Friday, December 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 183 அஜாமிளன் - 1

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
இறைவனது நாமத்தை இறக்கும் தருவாயில் சொல்பவனின் அனைத்து பாவங்களும் பொசுங்குகின்றன. அவனுக்கு அக்கணமே சித்த சுத்தி ஏற்படுகிறது.

கான்யகுப்ஜம் எனும் நாட்டில் அஜாமிளன் என்றொரு அந்தணன் இருந்தான். அவன் வேதங்கள் கற்று, நல்வழியில் ஒழுகிவந்தான்.

ஒருநாள் காட்டிற்கு ஸமித் (வேள்விக்கான அரசமரக் குச்சி), தர்பை இவற்றை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றான்.

வெகுநேரம் அலைந்ததில் தாகம்‌மேலிட்டது. அப்போது ஒரு மரத்தடியில் யாரோ வேடன் விட்டுச் சென்ற கள்குடுவை இருந்தது.

தாகத்திற்கு நீர் கிடைக்காததால்
அவசரத்திற்கு பரவாயில்லை என்று அந்தக் குடுவையிலிருந்த கள்ளைக் குடித்துவிட்டான்.

புத்தி தடுமாறி அலையத் துவங்கினான். அப்போது, ஒரு மரத்தடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் காணத்தகாத காட்சியைக் கண்டான்.

ஏற்கனவே குடித்த கள்ளினால் தடுமாறிய புத்தியில் இப்போது காமவிகாரம் ஏற்பட, தன்னிலை மறந்தான். அந்த வேடன் சென்றதும், அப்பெண்ணோடு உறவு கொண்டான்.

உத்தமகுலத்தில் பிறந்து, பலதர்ம நெறிகளைக் கடைப்பிடித்தும், கணநேரத் தடுமாற்றம் அவனது வாழ்வைத் திருப்பிப் போட்டது.

அவனது ஒழுங்கீனத்தால் வேள்வி செய்வதற்கான தகுதிகளை இழந்தான். மறுபடி அவன் கிராமத்தில் வாழ இயலாமல் போ‌னது. எனவே, காட்டிற்கு வந்து ஏற்கனவே கண்ட பெண்ணுடன் வாழத் துவங்கினான்.

நிறைய குழந்தைகள் பிறந்தன.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக வழிப்பறி, கொள்ளை, கொலை ஆகியவற்றில் ஈடுபட்டான் அஜாமிளன்.

காலம்‌ உருண்டோடியது. அவனது மக்கள் வளர்ந்தனர். பத்தாவதாகப் பிறந்த தன் கடைசிக் குழந்தைக்கு பூர்வ வாஸனையால் நாராயணன் என்று பெயரிட்டான்.

அப்பெயரிட்டதாலோ என்னவோ அஜாமிளனுக்குத் தன் கடைசி மகன் மீது அளவற்ற பாசம் உண்டாயிற்று.

என்ன செய்தாலும் நாராயணா நாராயணா என்று மகனை அழைத்த வண்ணமே இருந்தான்.

அஜாமிளனுக்கு அந்திம காலம் வந்தது. 3 யமதூதர்கள் மிகவும் கோரமான உருவத்துடன் வந்து அவன் கழுத்தில் பாசக் கயிற்றைப் போட்டனர்.

உடலின் அத்தனை மர்மஸ்தானங்களிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி ஏற்பட தன் சக்தி முழுவதையும் திரட்டி, தூரத்தில் விளையாடிக்கொண்டிருத மகனைப் பார்த்து நாராயணா என்று அலறினான்.

நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுவனோ, காதில் வாங்காமல் விளையாட்டைத் தொடர்ந்தான். இன்னொரு சிறுவன், அப்பா கூப்பிடறார்டா.. என, இவனோ,
அவருக்கு வயசாயிடுச்சுடா.. அப்படித்தான் கூப்பிட்டுட்டே இருப்பாரு. கண்டுக்காதே என்று மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டான்.

வைகுண்டத்திலிருந்த பகவானுக்கு அஜாமிளனின் குரல் கேட்டது. உடனே அவர் நான்கு பார்ஷதர்களை விமானத்தோடு அனுப்பினார்.

அவர்கள் வந்ததும் யமதூதர்கள் செய்வதறியாது திகைத்தனர். யமதூதர்களும், விஷ்ணு பார்ஷதர்களும் இதுவரை சந்தித்ததே இல்லை. எனவே, விவாதம்‌ செய்யத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment