Wednesday, November 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 355

மெல்லத் தவழத் துவங்கியிருந்தது குழந்தை. கைகளை ஊன்றி ஆனை ஆடுவதும், வழுக்கிக் கீழே விழுந்து மூக்கை நசுக்கிக்கொண்டு அழுவதும், அன்னை சமாதானப் படுத்துவதும், அன்னை சொல்லும் சின்ன சின்ன வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லப் பழகுவதும், அவ்வப்போது நிறங்களைப் பார்த்து விளையாடுவதும், கன்றுக்குட்டியைக் கண்டால் அன்னை இடுப்பிலிருந்து துள்ளித் தொட முயல்வதும்..

ரோஹிணியின் புதல்வனைப் பார்த்தால் மகிழ்ச்சியில் சிரிப்பதும், கையைக் காலை ஆட்டி இருவரும் அவர்களது மொழியில் பேசிக்கொள்வதுமாக..

அங்கு ஒருவர்க்கும் பொழுது போவதே தெரிவதில்லை.
யசோதைக்கு குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒருநாள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தோட்டத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

குழந்தையைக் கண்டதும் துள்ளி ஓடிவந்தது குட்டிக் கன்றுக்குட்டி.
தெய்வக்குழந்தை பிறந்த அன்றே பிறந்த கன்று அது.
நெற்றியில் அழகாக திலகம் போல் வெண்மையாக இருக்கும்.

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை மடியில் உட்காரவைத்து ஆனை ஆட்டிக்கொண்டிருந்தாள் அன்னை.

திடீரென்று அவளுக்கு கால்கள் வலிக்க ஆரம்பித்தன. கைகளாலும் குழந்தையை ஆட்ட முடியவில்லை. குழந்தையின் எடை அதிகரித்துக் கொண்டே போக, யசோதை அதை உணர்ந்தாளில்லை.

வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் மரத்துப்போய்விட்டதென்று நினைத்தாள்.

குழந்தையைக் கீழே இறக்கிவிட, அவன் சிணுங்கினான். ஒரு சேடியை அழைத்து பக்கத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, காலுக்கு எண்ணெய் தேய்க்க, நொண்டிக்கொண்டு உள்ளே போனாள். யசோதை சற்றே பருமனாக இருப்பவள். எனவே, தன் உடல் எடை அதிகமானதால், தனக்கு முடியவில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் உள்ளே சென்றாளோ இல்லையோ, மெல்லியதாக வீசிக் கொண்டிருந்த தென்றல், சற்று வேகமாக வீசி, அனைவர் கண்களிலும் புழுதியை வாரி இறைத்தது.

சேடிப் பெண் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிமிர்வதற்குள், பேரிரைச்சலோடு பெரும் சூறாவளி ஒன்று சுழன்று வந்தது. வரும் வழியில் இருந்த மாடுகள், கோபர்கள், வீடுகளின் கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.
குழந்தை அருகிலிருந்த சேடி, கன்றுக்குட்டி எல்லாம் திசைக்கொன்றாய் வீசப்பட்டனர்.

சற்று நேரம் கழித்து சூறாவளி சுழன்று ஊருக்கு வெளியே வேகமாகப் போய்விட்டது.
இங்கே திண்ணையில் விடப்பட்டிருந்த குழந்தையைக் காணவில்லை.

சேடி பயந்துபோனாள். தான் வீசப்பட்டதுபோல், குழந்தையும் எங்காவது வீசப்பட்டிருக்கலாம் என்று நினைத்தாள் அவள்.

புயற்காற்றைப்‌ பார்த்ததுமே குழந்தையின் நினைவு வந்த யசோதையும் மற்ற கோப கோபியரும் ஓடிவந்துவிட்டனர்.

குழந்தையைக் காணவில்லை‌என்றதும் அதிர்ந்து போனார்கள். நுழைந்து நுழைந்து வண்டிகளுக்கடியிலும், மாட்டுக் கொட்டகை, அக்கப் பக்கத்து வீடுகள், தெருக்கள் என்று தேடத் துவங்கினர்.

குழந்தையோ, சந்தோஷமாகக் காற்றில் பறந்துகொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment