Monday, November 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 353

மதுரா சென்றிருந்த நந்தன் ஊருக்குள் நுழையும்போதே அத்தனை விஷயங்களையும் கேள்வியுற்று மிகவும் அதிர்ச்சியுற்றார்.
பூதனையின் உடலைப்‌ பார்த்து மிகவும் வியந்தார்.

வசுதேவர் சொன்னது அப்படியே நடக்கிறதே. அவர் யோகேஸ்வரராக இருப்பாரோ என்றெண்ணினார்.
அரண்மனை திரும்பியதும் குழந்தையை எடுத்து உச்சி மோந்து பேரானந்தம் கொண்டார்.

இந்த பூதனையின் கதையைக் கேட்பவர்கள் எல்லோரும் ப்ரேம பக்தியைப் பெறுவார்கள் என்று பலச்ருதி சொல்கிறார் ஸ்ரீ சுகர்.

பரிக்ஷித் மேலும் கேட்டான்.
மஹரிஷி, இறைவனின் பால லீலைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தயை கூர்ந்து விரிவாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
மணிக்கொரு குறும்பும், கணத்துக்கொரு லீலையுமாகப்‌ பொழுது போய்க்கொண்டிருந்தது. நாள்கள் ஓடின.
ஒரு நாள் தெய்வக் குழந்தை குப்புறித்துக்கொண்டது.
அந்நன்னாளில் ரோஹிணி நட்சத்திரமும் சேர்ந்து வநதது.

நந்த பாலன் பிறந்ததிலிருந்து, கோகுலத்தில் ஒவ்வொரு நாளுமே திருநாள்தான். அப்படியிருக்க இந்நாளை விடுவார்களா?

அரண்மனை விழாக்கோலம் பூண்டது. காலை முதல் செல்வோரும் வருவோருமாக இருக்க, அனைவரையும் உபசரித்து, குழந்தைக்கு வாழ்த்துக்கள் பெற்று, தானங்கள் கொடுத்து, உணவு படைத்து, அப்பப்பா! யசோதையும் நந்தனும் மாற்றி மாற்றி தாங்களே‌ முன் நின்று எல்லாவற்றையும் செய்தனர்.

குழந்தைக்கு மங்கல திரவியங்கள்‌ சேர்த்து எண்ணெய்க் குளியல் செய்வித்து, நன்கு அலங்கரித்து தொட்டிலில் விட்டிருந்தாள் யசோதை.
எல்லோரும் மாற்றி மாற்றி‌வீட்டினுள் குழுமிக்கொண்டே இருந்ததால், காற்றாட தோட்டத்திற்குக் குழந்தையைக் கொண்டு போனாள்‌ யசோதை.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியின் அடியில் புடைவையால் ஒரு தூளி கட்டி, குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு சேடியை இருத்திவிட்டு உள்ளே போனாள்.

சிறிது நேரம் உறங்கிய குழந்தை, பசி வந்ததால்‌ அழத் துவங்கியது. சேடி குழந்தையை எடுப்பதற்குள் தன் பிஞ்சுக் காலால் வண்டியின் சக்கரத்தை ஒரு உதை விட, வண்டிச் சக்கரம் இடி போன்ற பெரிய சத்தத்துடன் தூள் தூளாய் நொறுங்கியது.

சத்தம் கேட்டு கை கொட்டிச் சிரித்தான் குழந்தை. சேடியோ பயந்து போய் மயங்கி விழுந்தாள்.
அனைவரும் தோட்டத்திற்கு ஓடி வர, அம்மாவைப் பார்த்ததும் பால் நினைவு வந்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழத்துவங்கியது அந்த ஆயர் குலச் செல்வம்.

வண்டிக்கடியிலிருந்த குழந்தையை வாரி எடுத்தான் நந்தன். தோளில் தட்டி சமாதானம் செய்து, யசோதையிடம்‌ கொடுக்க, அவளோ மிகவும் பயந்துபோயிருந்தாள். அத்தனை ஆயர்களின் முகங்களும் வெளிறிக் கிடந்தன.

எவ்வாறு நடந்தது என்று , அங்கே சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த இடைச் சிறுவர்களை விசாரித்தார் நந்தன்.

அவர்களோ, இவன் அழுதுகொண்டே வண்டியை உதைத்தான். வண்டி உடைந்துவிட்டது என்றனர்.
குழந்தையின் பிஞ்சுக் காலால் உதைத்தால் வண்டி நொறுங்குமா..
ஆச்சரியம் தாங்கவில்லை. நம்பவும் முடியவில்லை. கோபர்களும் நந்தனும், சிறுவர்கள் அறியாமையால் ஏதோ சொல்கிறார்கள் என்று நினைத்து அலட்சியம் செய்தனர்.

ஏனெனில் அவர்கள் பகவானின் மகிமையை அறிய இயலாமல் மாயையால் கட்டி வைத்திருந்தான் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment