Friday, November 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 357

ஒருநாள் யசோதை குழந்தையை எடுத்து மடியிலிட்டுப் பாலூட்டினாள். பால் குடித்த குழந்தையின் அழகிய முகத்தை முத்தமிட்டுத் தாலாட்டியபோது, குழந்தை பெரியதாக கொட்டாவி விட்டான்.

அவனது வாயில் ஆகாயம், பூமி, ஸ்வர்கம், ஒளி மண்டலம், திக்குகள், சூரியன், சந்திரன், அக்னி, வாயு, கடல், தீவுகள், மலைகள், அவற்றிலிருந்து பெருகும் ஆறுகள், காடுகள், தாவர - ஜங்கமங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களையும் கண்டாள்.

திடீரென்று குழந்தையின் வாய்க்குள் என்னென்னமோ தெரிய, பயந்து போனாள் யசோதை. பால் ஜீரணமாகவில்லை என்று யோசித்து ஓமம் கலந்த நீரைப் புகட்டினாள்.

அவையனைத்தும் என்னவென்பது புரியவிடாமல் அவளை மாயையில் ஆழ்த்தினான் கண்ணன். உறங்கும் குழந்தையைச் சற்று நேரம்‌ ரசித்தாள். பின்னர், இவன் உறங்கும் சமயம் வேலை செய்தால்தான் உண்டு என்று புலம்பிக்கொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை நியமித்துவிட்டு உள்ளே சென்றாள்.

அவ்வப்போது இதைப்போல் எதையாவது செய்து கோகுல வாசிகளை வியப்பிலாழ்த்துவதும், பின்னர் மாயையில் ஆழ்த்துவதுமாக இருந்தது தெய்வக் குழந்தை. அதற்கும் பொழுது போக வேண்டாமா? சர்வ சக்தனாக இருந்துகொண்டு பொம்மையைப்போல் யசோதையும் இடைச்சிகளும் ஆட்டுவிப்பதை அனுமதிக்கிறானல்லவா?

வசுதேவரின் குலப்ரோஹிதர் கர்காச்சார்யார்.
வசுதேவர் அவரை ரகசியமாக அழைத்து,
என் மனைவி ரோஹிணியும், என் புதல்வனும் கோகுலத்தில் வசிக்கிறார்கள்.


அவன் பிறந்து வெகுநாள்கள்‌ ஆகியும் ஜாதகர்மம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து பெயர் வைக்கவில்லை. நீங்கள் ரகசியமாகச் சென்று, என் மகனுக்கும், நந்தரின் குழந்தைக்கும் பெயர் வைத்துவிட்டு, கர்மாக்களைச் செய்து வைத்து விட்டு வாருங்கள். இந்த விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து நேரலாம். எனவே, விமரிசையாக இல்லாமல் ரகசியமாகச் செய்யவேண்டும். என்று சொல்லி அனுப்பினார்.

கர்காச்சாரியார் நந்தனைப் பார்க்க வந்தார்.
ஏதும் முன்னறிவிப்பின்றி அதிதியாக வந்த ஆசார்யரைப் பார்த்ததும் நந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அதிதி தேவோ பவ என்பதற்கிணங்க, அவரை தெய்வமாகவே எண்ணி வழிபட்டு உபசாரங்கள் செய்தார்.

பின்னர், கர்காசார்யாரைப்‌ பார்த்து வினவினார்.
தன்னிறைவு பெற்ற ஞானியான தங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்?
தங்களின் வரவு என் நன்மைக்காகவே நிகழ்ந்திருக்கிறது.

ஒளி மண்டலங்கள், சூரியன், கிரஹங்கள் ஆகியவற்றின் கதி(பாதை) பற்றிய விவரங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை ஜ்யோதிஷம் என்ற பெயரில் தொகுத்தவர் தாங்களே. அதனால்தானே மாந்தரின் அறிவுக்கு அப்பாற்பட்ட பாவ புண்ய பலன்களை அறிய முடிகிறது.

தெய்வமே வந்தாற்போல் தானாக வந்திருக்கிறீர்கள். தங்கள் திருக்கரங்களால் இந்தச் சிறு குழந்தைகளை ஆசீர்வதியுங்கள். தாங்களே இவர்களுக்கு ஜாதகர்மா முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

அதற்காகத்தானே வந்தார் ஆசார்யர்?
உடனே ஒப்புக்கொண்டார்.
ஆனால்,
நான் வசுதேவரின் குலப் புரோஹிதர். நான் இக் குழந்தைகளுக்கு ஜாதகர்மம் செய்துவைத்தால், கம்சனுக்கு சந்தேகம் வரும். அவனால் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சுகிறேன். எனவே, ரகசியமாகச் செய்யலாம்
என்று சொன்னார்.

குலதெய்வத்தின் கோவிலில் வைத்து மறுநாளே ரகசியமாகச் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கடகடவென்று காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பாடுகள் நடந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment