Tuesday, November 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 358

ஸஹஸ்ர நாமங்கள் உடையவனின் பெயர் சூட்டும் விழா குலதெய்வத்தின் கோவிலில் ரகசியமாக ஏற்பாடாயிற்று.

ஜாதகர்மா சடங்குகள் முடிந்ததும், ரோஹிணியின் புதல்வனுக்கு பெயர் சூட்டினார் ஆசார்யர்.

இவன் நண்பர்களைத் தன் நற்குணங்களால் மகிழ்விப்பவன். எனவே ராமன் என்று பெயர் பொருத்தமாக இருக்கும். மிகவும் வலிமை வாய்ந்தவனாக விளங்குவான். எனவே பலபத்ரன், பலராமன், என்றழைக்கப் படு வான். யாதவர்கள் அனைவரையும் பகையைப் போக்கி ஒன்று திரட்டுவான். எனவே ஸங்கர்ஷணன் என்ற பெயரும் இவனுக்குப் பொருத்தமாகிறது. என்றார்.

இப்போது நந்தன் தன் பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

யசோதைக்கு நெஞ்சமெல்லாம் படபடப்பு. என்ன பெயர் வைக்கப்போகிறாரோ. ஏதாவது பழங்காலத்துப் பெயர் வைத்துவிட்டால் என்ன செய்வது? ஆசார்யரை மறுத்துப் பேசவும் இயலாது. வாயில் நுழையாமலோ பெரிய பெயராகவோ வைக்ககூடாது. சின்னதாக, எல்லோராலும் விரும்பத்தக்கதாக, புதிய பெயராக வைக்க வேண்டுமே.

யசோதையின் முகத்தையும் படபடப்பையும் பார்த்த கர்காச்சார்யார், அவளையே கேட்டார். ஞானியான அவருக்குத் தாயுள்ளம் தெரியாதா?

உன் பிள்ளைக்கு என்ன மாதிரி பெயர் வைக்கலாம் சொல் யசோதா.

மனத்தில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டாள் யசோதை. அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தாரே தவிர ஆச்சார்யருக்கு சற்றே தலை சுற்றியது.

சமாளித்துக்கொண்ட பிறகு பேசத் துவங்கினார்.
இவன் பகவான் நாராயணனுக்குச் சமமானவன். (பகவானுக்கு ஒத்தார் மிக்கார் இல்லையென்பதால் பகவானே என்பது பொருள்)
ஒவ்வொரு யுகத்திலும், வெண்மை, சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்தான். இப்போது கறுப்பு நிறத்தை ஏற்றுள்ளான். முன்பு வசுதேவரின் மகனாகப் பிறந்திருந்தான். அதனால் வாசுதேவன் என்றழைக்கப்படுவான்.

நான் ஒரு பெயர் வைக்கப்போகிறேனே தவிர, இவனது குணங்களையும் சிறப்புகளையும் கொண்டு இவனுக்குப் பல பெயர்கள் அமையப்போகின்றன. அவை அனைத்தையும் நான் அறிவேன்.

இவனை மட்டுமல்ல, இவனிடம் அன்பு கொண்டவரைக்கூட எவராலும் வெல்ல ‌இயலாது. இவனை நீங்கள் வெகு கவனமாகக் காப்பாற்றவேண்டும்.

பெயரைச் சொல்லமாட்டேங்கறாரே. யசோதை முணுமுணுத்தாள். நாராயணன், வாசுதேவன் என்ற பெயர்களெல்லாம் மிகவும் பழைய பெயர்கள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கர்கர் இவனுக்கு க்ருஷ்ணன் என்ற பெயர் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.
என்றார்.

க்ருஷ்ணன், க்ருஷ்ணா, க்ருஷ் வாய்க்குள் சொல்லிப்‌ பார்த்துக்கொண்டாள் யசோதை. நாவு இனித்தது. முகம் மலர்ந்தது. கர்காச்சார்யாருக்கு அப்பாடா என்றிருந்தது.

ஒருவழியாக பகவானின் தாயாருக்குப் பெயர் பிடித்துவிட்டது.
இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்த க்ருஷ்ணன் கர்காச்சார்யாரைப் பார்த்துக் கள்ளமாய்ச் சிரித்தான். உன் வேலைதானா என்று நினைத்தவர் அச்சிரிப்பில் மயங்கினார்.

க்ருஷ்ணன் க்ருஷ்ணன் க்ருஷ்ணன் என்று குழந்தையின் வலக்காதில் மூன்று முறை ஓதினார் நந்தன். நெல்லைப் பரப்பி பெயரை எழுதினார்கள்.

அன்றைய நாளிலேயே க்ருஷ்ணா க்ருஷ்ணா என்று ஆயிரம் முறைக்கி மேல் அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டாள் யசோதை. பெயரைச் சொல்லும்போதெல்லாம் நாவில் தேன் ஊறினால் என்னதான் செய்வாள் அவள்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment