அனைத்தும் நிலைத்து நிற்கும் இடமாக இறைவன் இருக்கிறார். தனது நித்திய ஆனந்தத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறார்.
இவ்வாறு இறைவனைத் தரிசித்த ப்ரும்மா ஆனந்தக் கடலில் மூழ்கினார். ஆனந்தக்கண்ணீர் சொரிய, பகவானின் திருவடித்தாமரைகளை சிரம் தாழ்த்தி வணங்கினார்.
அன்பே வடிவான பகவான், தன்னைக் கண்ட ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டு, படைப்பிற்கான கட்டளையை எதிர்நோக்கியிருக்கும் ப்ரும்மாவின் கரங்களைத் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்தவாறு கூறலானார்.
ப்ரும்மதேவரே! எல்லா வேதங்களையும் உமக்குள் கொண்டிருக்கிறீர். வெகுகாலம் தவம் செய்து என்னை மகிழச் செய்தீர்.
நானோ அடியார் விரும்பியதனைத்தும் அளிப்பவன். என்னை தரிசிக்கும் வரைதான் ஒருவனைச் சிரமம் தீண்டமுடியும்.
நீங்கள் என்னைக் காணாமலேயே, என் குரலைக் கேட்டு அதன்படிச் செய்தீர். இந்த வைகுண்ட தரிசனத்தை நானே உமக்கு விரும்பி அளித்தேன்.
படைப்பை எப்படிச் செய்வது என்று நீங்கள் மயங்கியதால் தவம் செய்யக் கட்டளையிட்டேன்.
தவம் எனது ஹ்ருதயம். நானோ தவத்தின் ஜீவன்.
தவத்தைக் கொண்டே இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைகிறேன். தவத்தாலேயே காக்கிறேன். தவத்தினாலேயே என்னுள் இழுத்துக்கொள்கிறேன்.
என் திறன் அனைத்தும் தவமே. ஆனால் அதைச் செய்வது மிகவும் கடினம்.
ப்ரும்மா இறைவனிடம் சொன்னார்
இறைவா, அனைத்துயிர்களின் சாட்சி தாங்களே. தாங்கள் தங்களது தடங்கலற்ற ஞானத்தால் என் உளத்தை அறிந்தீர்.
தாங்களே மாயையின் தலைவர். சிலந்தி தன் வாயிலிருந்து கசியும் திரவத்தால் வலை பின்னி, அதில் சுற்றிச் சுற்றி விளையாடித் தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
அவ்வாறு செய்வதால் அதன் உடல் பருமனாகவோ, இளைத்தோ மாறுபாடு அடைவதில்லை.
அதுபோல், தாங்களும் தங்களுடைய பற்பல சக்திகளால் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக்கொள்கிறீர். நீங்களும் செய்யும் லீலைகளால் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கிறீர்.
இவ்வாறு எப்படிச் செயல்படுகிறீர்கள்?
மேலும், தாங்கள் கட்டளையிட்டால், சோம்பலின்றி படைப்புத் தொழிலைத் துவங்குகிறேன். தங்கள் திருவருளால் 'நான்தான் படைக்கிறேன்' என்ற அகந்தையோ, அவற்றின் மீது பற்றுதலோ எனக்கு ஏற்படாமல் இருக்கட்டும்.
(இவ்விடத்தில் மிகவும் ஆச்சரியமாக தற்கால வழக்கத்தை ஸ்ரீமத் பாகவதம் மேற்கோள் காட்டுகிறது.)
இறைவா! தோழமை பூண்ட ஒருவன் மற்றொருவரின் கைகளைப் பிடித்துக் குலுக்குவதுபோல் என் கைகளைத் தங்கள் திருக்கரங்களால் பிடித்தீர்.
என் படைப்புத்தொழில் தங்கள் சேவை என்பதை எப்போதும் நான் மறவாதிருக்க வேண்டும் என்றார்.
பகவான் மிகவும் மகிழ்ந்து ப்ரும்மாவிற்கு சதுஸ்லோகீ பாகவதம் என்னும் பாகவத ஸாரத்தை உரைத்தார்.
பகவான் சொன்னதால் இது பாகவதம் எனப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment