Saturday, December 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 180 நரக வர்ணனை - 2

இருபத்தெட்டு நரகங்களைப் பற்றியும் மிகமிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் வியாஸர்.

அந்தணர்கள், மற்றும் சிலருக்கு நாய், கழுதை ஆகியவற்றை வளர்க்கவோ, விலங்குகளை வேட்டையாடவோ அனுமதி இல்லை. 
வரம்பை மீறிச் செயல்படுவனை 
பிராணரோதம்
விசஸனம் ஆகிய நரகங்களில் தள்ளி பலவிதமாகத் துன்புறுத்துகிறார்கள்.

லாலபக்ஷம்

மனைவியிடம் காமவயப்பட்டு
முறையற்றுத் துன்புறுத்துபவனை தண்டிக்கும் இடம்‌ இது. 

ஸாரமேயாதனம்

இம்மையில் களவு செய்பவர்கள், தீ வைப்பவர்கள், விஷத்தைக் கலந்து கிராமங்களையோ, மக்கள் கூட்டத்தையோ அழிப்பவனை இவ்விடத்தில் கூர்மையான பற்களுடைய எழுநூற்றிருபது நாய்கள் கடிக்கும்.

அவீசி

பொய் சாட்சி சொல்பவன், வியாபாரம் மற்றும் தானத்தில் பொய் சொல்பவனை இந்நரகத்தில் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளுகிறார்கள். இங்கு தரை தண்ணீர்போலிருப்பினும் பாறை போல் கேட்டியாக இருக்கும். 

விழுபவனின் உடல் எள்ளுப்பொடிபோல் சிதறினாலும் உயிர் போகாது. மீண்டும் அவனைச் சேர்த்து உச்சிலிருந்து தள்ளுவார்கள்.

அயப்பானம்

அந்தணனோ, அவன் மனைவியோ, விரதமிருப்பவனோ தவறுதலாகவேனும்கூடக் கள்ளைக் குடிப்பானாகில், இந்நரகத்தில் தள்ளப்பட்டு அவனை நெஞ்சில் மிதித்துக் காய்ச்சிய இரும்பை வாயில் ஊற்றுவார்கள்.

க்ஷாரகர்தமம்

எவனொருவன் தன்னை மிக உயர்வாக எண்ணிக்கொண்டு மற்றவர்களை அவமதிப்பானோ அவனை இந்நரகத்தில் தலைகீழாகத் தள்ளிவிடுவார்கள்.

ரக்ஷோகணபோஜனம்

பைரவர், யக்ஷர், ராக்ஷஸர் முதலியவர்களை நரபலியிட்டு வழிபட்டு நரமாமிசம் உண்பவர்கள் இந்நரகத்தில் வீழ்வர். பலியிடப்பட்டவர்கள் ராக்ஷஸர்களாகி அவர்களை கசாப்புக் கடைக்காரன்போல் துண்டுதுண்டாக வெட்டி உதிரத்தைக் குடிக்கின்றனர்.

சூலப்ரோதம்

எவனொருவன் ப்ராணிகளை தன் வயப்படுத்தி பின் அவற்றை குத்தி, கயிற்றினால் கட்டி துன்புறுத்துகிறானோ அவனை இங்கு சூலத்தால் குத்துகிறார்கள். அந்த விலங்குகளும் அந்நேரத்தில் அவனைத் தாக்கும்.

தந்தசூகம்

பாம்பைப்போல் கொடிய இயல்பு கொண்டவனை இந்நரகத்தில் ஐந்து /ஏழு தலை கொண்ட நாகங்கள் விழுங்குகின்றன.

அவடநிரோதனம்

மற்ற ஜீவராசிகளை இருண்ட கிடங்கில் போட்டு துன்புறுத்துபவனை இங்கு இருண்ட குகையில் தள்ளி விஷப்புகையால் வாட்டுவார்கள்.

பர்யாவர்தனம்

எவன் வீட்டுக்கு வந்த விருந்தினரை எரிப்பவன்போல் பார்க்கிறானோ அவனது கண்களை இவ்விடத்தில் கழுகு, வான்கோழி முதலியவை தோண்டி எடுக்கின்றன.

சூசீமுகம்
பணம் இருக்கும் செருக்கினால் பிறரை ஏளனமாகப் பார்ப்பவன், பணத்தை செலவழிக்காமல் பூதம்போல் காப்பவன், பணத்தை சம்பாதிக்க துணிந்து பாவம் செய்பவன் ஆகியோர் இந்நரகத்தில் தள்ளப்படுவர். இங்கு யமதூதர்கள்  அவனது அங்கங்களை நெசவாளிபோல் நூலைவிட்டுப் பின்னுவார்கள்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷித், இவ்வகையான நரகங்ககள் யமலோகத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளன. பாவம் செய்வர்கள் அனைவரும் வரிசை வரிசையாக இங்குதான் வருகின்றனர். தங்கள் பாவ கர்மாக்களின் தண்டனை முடிந்தபின், புண்யகர்மாக்களுக்கான பலனை ஸ்வர்கத்தில் அனுபவித்து விட்டு, மீண்டும் இப்பூவுலகில் பிறக்கிறார்கள்.

அறநெறி, மறநெறி, துறவறம் ஆகியவை பற்றி முன்பே விளக்கினேன். 
புராணங்களில் பதினான்கு வகையாகத் தொகுக்கப்பட்ட ப்ரும்மாண்டகோசத்தின் தொகுதி இவ்வளவுதான். இது பகவானின் ஸ்தூல ரூபமேயாகும். யார் இதை ஈடுபாட்டுடன்  கேட்கிறார்களோ அவரது மனம் தூய்மைப்பட்டு பக்தி உண்டாகிறது. பின்னர் மற்ற உபாயங்களால் பகவானின் ஸூக்ஷ்ம ரூபத்தையும் அறிகிறார். 

பரீக்ஷித்! பூமி, அதன் தீவுகள், வர்ஷங்கள், நதிகள், மலைகள், ஆகாயம், ஸமுத்ரம், திசைகள், நரகங்கள், ஒளி மண்டலம், மற்றும் உலகங்களின் அமைப்பு ஆகியவையே பகவானின் ஸ்தூல ரூபம். இவையே அனைத்து ஜீவராசிகளும் குடியிருக்கும் கோவில்.

ஐந்தாவது ஸ்கந்தம் முற்றிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment