Tuesday, November 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 354

குழந்தை உதைத்து வண்டி நொறுங்கியது என்று சிறுவர்கள்‌சொன்னதை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குழந்தையை உள்ளே கொண்டுபோய், பாலூட்டி, அந்தணர்களிடம் காட்டி நல்வாழ்த்துப்‌ பெற்று உறங்கவைத்தாள் யசோதை.

அந்தணர்களின் ஆசி பயனற்றுப்போகாது என்று மனநிம்மதி கொண்ட நந்தன், அவர்களை உபசரித்து, நிறைய செல்வங்களை வழங்கினார்.

உண்மையில் என்னவாயிற்று?
குழந்தைகளைக் கொன்று வருவதாகச் சொல்லிச் சென்ற பூதனையை வெகு நாள்களாகியும் காணவில்லை. என்னவாயிற்று என்று பார்த்து வரும்படி ஒற்றர்களை அனுப்பினான் கம்சன். அவள் இறந்தாள் என்ற செய்தியை கம்சனால் நம்பவே முடியவில்லை. அதுவும், ஒரு கைக்குழந்தையால் பூதனை போன்ற ஒரு பெரும் அரக்கி இறப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

மிகவும் கவலை கொண்டான். அடுத்ததாக அந்தக் குறிப்பிட்ட குழந்தையைக் கொன்று வரும்படி இன்னொரு அசுரனை அனுப்பினான்.

கம்சனால் அனுப்பட்ட அந்த சகடாசுரன் என்பவன், குழந்தையைக் கொல்வதற்காக சமயம் பார்த்திருந்தான்.

யசோதை குழந்தையைக் கொண்டு வந்து தோட்டத்தில் வண்டிக்கடியில் தூளி கட்டி விட்டதும், வண்டிச் சக்கரத்தில் புகுந்து வண்டியைக் குழந்தை மேல் கவிழ்ந்து கொன்றுவிட எண்ணினான்.

ஆனால், நடந்தது என்னவென்று தெரியுமல்லவா?
கோகுலத்தில் ஒருவருக்கும் அசுரன் வந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது. அவர்கள் குழந்தைக்கு பாலாரிஷ்டம். எனவே மாற்றி மாற்றி ஏதோ ஆபத்து வருகிறது என்று கவலை கொண்டனர்.

இந்நிகழ்வின் பிறகு குழந்தையைப்‌ பார்த்துக்கொள்ள இன்னும் இரு பெண்களைப் பிரத்யேகமாக நியமித்தார் நந்தன்.

ஒன்றுமே செய்யாமல் படுத்துக் கிடக்கும் சின்னஞ்சிறு குழந்தை வீட்டிலுள்ள அனைவரையும் தன் பால்‌இழுக்கிறது. வேலை வாங்குகிறது. சாதாரணக் குழந்தையே அப்படி என்றால், தெய்வக் குழந்தை?
கோகுல வாசிகளுக்கு மூச்சும் பேச்சுமாக ஆகிப்போனது.

சகடாசுரன் இறந்த செய்தி கம்சனை எட்டியதும், அவனுக்கு அடி வயிற்றைப் பிசைந்தது.
அவன் குழந்தையைக் கொல்ல அடுத்த அசுரனை அனுப்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment